”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வெற்றி வீரன் ஒண்டிப் பகடை



ஒண்டிவீரன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென்மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளையைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.

இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என்ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத்தைவிட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டிவீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். இறுதி வரை கும்பினிகளுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்த மண்ணின் வீரிய விதையாய் மாறிபோனான் ஒண்டிபகடை..

வீரன் அழகுமுத்துக்கோன்.

வரலாறு சில அதிசயங்கள் நிகழ்த்துவதுண்டு. துரோகத்திற்கு அடையாளமாக இன்றும் எட்டப்பனை கூறுகிறோம். ஆனால் கட்டபொம்மனின் பாட்டனார் பொல்லாப்பாண்டி பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக நடந்து கொண்டார். கப்பம் கட்டினார். அவருக்கு நேர் எதிராக எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர். இந்த பாளையங்கள் எப்போதும் நேர்ரெதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளன.

1759ல் எட்டயபுரம் பாளையம் வெள்ளை பரங்கியனுக்கு ஆதரவாக இல்லாமல் முறைத்தபோது

அன்றைய திருநெல்வேலி மாவட்டமே சின்னாபின்னப் படுத்தப்பட்டதாக கால்டுவெல் எழுதுகிறார். திருநெல்வேலி கெஜட் டியாரிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டயபுரம் ஜெகவீரராம எட்டப்பர் என்ற பாளையக்காரருக்காக தளபதியாக பொறுப்பேற்று வீரசமர் புரிந்தவன் அழகுமுத்து. 1757ல் இப்போரில் கும்பினிகளின் வெற்றியை தொடர்ந்து ஜெகவீரராம எட்டபரும், அழகுமுத்துவும் பெருநாழி காட்டில் தலை மறைவாகச் சென்றனர்.

தாய் ண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்து நேருக்கு நேர் சந்திக்க பயந்தது கும்பினியப்படை அதனால் கான்சாகிப் மூலம் அழகுமுத்துவை சந்திக்க நினைத்தது.இதற்கிடையில் பெருநாழி காட்டில் இருந்தே படை திரட்டி 1959ல் கான்சாகிப்போடு அழகுமுத்து போர் நடத்தி தோல்வியை சந்தித்தான்.

அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம் என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்தும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்க

மாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற வீரன் அழகுமுத்து கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.

ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.

வரலாற்றில் முகம் மறைக்கப்பட்ட வீரர்களில் அழகுமுத்துவும் ஒருவர். அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய பெருமை கம்யூனிஸ்ட்களின் தாமரை இலக்கிய ஏடே ஆகும். 1995ல் சென்னையில் அழகு முத்துவுக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.