”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சூறாவளியாய் நாங்கள்



சூறாவளியாய் நாங்கள்
         
நீண்ட பயணம்
நெடிய பயணம்
காடு மலைகளை கடந்த பயணம்
நின்ற விசிறியும்
சுழன்று போக
சூறாவளியாய் நடந்த பயணம்


வாழ்க்கையை செய்தியாக்கிய மகாத்மாவும்
எனது முழக்கமே எதிர்காலம் முழங்குமென்ற பகத்சிங்ம்
கற்பை பொதுவில் வைக்க சொன்ன பாரதியும்
பயணித்த பயணத்தின் நிகழ்காலம்
நாங்கள்..

இயற்கையின் தேவையில்
உதித்தது..
ஊருக்கு உரக்கச் சொல்ல
உண்மையின் பிரதிநிதிகளாய்
நாங்கள்...

காற்றை கிழித்த பறவையின்
வலிமை,..
வலியை தாண்டி காற்றில் மிதந்தது
எங்கள் கால்கள்..



நீரையிழந்த வயல்களில்
காய்ந்த பயிர்களில் உழவனின் கண்ணீர்
வறண்ட குளங்களை நிரப்பிடும்...
இரத்தம் கசிந்த இதயங்களை
கண்டோம்..
இரத்தம் இழந்தவர்களின்
இரத்தமாய் இருப்போம்

உலகை ஏறுபோல் நடத்திய
உழவனின் இதயங்களை படித்தோம்..
மனங்களோடு பேசினோம்,..
கண்ணில் கண்ட கண்ணீரால்
கால்களில் வலி தளர்ந்தது
நடை வேகமெடுத்தது..
வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரை
எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனால்
வாடாமல் வளரவைக்கும் வித்தை
தெரிந்தவர்கள்
அதற்கான
திட்டமும், கோசமும், கொள்கையும்
எங்களிடமுண்டு..

நல்லதை விதையுங்கள்
அறுவடை நன்றாய் வரும்
வேறு யாரையும் அறுக்க,..
விட்டுவிடாதீர்கள்..
ஒருபோதும்..


நம்மை ஏமாற்றியவர்கள்
ஏமாறுவார்கள்
கொள்கையின் பின்னால்
நாம் அணிதிரளும்போது..




முன்னேறு,,
படைநடத்து
சுட்டெரிக்கும் சூரியனிடம்
கொட்டி தீர்க்கும் மழையிடம்
மக்களை காப்பாற்ற
குடையாவோம்..
நாங்கள் கிழிந்தே போனாலும்,,.
கிழியும் வரை
காத்திடுவோம்,,..
எம் மக்களை..

தினவெடுத்த எங்கள் தோள்கள்
எதையும் தாங்கும் வல்லமையடைந்தது..
உழைக்கும் வர்க்கமே,,
உறங்கிட நேரமில்லை,,
கால்கண்ட வலிகள் எல்லாம் சாலையோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள்
மக்களுடே பயணித்த போது..












கூப்பிய கைகளும்,
கண்கள் நிறைத்த கண்ணீரும்
மாற்றம் வராத ஏக்கமும்..
இறப்பை தேடும் முதியவர்களும்,
எதிர்காலத்தை தேடும் சிறுவர்களும்
ஏங்கிய ஏக்கத்திற்கு
திசைகாட்டியாய் இருக்கிறோம்
நாங்கள் ..
நம்பிக்கை விதைகளாய்,,.

இப்பொழுதெல்லாம்
எங்களுக்கு
கல்விச்சாலைகள்
சோலைகளாய் பிடிக்கிறது..
மணியடித்தால் ஒட பிடிக்கவில்லை..
இருட்டி போன
வீடுகளில்
கொசுக்களின் ராகங்களைவிட
பள்ளிகள் மேலானதாகிவிட்டது..
மின்ஒய்வால்
மின்விசிறி சுழலமறுக்க..
வீடுகளில் கேட்கும்
முகாரி ராகம் பாடும் வித்வானாக
கொசுக்கள் !




போராடி  போர்த்தினாலும்
கடித்து கேட்க சொன்னது..
கேட்டும், கேட்காமலும் விதைத்து சென்றது
மர்மக் காய்ச்சல்களை
ஆம்

ஆய்வு செய்த மருத்துவனுக்கு
பெயர் பற்றாகுறை
எதுவந்தாலும் இருக்கட்டும்
மர்மக் காய்ச்சலென்று...


இரவை கிழிக்கும்
மின்மினியாய்
மின்னலாய் வந்து செல்லும்
மின்சாரம்
எப்போது வரும்?  போகும் ?

ஜனனமும், மரணமும்
ஒருமுறைதான்,..
எனது வேலை வாழ்வது
சும்மா உயிரோடு இருப்பதல்ல என்றான் ஒருவன்
வாழ்வது எனக்காக அல்ல,,
என் சமூகத்திற்காக
எம் தேசத்திற்காக
எங்கள் மக்களுக்காக

பூனை துங்கிய அடுப்படியில்
உலை கொதிக்காதா?
பெற்ற பிள்ளை
நல்ல சோறு திங்காதா?
உழைத்த காசு வீடு திரும்பாதா?
குடி கெடுக்கும் குடியை
ஒழிப்பது எப்போது ?
மாதா, பிதா, குரு
சொன்னார்கள் - படி
அரசு சொன்னது
குடி !

கருவைதாங்கிய மகளிருக்கு
மருத்துவரிட்ட ஆலோசனை
உடனே ரெடி பண்ணு
இரத்த பாட்டில்கள்
மரணகுழிகளாய் சாலைகள்
ரெடி பண்ணு
இரத்த பாட்டில்கள்.




இப்பொழுதெல்லாம்
சாலைக்குழிகளை நிரப்ப
கற்களையிடுவதில்லை
மனித இரத்தங்களைதான்
தருகிறார்கள்.,,
குருதி டவ;ந்த
கொடையாளர்களாய்
இருக்கிறோம் நாங்கள்..,

என்ன விளையாட ?
தந்தையிடம் வினவிய தனயன்,..
சொல்லித்தர நினைவிலில்லை
பாரம்பரிய விளையாட்டுகள்
பதிலுரைத்த தந்தை
நீயே தெரிந்து விளையாடென்று..
என்ன விளையாட?..

ஆயிரமாயிரம் சமூகத்தின் கேள்விகள்,,.
இதோ நாங்கள் இருக்கிறோம்
பதில்களோடு..
மாற்றுத் திட்டத்தோடு..
நாங்கள் வருகிறோம்..


பஞ்ச பூதங்களான
இயற்கையை
களவாடியவர்கள்,..
நம் வாழ்வையும்
களவாடுவார்கள்
விழித்தெழு
போராடு, முன்னேறு
படைநடத்து
நாளைய விடியல்
நமக்கானதாய் மாறிட..
மாற்றம் காண
நாங்கள் வருகிறோம்,,

சரித்திரத்தின் பக்கங்கள்,
எழுதிச் சென்றது..
வரலாறு உங்களை
விடுதலை செய்யும்..
மக்களுக்கான
உங்கள் பயணம்
அதிகாரத்தை கேள்வி கேட்கும்..


இதுவரை
சரித்திரத்தை ஆண்டவர்கள்தான்
எழுதினார்கள்..
உட்கார்ந்து சாப்பிட்டவன் எழுதியதற்கும்
உழைப்பவன் எழுதுவதற்கும்
உண்டு வித்தியாசம்...
நாங்கள் உழைக்கும் மக்களின்
பிரதிநிதிகள்
புதிய சரித்திரத்தை
எழுதுகிறோம்..

மாற்றம் ஒன்றுதான் மாறாதது
எங்கள் முப்பாட்டன் மார்க்சின்
வார்த்தைகளோடு
எழுத்துக்களை ஆயுதமாக்கி
எழுதுகிறோம்..
இளைஞர்கள் நாங்கள்
மக்களுக்கான வரலாற்றை..
உழைப்பவனுக்கான
வரலாற்றை
எழுதுகிறோம்
நாங்கள்..






மக்களுக்காக
பறிக்க பறிக்க
பூத்துக் கொண்டே
இருப்போம்.
செம்மலர்கள்
நாங்கள்..
- அரவிந்தன்