”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வெற்றி வீரன் ஒண்டிப் பகடை



ஒண்டிவீரன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென்மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளையைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.

இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என்ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத்தைவிட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டிவீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். இறுதி வரை கும்பினிகளுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்த மண்ணின் வீரிய விதையாய் மாறிபோனான் ஒண்டிபகடை..

வீரன் அழகுமுத்துக்கோன்.

வரலாறு சில அதிசயங்கள் நிகழ்த்துவதுண்டு. துரோகத்திற்கு அடையாளமாக இன்றும் எட்டப்பனை கூறுகிறோம். ஆனால் கட்டபொம்மனின் பாட்டனார் பொல்லாப்பாண்டி பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக நடந்து கொண்டார். கப்பம் கட்டினார். அவருக்கு நேர் எதிராக எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர். இந்த பாளையங்கள் எப்போதும் நேர்ரெதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளன.

1759ல் எட்டயபுரம் பாளையம் வெள்ளை பரங்கியனுக்கு ஆதரவாக இல்லாமல் முறைத்தபோது

அன்றைய திருநெல்வேலி மாவட்டமே சின்னாபின்னப் படுத்தப்பட்டதாக கால்டுவெல் எழுதுகிறார். திருநெல்வேலி கெஜட் டியாரிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டயபுரம் ஜெகவீரராம எட்டப்பர் என்ற பாளையக்காரருக்காக தளபதியாக பொறுப்பேற்று வீரசமர் புரிந்தவன் அழகுமுத்து. 1757ல் இப்போரில் கும்பினிகளின் வெற்றியை தொடர்ந்து ஜெகவீரராம எட்டபரும், அழகுமுத்துவும் பெருநாழி காட்டில் தலை மறைவாகச் சென்றனர்.

தாய் ண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்து நேருக்கு நேர் சந்திக்க பயந்தது கும்பினியப்படை அதனால் கான்சாகிப் மூலம் அழகுமுத்துவை சந்திக்க நினைத்தது.இதற்கிடையில் பெருநாழி காட்டில் இருந்தே படை திரட்டி 1959ல் கான்சாகிப்போடு அழகுமுத்து போர் நடத்தி தோல்வியை சந்தித்தான்.

அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம் என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்தும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்க

மாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற வீரன் அழகுமுத்து கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.

ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.

வரலாற்றில் முகம் மறைக்கப்பட்ட வீரர்களில் அழகுமுத்துவும் ஒருவர். அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய பெருமை கம்யூனிஸ்ட்களின் தாமரை இலக்கிய ஏடே ஆகும். 1995ல் சென்னையில் அழகு முத்துவுக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.

வீரன் பூலித்தேவன்.


காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது. சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின் அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 633 ஆண்டுகள் ஆகின்றன. வழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர் சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிற வழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால் காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்கு நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர் ஆவார். 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்ப பூலித்தேவன். 2015 ம் ஆண்டு வந்தால் 300 பிறந்து ஆண்டுகளாகிறது.

நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767 இல் கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன் இருந்தவர்கள் துரோகத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப் பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று வந்த கும்பினிப்படை அதிகாரி டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்துகிடக்கிறது வாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டாலும் கழனிகள் செழித்துக் கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்களும், செந்நெல் வயல்களும், வாழைத்தோப்பு களும் குவிந்து இருக்கின்ற வளம் நிறைந்த இந்தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்று சொன்னான். அப்படிப்பட்ட பகுதி தான் நெற்கட்டுஞ்சேவல். இது சிவந்த நிலம். வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது. நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை

கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில் வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.

வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக்குள்ளே நிலவறைகளைப்போல வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. சுண்ணாம்பும், பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த பீரங்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாத மிகச்சிறந்த கோட்டை.

1755 ஆம் ஆண்டு பரங்கிப்படையின் கர்னல் ஹீரான், ஆர்க்காடு நவாப்பின் துணையோடும், மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு வீழ்ந்ததன் காரணத்தை அறியவும், மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் நினைத்தார். களக்காடு கோட்டையை கைப்பற்றுவது மட்டுமல்ல, கும்பினிபடைக்கு எதிராகவும், ஆற்காடு நவாபிற்கு எதிராகவும் எப்போதும் வெற்றி பெறும் வகையில் முதன் முதலாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குகினார்.

வெள்ளையர்களை எதிரியாக கொண்டு கூட்டமைப்பை உருவாக்க நினைத்த பூலித் தேவர், அதுவரை தனக்கு எதிரியாக இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரை நண்பராக்கி கொண்டு உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர், கொல்ல கொண்டான், தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை, சுரண்டை, ஊர்க்காடு, ஊத்துமலை என பல சிற்றரசுகளை சேர்த்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார்.

ஆறடி உயரமும், இரும்புபோன்ற தேகமும், ஒளிவீசும் கண்களும், பகைவருக்கு அஞ்சாத உள்ளமும், நட்புக்குத் தலை வணங்குகின்ற பண்புமும், அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதியும், குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மகத்தான மாவீரனாக பூலித்தேவன் இருந்தார். பூலித்தேவர் நடந்தால் உடன் வரும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

காந்தசக்தி கொண்ட அவரது ஆளுமை காரணமாக ஆர்க்காடு நவாப்பின் படையில் வந்த தளபதிகளில் மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூவரும் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து பூலித்தேவருக்காக வீரப்போர் புரிந்தார்கள்.

1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார் மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் முடேமியா என்கின்ற இஸ்லாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து, ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்த போரில் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து உன் ஆவி பிரிகிற வேளையில் உன்மேனியில் இருந்து இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து நவாப் படையில் வளர்ந்து, தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன்.

மைசூர் புலி ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த மருதநாயகம் என்கிற கம்மந்தான் கான்சாகிப் தெற்கே நவாபிற்காக படை நடத்தி வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் பெயர் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிகொள்ள முடியவில்லை என்று பிரிட்டிஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி, பாளையங் கோட்டை, மதுரை, திருவனந்தபுரம் மன்னன் அஞ்செங்கோவின் படை என பல முனைகளில் இருந்து அனுப்ப படைகள் வாசுதேவநல்லூரை நோக்கி வந்தது.

1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று வந்த கான்சாகிப், 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடந்தது. ஹைதர் அலியையேத் தோற்கடித்த சூராதி சூரனான கான்சாகிப், பூலித்தேவனை எளிதில் வெற்றி கொள்வான் என்று கும்பினியர்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான். பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான்.

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார்.கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மே மாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.

வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி இரண்டாவது போரில் பிரதான தளபதி. அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்றுவந்தான் வெண்ணிக் காலாடி. அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப்பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளேதள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக்கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான். சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவன் முன் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இஸ்லாமிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார். அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம்பெல்லாம் இரத்தம் பாய்கிறது. ஓற்றர் படைத்தலைவன் ஒண்டிப்பகடையும் பூலித்தேவனுக்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க தனது உயிரை அர்ப்பணம் செய்தான். இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர்.

இதற்கிடையில் கும்பினி படைக்கு எதிராக மாறி வீரமுடன் போராடிய மருதநாயகத்தை 1964ல் பிரிட்டிஷார் தூக்கிலிட்டனர்.

1767 ஆம் ஆண்டுகும்பினிப்படையின் டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்து வாசுதேவ நல்லூர் கோட்டையை தாக்கினான். இந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் தனது டைரிக்குறிப்பில் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. எங்கள் பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை ஆனால் கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் மட்டும் விழுந்தன.

ஆனால், பூலித்தேவரின் மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன. குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும். வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று தனது குறிப்பில் எழுதிவைத்துள்ளான்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர் கால்டு வெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரத்தில் பூலித்தேவனைப் பற்றி இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன். அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார் என்று எழுதுகிறார்.

இந்தப் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் சிவனை நினைத்துப் பாடிய பாடல் என்று இன்றும் பாடப்படுகிறது.

''பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே

புகலக் கேண்மின்

தீங்குபுரி மூவாலிச வினையே சிக்கி

உழறும் அடியேன் தன்னை

ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி

எனைக்காக்க ஒருவருண்டோ

ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே

இறைவனே போற்றி போற்றி''

சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்திய விடுதலைப் போரில் வீரன் பூலித் தேவனின் வீரமிகு பாத்திரம் வீண் போகவில்லை. மண்ணில் போட்ட விதையாய் பல வடிவங்களில் தென்னிந்தியாவில் முளைக்க ஆரம்பித்தது.

ஆதாரங்கள் :

1. திருநெல்வேலி சரித்திரம் - கால்டுவெல்

2. விடுதலை தழும்புகள் - சுபொஅகத்தியலிங்கம்

3. திரு. வைகோ அவர்கள் பேசிய உரையிலிருந்து..