”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

போராடித்தான் வளர்ந்தது திருப்பூரும், தொழிலாளி வர்க்கமும்

 




திருப்பூர் மாவட்டம் வரலாற்றின் பக்கங்களை நிறைத்த பகுதி என்றால் அது மிகையல்ல. தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் நிறைந்த பகுதி. மாவட்டத் தில் ஒவ்வொரு நகரத்தின் வளர்ச்சியில்  தொழிலாளிகளின் உழைப்பும்  உதிரமும் உறைந்து கிடக்கிறது. இந்த மண்ணின் மேம்பாட்டிற்கும், வளத்திற்கும் தங்களது குதிரத்தை அர்ப்பணம் செய்தவர்கள் ஏராளமானோர். அவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்களே.,

”மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு, அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதே நமது கடமையாகும்” சுதந்திரப்போராட்டம்,  சமூகசீர்திருத்தஇயக்கம்,  தொழிலாளிவர்க்க போராட்டம் மூன்றும் இணைந்த போராட்டங்களின் களமே திருப்பூர் ஆகும். அப்படிப்பட்ட திருப்பூரின் வரலாற்றை சற்று திரும்பி பார்க்கும் போது ஒன்று பட்ட கோவை மாவட்டத்தில் இருந்தே துவங்குகிறது.

சமூகத்தின் வளரும் சக்திகளில் பிரதானமான சக்தி தொழிலாளி வர்க்கமாகும். கோவையின் பிரதான உற்பத்தி என்பது 1857க்கு முன்பு உணவு தானிய உற்பத்தியே., அதற்கு பின்பு பருத்தி உற்பத்தியாகும். நூல் உற்பத்தியின் மூலப் பொருளான தரமான பருத்தியை அன்று பிரிட்டிஸ் கம்பெனி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து வந்தது.  இதனை வேகமாக முன்னெடுத்து செல்ல புகைவண்டி இருப்புப்பாதை சென்னையில் இருந்து மேட்டுபாளையத்திற்கு 1873ல்  அமைக் கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஸ்டேன்ஸ் மில் என்று அழைக்கப்பட்ட கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு விவிங் மில் 1888ல் துவங்கப்பட்டது.  நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை கொடுக்க அரவைமில்களும் படிப்படியாக துவங்கப்பட்டன. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் சுமார் 30 மில்கள் வரை துவக்கப்பட்டன.  இதில்1937 வரை 10 மணி நேர வேலை என்பது கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. 

இதற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காகவும் விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது. இதன் பின்னணியில் “கோயமுத்தூர் மில் தொழிலாளர்கள் சங்கம்” உருவானது. இதனை தொடர்ந்து இளைஞர் அமைப்பும் உருவாகத் தொடங்கியது.

இந்த சூழலில் இந்திய சுதந்திரப் போராட்ட களத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுக்களின் செயல்பாடுகள் அதிக தாக்கத்தை  உருவாக்கிய வண்ணம் இருந்தது. கோவையிலும், திருப்பூரிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் 1940களில் உருவா னது. திருப்பூரில் தோழர்கள் ஆர்.கே.கண்ணன், சி.குப்புசாமி, சைமன்பால் கொண்ட கிளையாக உருவானது. உடுமலையில் ஆர்.ரத்தினம், பழனிசாமி, நாச்சிமுத்து, எஸ்.ராமசாமி ஆகியோரை கொண்ட கிளையும் அதே காலத்தில் உருவானது.

தொடர்ச்சியாக தொழிலாளர்கள் உரிமை, கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கூலி பிரச்சனைகள் முன்னெடுத்த தருணத்தில் உலகளாவில் பாசித்ததை எதிர்த்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காகவும் போராட வேண்டிய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.

திருப்பூரில்  1932ல்  தனலட்சுமி மில் தொடங்கப்பட்ட பின் எஸ்ஆர்சி மில், ஆஷர் மில் துவங்கப்பட்டு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் கோவை, மதுரை உள்ளிட்டு வெளிபகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அத்தருணத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மேஸ்திரிகளால் மிரட்டப்பட்டனர். கடிகாரத்தின் முள்ளை திருப்பி வைத்தனர். குறிப்பாக பெண் தொழிலாளிகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளானர்கள்.

இந்த கொடுமைக்கு எதிராக கோவை மில்தொழிலாளர் சங்கத்தில் இருந்து தோழர் பி.ராமசாமி அனுப்பி வைக்கப்பட்டு திருப்பூர் பகுதியில் மில் தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  1940 ல் திருப்பூர் மில் தொழிலாளர் சங்கம், நகர சுகாதார தொழிலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டன. 1942ல் 25 % யுத்தகால அலவன்ஸ் வேண்டி 39 நாட்கள் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 12.5%  யுத்த அலவன்ஸ் பெற்று தந்தது. மில் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது பாதிக்கப் பட்டவர்களுக்கு பொதுமக்களிடம் நிதி வசூலித்து நிவாரணம் வழங்கப்பட்டது.  100 பேர் சிறை சென்றதும், 200 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டனர். பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் சோர்ந்து வீடுகளில் அமர்ந்துவிடாமல் கலாஸ், ரைஸ்மில், பருத்தி அரவை தொழிலாளியாக சென்று வேலை செய்து கொண்டே சங்கம் குறித்த விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் கட்ட பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1942ல் சாக்கு தொழிலாளர் சங்கம், கலாஸ் சங்கம், ரைஸ்மில் தொழிலாளர் சங்கம், பருத்தி அரவை மில் (ஜின்னிங் பேக்டரி) சங்கம்,  மக்கள் தொழிலாளர்கள் சங்கம், மளிகை தொழிலாளர், ஜவுளித் தொழிலாளர், சோப்பு தொழிலாளர், தையல் தொழிலாளர், நெசவுத்தறி தொழிலாளர் என பல்வேறு பிரிவினருக்கான சங்கங்கள் உருவானது.  கூலி உயர்வும், வேலை நேரமும் அடிப்படை பிரச்சனையானது. தையலில் கோட்டா மூலம் நூல்  கிடைக்க ஏற்பாடும், நெசவாளர்களுக்கும் பெரும் முயற்சிக்கு இடையே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வெளிச்சத்தில் தனலட்சுமி மில் தொழிலாளியும், ஊழியருமான சின்னசாமி அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது அவரது மனைவியும், தொழிலாளியுமான வள்ளியம்மாள் காவல்துறை அதிகாரியை சுட தடுத்ததால் நீதிமன்ற விசாரணையில் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மதுரை சிறையில் 1946ல் அடைக்கப்பட்டு இருந்த போது தோழர் கே.பி.ஜானகி அம்மாள் அவரை சந்தித்து எழுதப்படிக்க கற்றுக் கொடுத்து விடுதலைஅடைந்து வெளியே வரும் போது கம்யூனிஸ்டாக வெளியே வந்தார். இது போன்று ஆண்களுக்கு இளைப்பில்லை பெண்கள் என்று கும்மி கொட்டு என சொன்ன பாரதியின் வாரிசுகளால் ஏராளமான மில் பெண் தொழிலாளிகள் போராட்ட களத்தில் சிறைத்தண்டனை பெற்ற வரலாறு திருப்பூரின் வரலாறு.

மில்களில் செங்கொடியின் செல்வாக்கை பொறுக்கமுடியாத ஆளும் வர்க்கமும், முதலாளிகளும் செய்த சதியால் 1950 ஏப்ரல் 20 ஆஷர் மில்லில் 25 வயதே நிரம்பிய தோழர் பழனிசாமி காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த காலகட்டத்தில் தான் கம்யூனிஸ்ட்கள் மீதான நரவேட்டையை அன்றைய ஆளும் வர்க்கம் நடத்தியது.

1952ல் கோவை தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் கே.எஸ்.கருப்பசாமி டெக்ஸ்டூல் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட பின்னணியில் தொழிற்சங்க பணிக்காக திருப்பூரில் வந்து 1953 முதல் 57 வரை அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கம், சாயப்பட்டறை தொழிலாளர்கள் சங்கம், அச்சுப்பட்டறை சங்கம், பருத்தி பொறுக்கும் தொழிலாளர்கள் சங்கம் போன்றவை துவங்கப்பட்டது.

1968ல் பனியன் தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்ட பின்னணியில் 1969ல் 8 நாட்களும், 72ல் 40 நாட்களும், 74ல் 60 நாட்களும், 1984ல் 127 நாட்கள் என சம்பள உயர்வுக்கும், பஞ்சப்படிக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்கள் தான் திருப்பூரின் தொழிலாளி வர்க்கத்தின் முகத் தோற்றத்தை மாற்றி அமைத்தது மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் முன்பு ஒரு பகுதி முதலாளிகளின் கருங்காலித்தனம் எடுபடாது என்பதை உணர்த்தியது.

கலையும், இலக்கியமும் மக்களுக்கே என்ற லெனினின் வார்த்தைகளை பஞ்சப்படி என்ற நாடகமும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை உரமேற்றி மக்களிடம் வளர்தெடுத்தது.

எந்த முதலாளிகளை எதிர்த்து போராடியதோ தொழிலாளிவர்க்கம் அதுதான் தொழிலுக்கு நெருக்கடி என்றவுடன் 1995ல் முதலில் களத்தில் சிஐடியு இறங்கியது. பனியன் தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்தி தொழிலை பாதித்த பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடைசெய் என்று ஒங்கி ஒலித்தது. இன்று வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் நலனை முன்னிறுத்தி சமரசமில்லாமல் போராடும் அதே தருணத்தில் இன்று சாய கழிவு நீர் பிரச்சனை துவங்கி ட்ராபேக், சிபார்ம், நூல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, திட்டமிடாத கொரோனா ஊரடங்கு என மக்களை மட்டுமல்லாது தொழில் நிறுவனங்களை பாதித்த போது முதலில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

1970லிருந்து  தொடர்ந்து கூலி உயர்வுக்கான போராட்டம் தொழிலாளி வர்க்கம் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் விவசாய சங்கமும், விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் போராட்டங் களை நடத்தி வந்தது.  பொள்ளாச்சியில் 1978ல் தோழர் கோபாலும், திருப்பூரில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டத்தின் போது முதலாளிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக இளம் தோழன் சீராணம்பாளையம் பழனிச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார். 1981ல் உடுமலை வெள்ளியம்பாளையம் பகுதியில் விவசாய, விவசாய தொழிலாளர்கள், வாலிபர்களை திரட்டி கிராமப்புற ஆதிக்கத்திற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காக போராடிய தோழர் ஈஸ்வரன் கொல்லப்பட்டார்.  1998ல் தோழர் பன்னீர் செல்வம் ஜீனா கார்மென்ண்டஸ் நிறுவனத்தில் சங்கம் வைக்க முயற்சித்தார் என்ற காரணத்திற்காக வெட்டிக் கொல்லப்பட்டார்.  2002ல் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தோழர் கே.ரத்தினசாமி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும், கம்யூனிஸ்டாக இருந்த காரணத்திற்காக என 8 காரணங்களை சொல்லி குத்தி கொன்று, தூக்கிலிட்டு கொன்றனர் கம்யூனிச இயக்கத்தின் விரோதிகள்.

இந்த தியாகிகளின் செய்தி சொல்வது ஒன்றுதான் மக்களின் அறியாமை விடியலுக்கு எதிராக உள்ள எதிரிகளை சரியாக இனம் கண்டு அவர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதோ இப்போதும் போராடிக் கொண்டு இருக்கிறோம். பெண்கள், பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் போதும், போதைக்கு எதிராகவும், கந்துவட்டிக்குஎதிராகவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், மதவெறிக் எதிராகவும், அரசின் தவறான கொள்கைக்கு எதிராகவும் களத்தில் நின்று போராடி பாதுகாத்து வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் அமைப்புகளும்., அதன் திருப்பூர் மாவட்ட 23 மாநாடு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்தும், திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மாற்று திட்டங்களை முன்வைத்து டிசம்பர் 19, 20 தேதிகளில் நடைபெறுகிறது.

 

தகவல்கள் உதவி தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய கோவை மாவட்ட கம்யூனிச இயக்க வரலாறு, 

 

 

 

புனிதம் என்பது வார்த்தைகளில்லை செயல்களில்


 

என் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில்தான் எனது செயல்கள் மேம்படும். அதுவே எனது கட்சி கொடுத்த பணி,. இது தான் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் பால பாடம்.

 அன்று பிளேக்கிற்கு எதிராக

    1943ல் பிளேக் நோய் தாக்குதல் கோவையில் அதிகரித்தது. மக்கள் கொத்து கொத்தாக பலியானார்கள். எனவே தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வும், பாதுகாப்பு குறித்தும் மருத்துவ ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நெருக்கடியில் சற்று தாமதிக்காமல் கம்யூனிஸ்ட்டுகளும், தொழிற்சங்க அமைப்பும் அனைத்து மில்களிலும் களத்தில் இறங்கியது.  

    பிளேக் நோயால் இறந்வர்களின்  உடல்களை  இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதற்காக கால்களில் மண்ணெண்ணெய் யை  பூசிக் கொண்டு செனஜன் கியாஸ் வீடு விடாக அடித்து சென்றனர். இதில் தோழர். சி.ஏ.பாலன் பாதிக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பின் மருத்துவர் களால் காப்பாற்றப்பட்டார். இந்த நேரத்தில் காலராநோயும் சேர்ந்து பரவ ஆரம்பித்தது.

    சென்னையில் இருந்து தோழர்கள் ஆர்.உமாநாத், எஸ்.கிருஷ்ணன், கே.ரமணி, சி.ஏ.பாலன், பி.ராமசாமி உள்ளிட்டோர் வீடு விடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரமும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் பொதுமக்களிடம் வசூல் செய்து வழங்க வழிகாட்டி வழங்கினார்கள். மேலும் பணஉதவி, வைத்திய உதவி வழங்கியதோடு அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி னார்கள். உயிரை பணயம் வைத்து சேவை பணியாற்றினார்கள்.

 உணவுக்கும், உடைக்கும்

    1944ல் தமிழகத்தில் உணவு, உடை இரண்டிற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சத்தை நோக்கி சென்ற போது பதுக்கல்காரர்களுக்கும், கள்ள சந்தை பேர்வழிகளுக்கும் எதிராக செங்கொடி இயக்கம் தமிழகம் முழுவதும் களத்தில் நின்று போராடியது. அப்போது மக்கள் உணவு தானிய மண்டிகள் மற்றும் கடைகள் முன்பு காலை முதல் இரவு வரை காத்திருந்த தருணத்தில்  மக்களை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் உணவும், உடையும் கிடைக்க வழிசெய்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்கள்.

    இந்த பின்னணியில் திருப்பூரில் கலாஸ், ஜவுளி, கைவண்டி, மளிகை, தானிய மண்டிகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராடியதோடு  தங்கள் குழந்தைகளை கொண்டு பாலர் சங்கத்தை உருவாக்கி னார்கள். சிறுவர்கள் இயல்பிலேயே அறச்சீற்றத்தோடு இருப்பவர்கள். எனவே துணியும், தானியமும் கடத்தப்படாமல்  இருப்பதை கண்காணித்து சொன்னார்கள். இதன் தொடர்ச்சியாக  தமிழகத்தில் முதன் முதலாக நியாய விலைகடை அமைக்கப் பட்டது. அத்தோடு அல்லாமல்  ஜின்னிங் போன்ற இடங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு கால் மூட்டை உணவு தானியம்  கூலியோடு சேர்த்து பெறும் உரிமையை வட்ட ஆட்சியர் மூலம் பெற்றுத் தரப்பட்டது.

 சேவையில்

    திருப்பூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கீரணி ஆபிஸ் எதிர்புறம் அவிநாசி, பிஎன் ரோடு சாலை ஆக்கிரமிப்பில் இருந்த போது அதனை அப்புறப்படுத்தி சாலை கிடைக்க செய்ததும், இன்றைய பேப்ரிகேசன் சாலை முள்ளும், புதருமாக சாக்கடை கழிவுகளோடு இருந்த இடத்தை தூய்மைப்படுத்தி சாலை அமைத்த இயக்கம்.

 வாழ்வின் அடிப்படை தேவைக்கு

    திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போது 1997, 2003, 2010ம் ஆண்டுகளில் தொடர்ந்து ரேசன் கார்டு கேட்டு பல்லாயிரக் கணக்கில் மக்களை திரட்டி போராடி லட்சத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் கிடைக்க காரணமாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சியும், வாலிபர் இயக்கமாகும்.

    குடிநீர், பஸ்கட்டண உயர்வு, சாலைகள் பராமரிப்பு, கழிப்பறை, சாக்கடை, தெருவிளக்கு, மருத்துவம், வீட்டுமனை பட்டா என வாழ்வின் அடிப்படை பிரச்சனைகளுக்கு எல்லா காலத்திலும் தொடர்ந்து போராடி வரும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

 

சேவையே புதிய பண்பாடாய்

2005ம் ஆண்டு திருப்பூரின் பாழ்பட்டு இருந்த அரசு தலைமை மருத்துவமனைகளில் 1100க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்டு உழைப்புதானம் மூலம் தூய்மைப்பணி செய்து இரண்டு வாரத்தில் திருப்பூரே பாராட்டும் வகையில் புது பொழிவுடன் மாற்றியது மட்டுமல்ல தொடர்ச்சியாக திருப்பூரின் பல்வேறு சுடுகாடுகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்களை தூய்மைப்பணி மூலம் பொழிவுற வைத்தது. 

கடந்த 34 ஆண்டுகளாக இரத்ததான கழகம் மூலம் ரத்ததானம், மருத்துவமுகாம், உழைப்பு தானம் என சுனாமி முதல் மழைவெள்ளம், கொரோனா வரை உயிரை பணயம் வைத்து  சேவைப்பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் அமைப்பாகும்.

·          

இன்று கொரோனா ஒழிப்பு யுத்தத்தில்

·         நேரடியாக நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு 50க்கும் மேற்பட்ட உதவி மைய ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட வாங்கி விநியோகம் சலிப்பில்லாமல் பொறுமையாக தோழர்கள், நிதானத்தோடு பணியாற்றினார்கள்.

·                 அவிநாசி அரசு கல்லூரி கொரோன சிகிச்சை மையத்தினை அமைத்தது, நோயாளிகள் பராமரிப்பில் நிர்வாகத்தோடு இணைந்து இந்திய மாணவர் சங்கத்தினர் 8 பேர் 24 மணி நேரமும் பாராட்டத்தக்க பணியாற்றினார்கள்

·         வாலிபர் அமைப்பின் இரத்ததான கழகத்தின் மூலம் சில அமைப்புகள் மற்றும் நண்பர்கள் உதவியோடு 270 லிட்டர் குளிர்சாதனப்பெட்டி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கிக்கும், பல்லடத்தில் உள்ள அரசு சிகிச்சை மையத்திற்கு கோவிட் உதவி மையம் மூலம் 165 லிட்டர் குளிர்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. மேலும் தணிக்கையாளர் அமைப்பு மற்றும் இதர நண்பர்கள் உதவியோடு ஆக்சிஜன் அவசர தேவைக்கு 20 சிலிண்டர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. தற்போது தனியாகவும் இரண்டு சிலிண்டர்கள் வைத்து அவசரதேவைக்கு உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

·         நோயாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி அரசு மருத்துவமனை,  வேலம்பாளையம் சிகிச்சை மையம், ஆம்புலன்சிற்கு என 9 வழங்கப்பட்டது. இறந்த கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்கான பாதுகாக்கப்பட்ட 50 பைகளை சவக்கிடங்கிற்கு வாங்கி அளிக்கப்பட்டது.

·         மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து 4 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளி களை கொரோனா தடுப்பு மையம், அரசு மருத்துவமனைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

·         அன்னவாசல் திட்டம் மூலம் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 10 முதல் 26 நாட்கள் வரை சுமார் 2600 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து தினசரி வழங்கப்பட்டது.

·         திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைப் பகுதிகளில் ஒரு மாத காலமாக கபசூர குடிநீர், மூலிகை தேநீர், துண்டறிக்கை விநியோகம் என ஒவ்வொரு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா நோய் தொற்று சூழலின் அபாய நிலையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிவித்து, போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்தோம்.

இக்காலத்தில் மாநில முதல்வர் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மண்டல சுகாதாரதுறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், நகர் நல அதிகாரி  மற்றும் துறை சார்ந்த கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரின் கவனத்திற்கு  தேவையான கோரிக்கைகளை மனுக்களாகவும், நேரடியாகவும் தொடர்ந்து 25க்கும் முறைக்கு மேல் கொண்டு சென்று  உடனுக்குடன் தலையீடு செய்ய வைத்துள்ளோம். 

·                குறிப்பாக தனியார் மருத்துவமனை கட்டண கொள்ளைக்கு எதிராக உடனடி தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது.

·                     10 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் வேலை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும் என முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.

 கொரோனா நோயாளிகளுக்கு உரிய உணவு வழங்கப்படுவதில்லை என அதிமுக ஆட்சியின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து மே மாத இறுதியில் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தரமான உணவு நோயாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் அதை கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கை அளிக்க தனி மருத்துவர்களை பொறுப்பாக வேண்டும் என  உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

பொது மக்களுக்கு அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயை எதிர் கொள்வதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்க மனநல ஆலோசனை வழங்குவது என பன்முகமான ஆலோசனைகள் கோரிக்கைகளாக அரசு நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்டுகளுக்கே உண்டான உளசுத்தியோடு.,

எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை, நாம் வெல்லுவோம்!

 ‘இளைஞர்களுக்கு வேலை கொடு’ எனக் கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் 3000 கி.மீ சைக்கிள் பயணம் கோவை, சென்னை, பாண்டிச்சேரி, குமரி ஆகிய மையங்களில் இருந்து ஏப்ரல் 21 அன்று துவங்கி நடத்தி வருகிறார்கள். மே 1 திருச்சியில் சங்கமிக்கி றார்கள்.

 ‘அறிவை அகண்டமாக்கு, விசாலப்பார்வை யால் விழுங்கு மக்களை, மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற பாவேந்தரின் கனவு களோடு, வாளின் பதத்தோடு, வறுமையின் கோபத்தோடு, பசித்த வயிற்றின் எரிகனலோடு வாலிப சேனை வருகிறது.  

 நீட், கியூட், மத்திய பல்கலைக்கழகம் செல்ல நுழைவுத் தேர்வு என புதிய கல்விக் கொள்கையின் பெயரால் கொள்ளையடிக்கும் கோச்சிங் மையங்களை, நிறுவனங்களை உரு வாக்கிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. புதிய சூழலில் மிகப் பெரும் வர்த்தகமாக உரு வெடுத்து வருகிறது கோச்சிங் துறை. இந்தியாவில் ஏறத்தாழ 70000 கோடி ரூபாய் கோச்சிங் துறையில் புரள்கிறது.

 NEET, JEE, CUET, GMAT, GRE, IELTS மற்றும் TOEFL  போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு ஆண்டுக்கு 25 லட்சம் பேர் நுழைவு தேர்வு மையங்களை தேடி வரு கிறார்கள். இவற்றிற்காக பல ஆயிரம் கோடி செலவழிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பமும் தனது மாத வருமானத்தில் 12 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை செலவு செய்வதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. இதற்காக மாதம் ரூ. 5000 வரை குறைந்தபட்சம் செலவு செய்யப்படுகிறது. தற்போது பேக்கேஜ் அடிப்படையில் 1.25 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் அதிகாரவர்க்க கருவிகளை உருவாக்க பயிற்சி மையங்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய பொது தேர்வாணையம் நடத்தும் பல்வேறு விதமான துறை சார்ந்த தேர்வுகளுக்கு பயிற்சி மையம் என்பது புற்றீசல் போல் முளைத்துக் கொண்டே இருக்கிறது.  இத்தனை மையங்கள் துவங்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்று வந்தாலும், இன்றைய வேலை வாய்ப்புச் சந்தை அதற்கு தகுந்தாற் போல் இல்லை. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறு வனங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கே இங்கு வேலைவாய்ப்பு உள்ளது. 

ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 30 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை நூறு லட்சங்களை கடந்து செல்லும்.  45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை யின்மையின் அளவு அதிகரித்துள்ளது.  ஒன்றிய அரசுப் பணிகளில் மட்டும்  சுமார் 8.75 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே, பாதுகாப்பு, தபால், இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்டு இன்று அரசு நிறுவனங்களே தேவைக் கேற்ப நிரந்தர ஊழியர்களை தேர்வு செய்வ தற்கு பதில் ஒப்பந்தமுறையில் தேர்வு செய்வது  என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு சாதகமாக இந்தியாவின் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு, சிலவற்றை ஒழித்துக் கட்டி 4  சட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. 

இதன் விளைவாக குறைந்தபட்சம் ஊதியமான ரூ. 21000 என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இன்று வெறும் ரூ.7ஆயிரம் முதல் ரூ.12000 வரை ஊதியம் பெறுபவர்களாக, அதிலும் பல பிடித்தங்களுக்குப் பின் கையில் சொற்ப தொகையே பெறுபவர்களாக மாறி யுள்ளனர்.

கௌரவமான வேலை, வருமானமுள்ள வேலை, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, சமூக தேவைக்கான உற்பத்தியோடு சம்பந்தப் பட்ட வேலை என்பதற்கு மாறாக உண்மையில்  உண்மையான ஊதியத்தை குறைத்த வேலை என்பதே இன்று பொதுத்துறைகளில் கூட பொருத்தப்படுகிறது.  

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, தொடர்ச்சி யாக காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டிய பொதுத்துறை நிறுவனங்கள் பல பத்தாண்டுகளாக நிரப்பாமல்  ஏமாற்றி வருவதை எந்த நீதிமன்றமும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆற்றில் அடித்துச் செல்லும் ஒருவன் கிடைக்கும் சிறு குச்சியை பிடித்துக் கொண்டு உயிர் பிழைக்க முயற்சி செய்வதைப் போல் வேலைகளுக்கு எப்படியாவது சேர வேண்டும் என்று சேர்ந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக சேர்ந்தவர்கள் என்று கூறி, அவர்கள் பல பத்தாண்டு பணியாற்றியிருந்தாலும் ஒரே உத்தர வில் வேலையை விட்டு அனுப்பும் நிலை நீடிக்கிறது. 

குறைந்தபட்சம், தொழிலாளர் நலச் சட்டங்கள் சொல்லும் 240 நாட்கள் பணி யாற்றியவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற சட்ட அடிப்படைகளைக் கூட மீறுவதா கவே அரசு மற்றும் பொதுத்துறையின் பல்வேறு பிரிவுகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இதில் நடைபெறும் அத்து மீறல்களை தடுத்து நிறுத்த நீதிமன்றங்கள் முயலுவதில்லை. இது குறித்த வழக்குகளில் பெரும் பகுதி பாதிக்கப் பட்டவர்களே மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 1990 களில் இந்திய ரயில்வேகளில் சுமார் 16.5 லட்சம் பேர் நிரந்த ரத் தன்மையும், சுமார் 4 லட்சம் பேர் தற்காலி கத் தொழிலாளர்களாகவும் இருந்த நிலையில் தற்போது ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கிறது ஒன்றிய அரசு. அதற்காக 4 லட்சம்  தற்காலிக பணியிடங்களை ஒழித்துக் கட்டியும், 4 லட்சம் நிரந்தர தொழிலாளர்களை குறைத்து அத்துக்கூலிகளாகவும்,  அவுட்சோர்சிங்காகவும் மாற்றியுள்ளது. இவர்கள் மிக கொடூரமான முறையில் சுரண்டப்படுகின்றனர்.  பல மாதங் கள் ஊதியம் வழங்காமல் அதில் கமிசன் பெற்று சொற்ப ஊதியம் வழங்கும் ஒப்பந்த கம்பெனிகள் என நிலைமை கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.  

பெரும் பகுதி மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனைகளில்  காவலர், மருத்துவ கடைநிலை பணியாளர்கள், துப்புரவுப் பணி ாளர்கள் உள்ளிட்டோர் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்தக் கம்பெனிகளால் அமர்த்தப்படு கின்றனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை யில் இன்று அந்தப் பணியிடங்கள் சுருங்கி வருகின்றன. பெரும் பகுதி அரசு மருத்துவமனை களில் நோயாளிகள் தூய்மையற்ற நிலையில் மிகவும் அவதியுறும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.   

இன்றும் கிராமப்புறங்களில் தற்கொலைச் சாவுகளையும், பட்டினிச் சாவுகளையும், இடப் பெயர்வுகளையும் தடுத்து நிறுத்தியதில் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்திற்கு பங்குண்டு. இவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தியும் கேள்விக்குள்ளாக்கியும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலின் கோரிக்கைகளோடு இளைய இந்தியாவின் பிரதிநிதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள். 

அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தோடு இயற்கையை மாசுபடுத்தாமல், தங்களது கால்களின் பலத்தோடு இரு சக்கரங்கள் சுழல நகர்ந்து வருகிறார்கள். அடிக்கும் வெயிலையும், காற்றின் வேகத்தையும் பறவையின் லாவகத்தோடு கிழித்துக் கொண்டு முன்னேறி வருகிறார்கள்.  

ஒற்றைக் கலாச்சாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் கார்ப்பரேட் நல - பாசிச ஒன்றிய பாஜக அரசின்  திட்டங்களை முறியடிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பன்மைத் துவ கலாச்சாரத்தின் பின்புலத்தோடு இளை ஞர் பட்டாளம் நம்மைச் சந்திக்க வருகிறார்கள். அவர்களை வரவேற்போம், பாராட்டுவோம்!  எம் நெஞ்சமெல்லாம் முழு நம்பிக்கை, நாம் வெல்லுவோம்!

செ.முத்துக்கண்ணன் டிஒய்எப்ஐ முன்னர்ள் மாநிலத்தலைவர்