”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
கம்யூனிஸ்டாய் இருப்பது காலத்தின் தேவை’ - செ.முத்துக்கண்ணன் தீக்கதிர் நாளிதழ் மார்ச் 12, 2023 ‘‘நீங்கள் எந்த பக்கத்தில்... இரு வேறு உலகங்கள், இரு வேறு நீதிகள்; வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம், கசப்பும் தண்ணீரும் கலந்தொழுகும் இன்னொருபுறம்’’ - மாக்சிம் கார்க்கி வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகளின் எதிரிகள் “எங்களுக்கு வாக்களிக்கவில்லை, உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறோம்; எங்களை வெற்றி பெற வைக்கவில்லை, உங்கள் வருமானத்தைத் தடுத்திட உங்கள் இரப்பர் தோட்டங்களை எரிக்கிறோம். இதையும் தாண்டி உங்கள் சித்தாந்தம் காப்பாற்றும் என்றால் அதன் அடையாளமான உங்கள் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கு கிறோம்..!” ஆம், 2023 மார்ச் 2 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கடந்த முறை பெற்ற அதே அளவு வெற்றியைப் பெற முடிய வில்லை என்ற வெறித் தனத்தின் உச்சம். கடந்த 5 ஆண்டுகளாக திரிபுரா முழுவதும் கம்யூனிஸ்டு களை அழித்து விடுவோம் என்று கொக்கரித்து கடும் தாக்குதலை நடத்தி 25 கட்சி தோழர்களை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கான தோழர் களுக்கு கொடுங்காயம் ஏற்படுத்தி, வீடுகளை நொறுக்கி, வாழ்வாதாரத்தின் மீது அரசு எந்திரத்தின் உதவியோடு தாக்குதல் நடத்திய பின்பும், அங்கு கம்யூனிஸ்டுகள் மீண்டெழுகிறார்கள் என்ற ஆத்திரமே, இப்போது கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறது. பாஜக குண்டர்கள், மார்ச் 2க்கு பின்னால் கடும் தாக்குதலில் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது பாஜக விற்கு எதிராக கருத்து சொன்ன, வாக்களித்த, போராடிய அனைவரையும் கூட தாக்கி வருகிறார்கள். விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது நேற்று இன்று அல்ல, ஆளும் வர்க்கத்தை யும், முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்பை யும் எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் பிறந்தது முதலே இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இயந்திர இரைச்சலை மீறிய உரிமை முழக்கம் திருப்பூரில் 1978ல் விலைவாசி உயர்வுக்கேற்ப தங்களது குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்; பண்டிகை விடுமுறை சம்பளம், இன்னபிற சட்ட சலுகைகளை கேட்டு சங்க வித்தியாசமின்றி ஒன்றுபட்ட போராட்டத்தை பனியன் அண்டு பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலை மையில் 40 நாட்கள் நடத்தி போராடி வெற்றிபெற்றது. இதன் வெளிச்சத்தில் மங்கலம் பகுதியில் விசைத்தறிப் போராட்டம் சிஐடியு தலைமையில் போராடியது. இதில் அப்பகுதி கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணி திரண்டனர். குறிப்பாக பட்டியலின வகுப்பை சார்ந்த வர்கள் படிப்படியாக ஈர்க்கப்பட்டு போராட்டக் களத்தை நோக்கி வந்தனர். எம்ஜிஆரின் அபிமானி களாக அதிமுக வாக்கு வங்கியாக இருந்தது அன்று வர்க்கமாகத் திரண்டு செங்கொடித் தொழிற்சங்கத்தின் பின்னால் அணிவகுத்தது கடும் அதிருப்தியை அதிமுக விக்கு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கடும் ஆயுதங்களைக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான முன்னணி தோழர்களையும், வீடுகளையும் தாக்கினார்கள். இதில் 14 முன்னணி தோழர்களின் வீடுகள் கடும் தாக்குதலுக்குள்ளாகின. அன்று இந்தச் சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளி வர்க்க தோழர்கள் கண்டனம் முழங்கி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது, எச்சரித்தது. இருந்தும் ஆளும் வர்க்கத்தின் ஆத்திரமும், சுரண்டல் வேட்கையும், ஒரு சேர, இதன் தொடர்ச்சிதான் அன்புத் தோழர் சீராணம்பாளையம் பழனிசாமி எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட தோழர்களின் குடும்பங் களைப் பாதுகாக்க தொழிலாளி வர்க்கம் பொருளா தார உதவி செய்து வீடுகளை புனரமைத்தது. இந்த ஒற்றுமையும், வலுமிக்கப் போராட்டமும், வர்க்க உணர் வின் முன்பு முதலாளி வர்க்கம் பணிந்து வந்தது. வரலாற்றைக் கற்றறிதல் இந்த வரலாற்றை அறிந்து அதற்காக தன்னையும் இளமைக் காலம் தொட்டு அர்ப்பணித்துக் கொண்டு நற்பணியிலும், விளையாட்டிலும், எழுத்தறிவு புகட்டுவதிலும் இதர தோழர்களோடு இணைந்து தனக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்ட வர்தான் பாலரத்தினம் என அன்போடு அழைக்கப் பட்ட தோழர் இரத்தினசாமி. போராட்டத்தின் உறைவிட மாக இடுவாய் கிராமத்தை மாற்ற தோழர்களோடு ஒன்றுபட்டு போராடினார். கட்சியின் செல்வாக்கு நாள்தோறும் வளர்ந்து வந்த சூழலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1996ல் அனைத்து அரசியல் இயக்கங்களும், ஆதிக்க மும் ஒன்று சேர்ந்து ஒரே அணியாக நின்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இடுவாய், செட்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், முதலிபாளையம் பகுதிகளில் தனித்து நின்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றது. அப்போது இடுவாயில் ஊராட்சிமன்ற தலைவராக தோழர் கே.ரத்தினசாமியும் தேர்வு செய்யப்பட்டார். “கற்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக் கிறது, எனவே கற்றுக்கொள், சாதியின் தொடர் சங்கிலி அறு; பார்ப்பனீய வேதங்களைத் தூக்கி எறி; கல்வி பெற்றால் சாதியையும், வேதங்களையும் தூக்கி எறியும் அறிவும் வந்து விடும்” என்றார் சாவித்திரிபாய் பூலே. இதனைச் செயல்படுத்தும் விதமாக இடுவா யில் குமரன் நூலகத்தை துவங்கி “மனித சிந்தனை களை தளையிட்டு கட்டிய விலங்குகளை எல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காக எவர் ஒருவர் தன் வாழ்க்கையெல்லாம் பாடுபடுகிறாரோ அவரே மனிதர்” என நூலகத்தின் சார்பில் உதயம் இதழில் ஆசிரியர்குழு தலையங்கத்தில் எழுதினார்கள். அதன்படி நடந்தவர் இரத்தினசாமி. ஒரு கம்யூனிஸ்டுக்கு உண்டான எளிமையோடு, உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக, முன்வரிசை களப்பணியாளனாக, மக்களின் சேவக னாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டாய் இருந்தது... விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது; ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து பாரதிபுரம் என்ற ஊரை உரு வாக்கியது; பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கை யை உறுதி செய்தது; தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் வழிபாட்டு உரிமை யை பாதுகாத்தது; பாழ்பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புனரமைத்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது... - இப்படி கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமி யின் பணியும் ஓங்கி வளர்வதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஏப்ரலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டு இருந்த தோழர் இரத்தினசாமியை கத்தியால் குத்தி, வாயில் விஷத்தை ஊற்றி காட்டில் வீசிச் சென்றனர். உயிருக்கு போராடிய அவர் மருத்துவ சிகிச்சைக்குபின் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக்கள் செல்வாக்கின் காரணமாக இரண்டாம் முறையும் ஒரு சேர எதிர்த்து நின்ற தரப்பினரை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12 இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து, கொன்றதற்கான 8 காரணங்களை ஒரு அட்டையில் எழுதி அருகிலிருந்த மரத்தல் கட்டித் தொங்க வைத்துச் சென்றார்கள். அதில், “நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கிலியர் களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது” என்பது உள்ளிட்டு 8 காரணங்களை எழுதி வைத்தனர். அவர்கள் சொன்ன காரணங்கள் கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். மக்களுக்கு பணியாற்றுவது; கடைசி சொட்டு குருதி உள்ளவரை போராடுவது; தேவையென்றால் தியாகம் செய்வது. “வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால் எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது’’ - என்ற காரல் மார்க்சின் வார்த்தையை அர்த்தப்படுத்தி யவர் தோழர் இரத்தினசாமி. மக்களிடம் அந்த மகத்தான பணியை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் விளைவு தான் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட்கள் 1008 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோழர் கே.கணேசனை வெற்றிபெறச் செய்து, கம்யூனிஸ்டு களின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டியெழுப்பினார்கள். உண்மையை உரக்கச் சொல்வது இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்களும், நிரந்தரமற்ற வேலையும் அதிகரித்து வருகிறது. அணி திரட்டப்பட்ட தொழில்களிலேயே ஒப்பந்தமுறை, தினக்கூலி என தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண்டல்களும் அதிகரித்து வருகின்றன. முறைசார தொழிலாளிகளின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்க தடையாக, தொழி லாளிவர்க்கத்தின் மத்தியில் போலி தேசபக்தியும், மதவெறி சக்திகளின் தவறான பிரச்சாரங்களும், பொய் செய்திகளும், வதந்திகளும் கிளப்பி விடப்படு வதையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை யில் பாஜக இரட்டை வேடம் போடுவதையும் திருப்பூரில் பார்த்து வருகிறோம். அதே போல் சமூக ஒடுக்குமுறையும் திட்டமிட்டு மனு (அ)தர்மத்தின் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. உழைப்புச் சுரண்டலையும், பாலின சுரண்டலையும் வருணத்தின் பெயரில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கெதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் செங்கொடி இயக்கம் வலுவாக முன்னெடுத்து வருகிறது. ஏப்ரல் 5ல் கிராமப்புற தொழிலாளிகள், விவசாயிகள், நகர்ப்புறத் தொழிலாளிகள் பெற்ற உரிமைகளை பாதுகாக்க தலைநகர் தில்லியில் அணிவகுக்க உள்ளார்கள். தொழிலாளி வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க தோழர் கே.ரத்தினசாமியைப் போன்று திரிபுராவின் தற்போதைய 3 தியாகிகள் போன்று நாடு முழுவதும் உள்ள தியாகிகளின் குருதி உரமாகட்டும். இவர்களது நினைவை நெஞ்சில் ஏந்தி களப் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்! கட்டுரையாளர் : சிபிஐ(எம்), திருப்பூர் மாவட்டச் செயலாளர்