கெட்ட போரிடும் உலகை சாய்த்திடுவோம்!
- செ.முத்துக்கண்ணன்
உலகமே ஒரு குடையின் கீழ் சுருங்கிவிட்டது. ஏகாதிபத்திய நிதிமூலதனம் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டே வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் அதை மேலும் சுருங்க வைத்துள்ளன. ஏகாதிபத்தியங்கள் தங்களின் நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள, வர்த்தக-பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் நிர்பந்தம் செய்து கொள்ளையடித்துவருகின்றன. மறுக்கும் நாடுகளின் மீது யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பொய் பிரச்சாரங்கள், வதந்திகள், அவதூறுகளைக் கட்டமைத்துத் தங்களது ஊடக மேலாதிக்கம் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர்.தற்காலத்தில் ஆற்றல் சக்திகளை உற்பத்தி செய்யும் அரிதானதனிம வளங்களைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், தங்குதடையற்ற எரிசக்தி வளங்களுக்கும், சிப்-செமிகண்டக்டர் உற்பத்திக்காகவும், உலகின் சந்தைகளைத் தனதாக்கிக்கொள்ளவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் பகுதியாகவே இரண்டாம் உலகப் போருக்குப் பின் வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், இராக், வெனிசுலா ஜனாதிபதி நாடுகடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்தியுள்ளது. சோசலிச கியூபாவின் மீது பொருளாதார யுத்தத்தை 67 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.சாமானிய மக்களின் வாழ்வினை அழித்துச் சில ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் நடத்திவரும் போர்களும் கொள்ளையடிப்பு திட்டங்களுமே மக்களின் பேரழிவுக்கு காரணமாக அமைகின்றன.
1945 ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோசிமாவிலும், ஆகஸ்ட் 9 நாகசாகியிலும் அமெரிக்க அணுகுண்டின் பேரழிவுநிகழ்த்தப்பட்டு 81 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரும் அதே தருணத்தில், இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் விளைவுகளை நாம் அறிய வேண்டியுள்ளது. நிதி மூலதன மேலாதிக்கம், ஊடக மேலாதிக்கம், அரசியல் மேலாதிக்கம், பண்பாட்டு மேலாதிக்கம் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அது எத்தகைய கொடூரமான வழிகளையும் கையாண்டு வருகிறது.
அணுகுண்டின் அழிவை சந்தித்த ஜப்பான்
1945-ல், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோசிமா மீது ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்காவின் ‘எனோலாகே’ போர் விமானம் மூலம் “லிட்டில்பாய்” (Little Boy) என்ற யுரேனியம் அணுகுண்டு காலை 8:15 மணிக்கு வீசப்பட்டது. விநாடிப் பொழுதில் 70,000-க்கும்மேற்பட்ட மக்கள் சாம்பலாகிப் போனார்கள். மரண ஓலங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 9-ம் தேதி ‘பாக்ஸ்கார்’ விமானம் மூலம் “ஃபேட் மேன்” (Fat Man) என்ற புளுட்டோனியம் அணுகுண்டு நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 40,000 பேர் விநாடிப் பொழுதில் காற்றில் கரைந்தார்கள்.
இந்த அணுவெடிப்பின் வெப்பநிலை 4,000°C வரை உயர்ந்து, அங்கிருந்த கட்டடங்களையும் மனித உடல்களையும் கரியாக்கியது. அணுவெடிப்பின் கதிர்வீச்சுப் பாதிப்பு புற்றுநோய், மரபணு கோளாறுகள், பிறவி ஊனங்கள் என இன்று வரை தொடர்கிறது. இத்தகைய பேரழிவைக் கண்முன்னே கண்ட இந்த பூமியில், தற்போதும்யுத்தத்தின் பெயரால் ஏராளமான அழிவுகளை ஏகாதிபத்திய சக்திகளும் இனவெறி, மதவெறி சக்திகளும் நடத்திவருகின்றன.
இஸ்ரேல் - அமெரிக்கப் போர்வெறியும் உலக நெருக்கடியும்
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் - அமெரிக்க நாடுகளின் போர்வெறி காரணமாக ஏற்பட்ட போர், பூமிப் பந்தின் மீது கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் டாலர் வரை கூடுதலாகச் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் ஆண்டில் மட்டும் 493 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படும். ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்தது. உலக வங்கியின் கணிப்புப்படி, உலகளாவிய பணவீக்கம் உயர்ந்துள்ளதுடன், செங்கடல் வழியான வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் 300% உயர்ந்துள்ளது. 2030-க்குள் இந்த போர்கள் மொத்தம் 15 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும். இது உலக ஜிடிபியில் 8% ஆகும். உடனடி போர் நிறுத்தமும், சர்வதேச நிதி மறுசீரமைப்புமே உலகைக் காப்பாற்ற உதவும்.
பாலஸ்தீன - உக்ரைன் போர் இழப்புகள்
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்கட்டமைப்பு சேதம் 18.5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது; வேலையின்மை 80% ஆக உயர்ந்தது. இஸ்ரேல் பொருளாதாரம் ஜிடிபியில் 19.4%சரிந்தது. ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதி 50% குறைந்து, ஆண்டுக்கு 15–20 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நான்குஆண்டுகளைக் கடந்து செல்கிறது. உக்ரைனில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மறுகட்டுமானச் செலவு 558 பில்லியன் டாலர் ஆகும். உக்ரைனின் உள்கட்டமைப்பு 30% அழிந்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதுடன், 565-க்கும் மேற்பட்ட மேற்கத்திய நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன. இந்த அழிவுகள் ஐரோப்பிய நாடுகளை எரிசக்தி மற்றும் உணவு தானியப் பற்றாக்குறையில் ஆழ்த்தியுள்ளது. எரிசக்தி விலை உயர்வால் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல நூறு பில்லியன் டாலர்கள்கூடுதல் செலவாகின்றன.
வறுமையும் பசியுமா எதிர்காலம்?
உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் உணவு தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் 35-50% வரை உயர்ந்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தீவிர பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பசியால் வாடுபவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் மற்றும் வன்முறை பாதித்த பகுதிகளில் வாழ்கின்றனர். சக மனிதர்களைப் பட்டினியிலும் வறுமையிலும் வாழவைத்துவிட்டு, யுத்தங்களுக்காக இவ்வளவு பெரிய செலவுகளை செய்வது நியாயமா? உணவுப் பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படும் சூழலில் கார்ப்பரேட் ஆயுத வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்தப் போர்கள் நாடுகளின் வளர்ச்சியை பத்தாண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன. காசாவின் ஜிடிபி 60% குறைந்துள்ளது; குழந்தைகளின் கல்வியும் உளவியலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் போர் மேகங்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். 2030-க்குள்இளமையைத் தொலைத்த ஒரு “இழந்த தலைமுறை” உருவாகும் அபாயம் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு இதுவரை நடைபெற்ற போர்களில் சுமார் 3 கோடிப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஹிரோசிமாவும் நாகசாகியும் உலகின் பேரழிவின் அடையாளமாக நிற்கும் போது, மீண்டும் இன்றைய யுத்தங்கள் தேவையா? ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திடுவோம்!
இரத்தக் கறை படிந்த நிலத்தில் எந்த விதையும் முளைப்பதில்லை; எரிந்த பிணங்களின் சாம்பலில் எந்த எதிர்காலமும் உருவாவதில்லை. அமைதிப் புறாவின் சிறகுகளில் அன்பின் ஒளியைப் பரப்புவோம், போரற்ற உலகைப் படைப்பதற்கே பூமியில் விதைகளை விதைத்திடுவோம்!

No comments:
Post a Comment