”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.தங்கவேல் Ex.M.L.A., வாழ்வும் பணியும்

 


‘’சிலருடைய  வாழ்வும் பணியும் மற்றவர்களுக்கு  வழிகாட்டுபவையாக விளங்கும் போதிலும் அவர்களுடைய பணிகளை மற்றவர்கள் தொடர்ந்து செய்து வரும் போதும் அவர்களுக்கு மரணமில்லை’’ - அலெய்டா குவேரா கூறியது.  ஒவ்வொரு உண்மையான கம்யூனிஸ்ட் பணியும் இவ்வாறு தான்  துவங்குகிறது. 

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் பிறந்து வளர்ந்து  பள்ளியில் படிக்கும் போதே அப்பகுதியில் இருந்த மில் தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் பாரதி படிப்பகத்தில் நாளிதழ்கள் படிப்பதையும், ஒரங்க நாடகங்கள் நடிப்பதை பார்த்தும் ஆர்வம் கொண்ட தோழர் கே.டி, கைத்தறி துண்டு நெய்யும் தொழிலும் பின்னர் பனியன் கம்பெனியிலும் வேலைக்கு சென்றார்.

1971ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1974ல் முழுநேர ஊழியராகி, 1975ல் பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க செயலாள ராகவும் தேர்வு செய்யப்படுகிறார்.  1978களில் நடைபெற்ற விசைத்தறிப் போராட்டத்திற்கும், 1984ல் பனியன் பஞ்சப்படி போராட்டத்திற்கும் தலைமை யேற்று நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் கே.தங்கவேல். 

இன்றைய இந்திய சூழலில் வேலையின்மை, பட்டினி, வறுமை அதிகரிப்பின் காரணமாக வேலையை தேடி உழைப்பு சந்தையை நோக்கிய இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பூரின் பனியன் தொழிலில் ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வெளி மாநில, மாவட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வருகை என்பது அதிக எண்ணிக் கையில் அதிகரித்துள்ளது.

ஆனால் தொழிலாளர்களுக்கு உரிய நியாயமான சம்பளமோ, சட்ட சலுகைகளோ கிடைப்பதில்லை. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் போது வேலை வாய்ப்பு அதிகரிப்பும்,  நெருக்கடியின் போது வேலை இழப்பும்  தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களது குடும்பங்களையே கடுமையாக பாதிக்கிறது. இது இந்த கொரோனா காலத்தில் கடும் பாதிப்பை தொழிலாளர்களுக்கு உருவாக்கியுள்ளது. 

உலகமயச் சூழலில் தங்களுடைய வர்க்க நலனுக்காக இன்று இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் நெகிழ்வு தன்மையற்றவையாக உள்ளன என்று ஏற்றுமதியாளர் சங்கம் தலைவர் சொல்வது, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதால் மோசமான நிலைக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சென்று கொண்டு இருக்கிறது. இது குறித்து தோழர் கே.தங்கவேல் நீண்ட நாட்களுக்கு முன்பே  தெளிந்த பார்வையோடு தொழிலாளி வர்க்கத்தின் பணி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை கண்டுணர்ந்து சொன்னவர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில்  தொழிலாளர்களை பாதுகாப்பது என்பது அவர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை, தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு, போக்குவரத்து,  குழந்தைகளின் கல்வி, வாழ்வதார சூழல் ஆகியவற்றை உறுதி படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கான தீர்வை முன்னெடுக்க இன்றைய தொழிலாளர்களை விழிப்புணர்வு பெறச் செய்வது அவசியமாகிறது. இதனை நிதானமாகவும், பொறுமை உணர்வோடும் ஆழமான பார்வையோடு தெளிந்த சிந்தனையோடு அமைதியான வார்த்தைகளில் அழுத்தமாக சொல்லும் உறுதியான தலைவராக இருந்தவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள்.

கவிதை, கதை,  நாடாகம் உள்ளிட்ட இலக்கியத்தின் மீதும், வாசிப்பின் மீதும், வரலாற்றின் மீதும், அகழ்வாய்வின் மீதும்  ஆழ்ந்த நாட்டம் கொண்டவர். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எப்படி நேரநிர்வாகம், ஆளுமைப்பண்பு, மனிதவளம் தேவையோ அதே போல தொழிலாளர் வர்க்க அமைப்புக்கும், கட்சிக்கும் நேர நிர்வாகமும், ஆளுமைப் பண்பும், மனிதவளமும் அவசியம் என்று அதனை தனது வாழ்வாக மாற்றிக் கொண்டவர்.

பேரரசிரியர்களை, பல்துறை நிபுணர்களை, பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்தவர் களை தனது தேடுதலின் மூலம் நண்பர்களாக பெற்றவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிமையான வாழ்வியல் உதாரணங்களில் இருந்தும், சொலவடை களின் மூலம்  விளங்க வைப்பார்.  மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

தமிழகத்தில் புத்தகக் கண்காட்சி என்ற வடிவம் வந்தபின்பு தொடர்ந்து அவைகளுக்கு சென்று புத்தகங்களின் பிரியா காதலரானவர். வாங்கிய புத்தகங்களை பலரும் வாசித்து செல்கின்றனர். தோழர் கே.தங்கவேல் அவர்களோ கற்பது என்று மூன்று வகைகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று சொல்வார்.                 

1.மனநிலையில் மாற்றம், 2. அறிவுநிலையில் உயர்வு. 3, திறனில் மேம்பாடு என ஆழமாக கற்றல் குறித்து அறிந்து அதன்படி நடந்தவர்.

படிப்பது கூட பலருக்கு மனதில் நிற்காது. மறந்துவிட்டேன் என சொல்பவர்கள் உண்டு.  அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்திட முயற்சிகள் மேற்கொண்டே வாசிக்க வேண்டும் என்று சொல்வார். பதற்றம், விருப்பமின்மை, பயம், பயிற்சியின்மை, புரிந்து கொள்ளாமை, திருப்புதலற்ற படிப்பு, குருட்டு மனப்பாடம், கவனச் சிதறல், விழிப்புணர்வு இல்லாமல், இயந்திரத் தனமாக படித்தல் போன்ற அம்சங்கள் வாசித்ததை மனத்தில் நிறுத்த முடியாமல் மறந்து கொண்டே இருக்கும் என்று சொல்வார்.

கூட்டங்களுக்கு செல்வது என்றாலும், கலந்து கொண்டாலும் எதையும் முழுமையாக குறிப்பு எடுத்து அதன் அடிப்படையில் விடுபடாமல் ரத்தின சுருக்கமாக சொல்லுவார்.  பத்தாம் வகுப்பை தாண்டாத தோழர் கே.தங்கவேல், ஆட்சிப்பணி தேர்வுக்கான பயிற்சி மாணவர் களுக்கும், ஆசிரியர், பேராசிரியர், சமூக செயல் பாட்டாளர்களுக்கு தலைமைப் பண்பு, நேர நிர்வாகம் குறித்து வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஆனார்.

மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாக, கட்சித் தலைவராக, வழிகாட்டியாக இருந்தவர். பதவிகளை கூட பொறுப்புகளாக உணர்ந்தவர். கம்யூனிஸ்ட்களின் அடிப்படை கோட்பாட்டிற்கு இலக்கணமாகவும், எளிமை, உண்மை, நேர்மை, மனிதாபிமானி என்ற நடைமுறைக்கு உதாரணமாக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எந்த ஆடம்பரமற்று, மேற்படி இலட்சியத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டவர். பிரச்சனைகளை களத்தில் நின்று சந்தித்தவர்.

``வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால்  எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது'' -என்ற காரல் மார்க்சின் வார்த்தைக்கு வடிவம் கொடுத்து சம காலத்தில் வாழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல். அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம்.

தோழர் கே.தங்கவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்  - செப் 13

                                              செ.முத்துக்கண்ணன்


இரத்தத் தான படையாக மாறுங்கள் !

 

 “நாம் மக்களிடம் போவோம், நோயுற்றவரின் ஒவ்வொரு வீட்டுக்கும் போக வேண்டும், நகரத்திலிருந்து கிராமத்துக்கு, ஒரு கதவிலிருந்து இன்னொரு கதவுக்கு.’’ என்ற தனது  திட்டத்தை அவர் மனைவியிடம் சொல்ல அவரது மனைவியோ அவருக்கு எதோ ஆகி விட்டது போல் பார்க்கிறார். 

அவரது செயல்களை பார்த்த நண்பர்கள் ’நீங்கள் கம்யூனிஸ்டா?’ என்று அவரிடம் கேட்க அப்படினா என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் என்னை சிகப்பின் சிகப்பு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.  பணக்காரர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்வார்கள் ஆனால் ஏழைகளை யார் கவனிப்பது?  அது அரசாங்கத்தின் கடமையில்லையா? ஏழைகள் என்னை தோழர் பெத் என்று அழைக் கிறார்கள். மாளிகைகளில் புகுந்து வேலை செய்வதைவிட ஏழைக்களுக்காக நான் தெருவில் இறங்கி வேலை செய்வதே எனக்கு பிடித்துள்ளது.’’

தோழர் நார்மன் பெத்யூனின் சிந்தனையையும், கனவையும் நனவாக்கிய தேசமாக அன்று சோவியத் யூனியன் இருந்தது. 1935ல் சோவியத் சென்ற பெத்யூன் நேரில் கண்டார். அன்று உலகின் பெரும்பகுதி நாடுகளை அச்சுறுத்திய காசநோய் சோவியத்தில் பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. அனைத்து சுகாதார கடட்மைப்புகளிலும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமையும், கட்டணமின்றி சிகிச்சையும், அதைவிட காச நோய் இருக்கிறதா என்று இளம் வயதினர் கட்டாய பரிசோதனை செய்துக் கொள்வதை  உறுதி செய்து சோவியத் அரசு  பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தியிருந்தது.

நான் நினைப்பது போலவே சோவியத் இருக்கிறதே ! அதனால் தான் அவர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்கிறார்களா.. அப்படியானால் நான் கம்யூனிஸ்ட்தான்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லிக் கொண்டாராம் நார்மன் பெத்யூன். ரஷ்யாவில் தான் கண்ட சானடோரியங்கள் உலக தரம் வாய்ந்தவை என அறிவித்தார்.

ஜப்பானுக்கு எதிரான சீன யுத்த களத்தில் பெரும் காயங்களால் ரத்த இழப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வந்த தருணத்தில், இரத்த இழப்பு ஏற்பட்ட வீரனுக்கு  உடனே ரத்தம் வேண்டும்,  அதே ரத்த வகையுள்ள மருத்துவ ஊழியரின் ரத்தத்தை தானமாக கேட்க அந்த ஊழியர் தயங்குகிறார். அந்த நேரம் பெத்தயூனின் நண்பர் துங் தன் உடலிலிருத்து ரத்தம் வடித்து தருகிறார்.

பலத்த காயத்துடன் வந்த இன்னொரு வீரருக்கு ரத்தம் தேவைப்பட அவருக்கு பெத்யூன் தன் இரத்தத்தை தருகிறார். அதைப் பார்த்த செவிலியர், அந்த ஊரின் வயதான பெண்மணி உட்பட என் ரத்தத்தை எடுத்து மற்றவர்களை காப்பாற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியதை பார்த்த அந்த கிராமமே இரத்ததானம் செய்ய முன் வருகிறது.

நீங்கள் ரத்தம் தருவதை விட ரத்தம் கொடையாக பெறுவதற்கான ஒரு படையாக மாறுங்கள் நாட்டிலுள்ள கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் ரத்தத்தானம் செய்பவர்களின் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர்களை பயிற்றுவித்தார்.

நார்மன் பெத்யூனுக்கு ஊதியமாக 100 டாலர் தர முன்வந்த போது அதை கண்டு கடுமையாக கோபம் கொண்டு அப்படியெல்லாம் எந்த ஊதியமும் எனக்கு வேண்டாம், உணவும் மற்ற தேவை களையும்  நிறைவாக நீங்கள் செய்கிறீர்கள் அது போதும் எனக்கு” என கூறுகிறார்.

            “ஒரு மருத்துவருக்கு சிங்கத்தின் இதயமும், பெண்களுக்கான கைகளும் இருக்கவேண்டும்” என்று தனக்கு பிடித்த பழமொழியை எப்போதும் நார்மன் பெத்யூன் கூறுவார்.

 மருத்துவர் நார்மன் பெத்யூன் நடமாடும் அறுவை சிகிச்சை அரங்கு, இரத்த தானம், காச நோய் உள்ளிட்டு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளை கண்டறிந்தார். இது நவீன மருத்துவ உலகின் அச்சாரமாக திகழ்கிறது.

ஸ்பெயின் நாட்டு யுத்தத்தில் கிடைத்த அனுபவங்களை அவர் மாவோவிடம் எடுத்துக்கூறினார். மாவோ, உடனடியாக ஒரு நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கும்படி பெத்யூனைக் கேட்டுக் கொண்டார். அது முதல் வடக்கு சீனாவின் உட்பகுதியில் அமைந்த யுத்தமையத்தில் மையத்திற்கே சென்றார்.

அங்கே அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். சில நேரங்களில் நாற்பது மணி நேரம் கூடத் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்தார். இந்த அசாதாரணமான அர்ப்பணிப்புத் திறனால் அவருடைய புகழ் சீனா முழுவதும் சென்று அடைந்தது.

கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். ஓவியராக, கவிஞராக, ராணுவ வீராக, விமர்சகராக, ஆசிரியராக, விரிவுரையாளராக, மருத்துவ எழுத்தாளராக மற்றும் கோட்பாட்டாளராகவும் மருத்துவர் நார்மன் பெத்யூன் விளங்கினார். அவர் 1930களில் கொள்கைப்பிடிப்புள்ள கம்யூனிஸ்டாக உருவெடுத்தார்.

யுத்த களத்தில் இருந்த வீரர்கள் இப்படி முழக்கமிட்டார்கள்.  நம்மோடு பெத்யூன் இருக்கிறார். தைரியமாக போராடுங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாய் போர்களத்தில் நின்றார்.
தாக்குங்கள் ! நமது காயப்பட்டவர்களைப் பராமரிக்கப் பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !  தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் ! தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !

மருத்துவர் பெத்யூனின் வாரிசாய் சீன மருத்துவக்குழுவுக்கு தலைமையேற்று 5 ஆண்டுகளே பணியாற்றினாலும் சீனாவின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒருவராய் மாறிப் போனவர் மருத்துவர் கோட்னிக்ஸ்.

இந்தியாவில் இருந்து நேருவும், சுபாஸ் சந்திரபோசும் இணைந்து அனுப்பிய மருத்துவக்குழுவில் ஒருவராக சென்றவர்  மருத்துவர் துவாரகநாத்  சாந்தாராம்  கோட்னிக்ஸ் ஆவார். மற்றவர்கள் நாடு திரும்பிய நிலையில் கோட்னிக்ஸ் மட்டும் முழுமையான வசதிகள் இல்லாத சூழல், கடுமையான தட்பவெப்பத்துக்கு இடையில் பணிபுரிந்தார்.

சில நேரங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குத் தூங்காமலும் இடைவெளி இன்றியும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் கோட்னிஸுக்கு ஏற்பட்டது. 1940-ல் போர் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக 13 நாட்களுக்கு இடையில் 72 மணி நேரம் தூக்கம் இல்லாமல் 588 அறுவை சிகிச்சைகளை கோட்னிஸ் மேற்கொண்டிருக்கிறார்.

மருத்துவமே வணிகமாக இன்று மாறியுள்ள நிலையில் கொரோனா தடுப்பு என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகளை பலவிதங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் அன்று சேவை நோக்கத்தோடு போர் முனையில் படைவீரர்களுக்குச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உடனுக்குடன் செய்து, உயிரைக் காப்பாற்றிய அவருடைய பணியை என்னவென்று சொல்வது?

ஓய்வற்று பணியாற்றிதோடு மட்டுமல்லாமல் தனது உடல்நிலையில் கவனம் செலுத்ததால்  உடல்நலம் குன்றிய அவர், 1942 டிசம்பர் 9-ம் தேதி 32 வயதிலேயே காலமானார். அவரின் மகத்தான பணியை பெருமையோடு சீனர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்தியா வரும் அந்த நாட்டின் அதிபர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரும் கோட்னிக்ஸ் நினைவு கூறாமல் உரையாற்றியதில்லை. 

சீனாவில் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்யும் சிங்மிங் பண்டிகையின்போது, இன்றைக்கும் கோட்னிஸின் கல்லறையில் மலர்கள் குவிந்துவிடுகின்றன. சீனாவுக்குப் பங்களித்த அயல்நாட்டவர்களின் வரிசையில் முதல் 10 பேரில் கோட்னிஸுக்கு சீன மக்கள் இடமளித்துள்ளனர்.

இவர்களை போன்ற மருத்துவர்கள் இந்தியாவிலும் பணியாற்றியுள்ளார்கள். குறிப்பாக அரவிந்த் மருத்துவமனை கண்சிகிச்சை மருத்துவர் வெங்கடபதி, அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா, ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், சென்னையில் 10 ரூபாய் மருத்துவர் கோபால், 5 ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் போன்று பல மருத்துவமுறைகளில் உள்ள ஏராளமான மருத்துவர்கள் மக்களுக்கான மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். 

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இந்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து மக்களுக்கான மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை ஆளும் அரசுகளுக்கு உள்ளது. இதனை  ஆளும் அரசுகள் செய்யுமா ? மக்கள் உயிர் காக்க செய்தே ஆக வேண்டும். இத்தகைய மருத்துவர்களை போல்  வளரும் மருத்துவர்களும் தேசம் என்பது மண் மட்டுமல்ல, மக்களும் கூடத் தான் என்ற புரிதலோடு சேவையாற்ற வேண்டும்..இன்றைய இளம் தலைமுறையின் ஆதர்ச சக்தியாக மாறுங்கள் மருத்துவர்களே !

இரா.மு. அரவிந்தன்.