”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

கல்வியும், வேலையும் அடிப்படை உரிமை,..




மனித குலம் இரு கூறுகளாக நேர்ரெதிராக பிரிந்து நிற்கும் என்றால் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட ஏழை எளிய உழைப்பாளி மக்கள் பக்கமே நான் நிற்பேன் என்றார் உலக புரட்சிகர இளைஞர்களின் அடையாளமான தோழர் சேகுவேரா..

உலகின் மகத்தான தருணமிது.. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராக உலகளாவிய போராட்டம் என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் தருணமிது. மனிதவள மேம்பாட்டின் அடிப்படைக்கூறுகளான கல்வி, சுகாதாரம், வேலை ஆகியவற்றிற்கான போராட்டங்கள் இன்று உலகமயமாகி வருகிறது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது கோபப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் எழுச்சியோடு போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம், இடங்கொள்ளல் போராட்டம், வசந்தத்தை மீட்டெடுபோம், நீதிக்கான போராட்டம் என்று அமெரிக்கா, அரபுநாடுகள், ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் தினந்தோறும் நடந்த வண்ணம் உள்ளன. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் முதலாளித்துவத்தின் விதி வேலையின்மையை கூடுதலாக்கி சமூக கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.
முதலாளித்துவத்தின் உயிர் லாபம், சுரண்டல், வேலையில்லா திண்டாட்டத்தில்தான் உள்ளது. ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்காக நாடு தாண்டிய எல்லையற்ற சுரண்டல், கொள்ளையடிப்பு, மனித உரிமை மீறல், தொழிலாளர் உரிமைகளை மறுத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திட இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஐஎம்எப், உலகவங்கி, உலக வர்த்தக அமைப்பு இவைகளின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்தது.  மேலும் இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அரசியல், பொருளாதாரம், இராணுவ நடவடிக்கை மூலம் மூன்றாம் உலக மற்றும் வளர்முக நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பை, சந்தையை தன்வசப்படுத்தும் நடவடிக்கையையும் செய்து வருகிறது. தற்போதைய நிதி மூலதனம் உற்பத்தி மூலதனத்தை கட்டுப்படுத்தி ஊக வாணிபத்தை உருவாக்கி வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியை தனது லாபத்தை பெருக்குகிறது. இதனால் குறைந்தபட்ச வேலைகளும் அழித்தொழிக்கப்படுகிறது.
இன்று உலகளவில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் 10 சதம் முதல் 40 சதம் வரை வேலையின்மை விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் பொருளாதார நெருக்கடியும், மந்தமும், சமூகபாதுகாப்பு திட்டங்கள் வெட்டி சுருக்கப்படுவதும், விலைவாசி உயர்வும், கல்விக்கட்டண உயர்வு போன்ற தாக்குதலை இளைஞர்கள், மாணவர்கள், உழைப்பாளி மக்கள் மீது நடத்தி வருவதால், பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒன்றிணைந்த போராட்டமாக இன்று பரிணமிக்கிறது. செல்வந்தர்கள், ஏழைகளுக்கான ஏற்றதாழ்வும், இடைவெளியும் அதிகரித்து வருகிறது. வளர்ச்சியடையாத 48 நாடுகளின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவாகவே உள்ளதுஅதேபோல உலக பணக்காரர்களில் 20% பேர் உலகின் மொத்த வளங்களின் 86% கைப்பற்றியுள்ளனர்மீதமுள்ள 80% மக்களுக்கு கிடைப்பது வெறும் 14% மட்டுமே. இந்த ஏற்ற தாழ்வுகளின் அடிப்படையில் வாழ்வின் அடிப்படை ஆதாரங்கள் அனைத்தும் வணிகமயமாக்கப்படுகிறது. இதற்கு எதிரான கொள்கைகள் இன்று போராடும் சக்திகளால் முன்னுக்கு வைக்கப்படுகிறது. கியூபா, சீனா, வடகொரியா, வியட்நாம் போன்ற சோசலிச நாடுகளும், வெனிசுலா, பொலிவியா, ஈக்வோடார் உள்ளிட்ட  பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளும் இடதுசாரி முற்போக்கு சிந்தனையோடு மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறது. உலகமய ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவிலும் 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் அளவிற்கு வளர்ந்து வருகிறது.49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி இந்திய அரசாங்கத்தின் 201011ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டதுஇந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம். இதனால் சுரண்டப்படுபவர்களுக்கும், சுரண்டுபவர்களுக்கும் இடையே நடக்கும் இந்த போராட்டத்தில் இந்தியாவில் வேலையற்ற, வாழ்வற்ற, கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட தரப்பினரின் மேம்பாட்டிற்கான கோரிக்கைகளோடு போராடி வருகிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,
வேலை அனைவருக்கும் சாத்தியமா? கிராமப்புற வேலைவாய்ப்பு, நகர்ப்புற வேலைவாய்ப்பு, கிடைக்கும் வேலையும் சமூக பாதுகாப்போடு கூடிய வேலையாக உள்ளதா? சமத்துவமான வேலைவாய்ப்பு உள்ளதா? பாலின ரீதியாக சுரண்டப்படுகிறார்களா? புதிய தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அரசின் பார்வை என்ன? வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, நிரந்தமான வளர்ச்சிக்கான, சமூக மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டு இன்றைய நவீன தகவல், தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது போன்ற அனைத்து தளங்களில் தேச வளர்ச்சியில் இளைஞர்களை ஆற்றல்படுத்துவது குறித்து அக்கறையோடு செயலாற்றி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடந்த 32 ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி, வேலைக்கான முழக்கத்தை முன்னிறுத்தி போராடி வருகிறது.

நாடு விடுதலையடைந்த அடுத்த பத்தாண்டுக்குள் அனைவருக்கும் கல்வி, வேலையும் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கிய காங்கிரஸ் ஆறு பத்தாண்டுகளை கடந்து விட்ட பின்னணியில் இன்றும் அணிதிரட்டப்பட்ட துறைகளில் கூட 90 சதத்திற்கும் மேலாக தினக்கூலிகளாக, ஒப்பந்த தொழிலாளர்களாக எந்தவித சமூக பாதுகாப்பற்று பணியாற்றும் நிலையைதான் உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலில் 40 வயதிற்குட்பட்டு உடல் உழைப்பில் தொய்வின்றி ஈடுபடும் உழைப்பாளிகளே திறனுடையவர்கள் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி காலநிர்ணயம் செய்யாமல் வரையறையில்லாமல் உழைப்பு சுரண்டலை செய்து வருகிறது முதலாளித்துவ நிறுவனங்கள். வேலை என்பது வருமானத்தையும்உற்பத்தியையும் சார்ந்த்து. வேலை என்பது குறித்து பல்வேறு புரிதல்கள் இருந்தாலும், ஆண்டான் அடிமை சமூகம் முதல் இன்றைய முதலாளித்துவ அமைப்புமுறை வரை தொடர்ந்து வேலை என்பது ஆளும் வர்க்கத்தின் வளர்ச்சிக்கானமாறுதல்களுக்கான உழைப்பாக மட்டுமே பாவித்து வரப்பட்டுள்ளது. நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் அமிர்த்யாசென்வேலை என்பது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறார்இதையே ஐஎல்ஓ (உலக தொழிலாளர் அமைப்பு) கௌரவான வேலை என வரையறுக்கிறது.

இவை தான் வேலை என்பதற்கான அடையாளம் என்றால் ஒரு தனிநபரின் வருமானம்சமூகத்திற்க்கான உற்பத்திஅனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கௌரவமான வேலையாகவும்,  தனிமனித மற்றும் சமூக வளர்ச்சியை மையமாக கொண்டும் வழங்கப்பட வேண்டும்அது தான் உண்மையான பணியமர்வு தரத்தோடு கூடிய உரிமைகளை உள்ளடக்கிய வேலையாக இருக்கும். இன்றைக்கும் இப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் என்றால் அது அரசுத்துறைபொதுத்துறை மற்றும் அணிதிரட்ட தொழில்களில் பணிபுரிபவர்கள் ஆகியோரை மட்டுமே குறிக்கும் சொல்லாக (நிரந்தர தொழிலாளர்கள்உள்ளது அமைப்பு சாரா தொழில்களிலும்,சுய தொழில்களிலும்விவசாயத்துறையிலும் நிரந்தர தன்மை இருக்கிறதா?என்றால் அது அரசின் கொள்கை சார்ந்தே உள்ளது(2009-2010ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வுப்படி சுயதொழிலில் 51 சதமும், 33.5 சதம் ஒப்பந்த தொழிலாளர்களும், 15.6 சதம் மட்டுமே நிரந்தர மற்றும் மாதாந்திர ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர்.)

எனவே தான்  வேலைக்கான முழக்கம் என்பது தனிநபர் வாழ்வதற்கான முழக்கமாக மட்டும் பார்க்கப்படாமல் அது ஒட்டு மொத்த சமூகத்தின் உற்பத்தி,சமமான பகிர்வுவளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு இன்று உணவு தானியங்கள், காய்கறிகள், மாமிச வகைகள், ஆடைகள், இரும்பு, நிலக்கரி, சிமெண்ட் போன்றவை இந்தியாவில் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை நுகர்வதற்கான நுகர்வோர் இந்தியாவில் இருந்தும் கணிசமான பகுதியினர் வறுமைக்கோட்டிற்கு கீழும், 20 சதம் பேர் ஒரு வேலை உண்ண உணவில்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான அடிப்படை காரணம் பொருள் உற்பத்தி இருந்தாலும் வாங்கும் சக்தி குறைவாக உள்ளதே காரணமாகும். வாங்கும் சக்தி குறைவாக இருக்க காரணம் போதிய வேலை இல்லாதது. நாளொன்றுக்கு 1991ல் 510 கிராம் உணவு தானியத்தை பெற்ற ஒருவர் 2010ல் 438 கிராம் உணவு தானியத்தை மட்டுமே பெற்றுவருகிறார். நான் வளர்கிறேன் மம்மி என்று டிவி விளம்பரத்தை பார்த்து மட்டுமே மகிழ்ந்து கொள்ள முடியும்.

ஊட்டச்சத்து இல்லாமல் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் இந்தியாவில் 56சதம் என்றும், பிறக்கும் பெண் குழந்தைகளில் 80 சதம் ஊட்டசத்து குறைப்பாட்டோடு இருக்கிறது என்றும், குடிநீர் பற்றாகுறை மற்றும் நீர் சம்மந்தபட்ட நோய்களால் நாளொன்றுக்கு 1500 பேர் இந்தியாவில் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்குதான் 20 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமலும், 72சதம் பேர் இன்றும் கழிப்பறைகளை பயன்படுத்தாமலும் உள்ளனர். இப்படி ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் சுகாதாரத்தின் கூறுகளான குடிநீர், சத்தான உணவு, தூய்மையான வாழிடம், கழிப்பறை போன்றவைகளை முழுமையாக செய்து கொடுக்க முடியவில்லை.  

இதில்தான் கருத்து வேறுபாடு அரசுக்கும்அனைவருக்கும் வேலைவாய்ப்பை தர முடியுமாஎன கேட்பவர்களுக்கும்அனைவருக்கும் வேலை வேண்டும் என கேட்பவர்களுக்கும் இடையே தர்க்கமாககோஷமாகபோராட்டமாக இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறதுமூலதனத்தின் லாபத்திற்கேற்றவாறு உற்பத்தியும்,பகிர்ந்தளித்தலும்வேலைவாய்ப்புகளும்  உருவாக்கப்பட்டது, ஆளும் அரசுகளும் இவர்களின் நலன் சார்ந்தே செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏகபோக நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளை ஒருபுறம் வழங்கிக் கொண்டே, மறுபுறம் சிறு, குறு நிறுவனங்களை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகையின் விகிதத்திற்கேற்ப உற்பத்தியும்,அளிப்பும் உறுதி செய்யப்படுவதற்கு பதில் லாபத்தை அடிப்படையாக கொண்டு இருப்பு மற்றும் அளிப்பு மேலும் லாபத்தை நோக்கி இவர்கள் நடைபோட ஆரம்பித்ததால் வேலைவாய்ப்பு குறித்து அனைத்து அம்சங்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நகர்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாய்கிராமப்புறத்தில் 26 ரூபாய் தனிநபர் வருமானம் இருந்தால் அவர் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார் என திட்டகமிஷ்ன் கூறுகிறது. இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு வாழ முடியாத சூழலில் இந்தியாவில் ஆண்டுக்கு 4 கோடி பேர் வரை பிறந்த மண்ணில் வாழ வழியற்று வருமானத்தை தேடி இடபெயர்வடைகின்றனர், வடகிழக்கு மாநிலங்களில் எந்தவிதமான வளர்ச்சிக்கான திட்டங்களும் போதியளவு தீட்டப்படாமல் சுதந்திரஇந்தியாவில் புறக்க்ணிக்கப்பட்டதன் விளைவு அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில்தீவிரவாதகுழுக்களும், பிரிவினைவாதகுழுக்களும் தோன்ற காரணமாயுள்ளன. மேலும்கூடுதலான இடபெயர்வில் வடகிழக்கும் மற்றும் வடமாநிலங்களில் இருந்தேநடைபெறுகிறது, அவர்களின் வாழ்வதாரமான வனங்களும், காடுகளும், நிலங்களும் பன்னாட்டுநிறுவனங்களின் வேட்டைக்காடாய் மாற்றப்படுகிறது. ஜார்க்ண்ட், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களில் 102 ஒப்பந்தங்கள் மூலம் பன்னாட்டுநிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் வெட்டியெடுக்கப்பட்ட கனிம வளங்களின் மதிப்பீடு 4.67 லட்சம் கோடியை தாண்டும் என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு அரசும், ஆளும் வர்க்கமும், காங்கிரஸ், பிஜேபி போன்ற பிரதான அரசியல் கட்சிகளுமே காரணம். இப்படி உண்மைகளை மறைப்பதற்காக இடபெயர்வுக்கான காரணத்தை கண்டறிகிறோம் என அதற்கான ஆய்வுகளையும் ஆட்சியாளர்களே நடத்துகின்றனர், ஆனால் உண்மையில் அந்த மக்கள் வாழும் இடத்திலேயே வாழ்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க முடியாதாஎன்றால் முடியும்.

இந்தியாவில் இன்று 320 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன.  இதில் தரிசு நிலங்களாகவும், கோவில் நிலங்களாகவும், மடங்களின் சொத்துக்களாகவும், சில தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களாகவும் மட்டும 165 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் இன்றும் 83.31 சதம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கிராமப்புற வேலைவாய்ப்பை, கிராமப்புற பொருளாதாரத்தை, வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டுமென்றால் கிராமங்களில் நில சீர்திருத்ததை கடுமையாக அமுலாக்க வேண்டும். அதற்கான உறுதி ஆளும் ஆட்சியாளர்களிடம் வேண்டும். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் இந்திய சுதந்திரப்போரில் புரட்சிவீரர்கள் டெல்லியை வெற்றி கொண்டபின் அமைக்கப்பட்ட ஜல்சா கமிட்டி உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என அறிவித்தது.

சுதந்திர இந்தியாவில் நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு நபருக்கு 20 ஏக்கர்நிலம் என்ற உச்சவரம்பு சட்டம் அமுலாக்கப்பட்டது. இதனையொட்டி அரசு 1969 இல் நில உச்சவரம்பு சட்டம் அமலானால் 6 கோடியே 30லட்சம் ஏக்கர் நிலம் உபரியாய் கிடைக்கும் என அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் படிப்படியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக 2004 ஆகஸ்ட் 19 அன்று நாடாளுமன்ற மக்களவையில் அரசு வெளியிட்டுள்ள கணக்கின்படி,  நாட்டில் 73 லட்சத்து 35ஆயிரத்து 937 ஏக்கர் உபரி நிலம் உள்ளது என இறுதியாக அறிவிக்கப்பட்டது.  இதில் 53 லட்சம் ஏக்கர் நிலம் விநியோகம் செய்யப்பட்டத்தில்  மேற்குவங்காளத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்து 88 ஆயிரத்து 445 ஏக்கர் நிலம்(20 சதம்விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதுஇதனையடுத்து கேரளாதிரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி ஆட்சிகளில் அதிகளவிலான நில விநியோகம் நடந்துள்ளதுஉண்மையில் இந்தியாவில் சதம் நிலம் மட்டுமே பிரித்துக்கொடுக்கப்பட்டதுஇது சீனாவில் 43 சதவீதமும்ஜப்பானில் 33 சதமும் ஆகும். இப்படி நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டாலும் உற்பத்தியான பொருட்களுக்கான கொள்முதல்விலை என்பது கிடைக்காத சூழலில் விவசாயத்தினை விட்டு விவசாயிகள் வெளியேறும் நிலை அதிகரித்து வருகிறது. உரக்கம்பெனிகளுக்கும், பன்னாட்டு விலைக்கம்பெனிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை  அள்ளி வழங்கும் ஆட்சியாளர்கள் விவசாயிகளை பாதுகாப்பதில் அக்கறையற்று உள்ளனர்.

இதனால் கடந்த 2004-2010 ஆண்டுகளில் மட்டும் 21 மில்லியன் பேர் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில்  பெரும் பகுதி இன்று கட்டுமானத் தொழில் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளனர். 2004-05 காலத்தில் 4.9 சதம் என இருந்தது 2009-10ல் 9.4 சதமாக அதிகரித்துள்ளனர். இன்று வேளாண்துறையில் 42 சதமும், தொழில்துறையில் 29.6 சதமும்சேவைத்துறையில்28.4 சதமும் என உள்ளதுஇது 1970 களில் வேளாண்துறை 73.4 சதம்தொழில் துறை 11.3சதம்சேவைத்துறை 14.9 சதமும் என உற்பத்தியில் ஈடுபட்டனர்இதில் பெரும் பகுதி தற்போது சேவைத்துறை மையமாக வைத்த வேலைவாய்ப்பே உருவாக்கப்படுகிறது, உற்பத்தி சார்ந்த மூலதனம் என்பது இன்று ஊக வாணிபம் சார்ந்த மூலதனமாக மாறி ராட்சஷதனமான லாபவெறியில் தன்மை ஈடுபடுத்தியதன் விளைவு பன்னாட்டு மற்றும் இந்திய ஏகபோக நிறுவனங்கள் சிறியளவிலான நிறுவனங்களையும், அங்கே கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளை அழித்து பெரும் உழைப்பு சுரண்டலில் ஈடுபடுகிறது. இங்கு எந்த தொழிலாளர்களின் நலன்களும் பேசப்படுவதில்லைஉரிமைகள் வழங்கப்படுவதில்லை. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அழிக்கும் போதே எண்ணற்ற சலுகைகள வழங்கவும், அவர்களின் நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இச்சூழலில் இடதுசாரி அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட மகாத்காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்ட அடிப்படையில் ஆண்டுக்கு 132ரூபாய் அடிப்படை சம்பளத்தோடு 100 நாட்கள் வேலை என்கிற திட்டத்தை அமுலாக்குவதிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது. அத்திட்டத்தை முறையாக அமுலாக்கமல் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாற்றுகிறது. வாக்கு வங்கிக்கான திட்டமாகவே பார்க்கிறது. ஆண்டுக்கு 200 நாட்கள், 250 ரூபாய்  சம்பளம் என்பது ஒரளவு கிராமப்புற மக்களின் இடப்பெயர்வை தடுத்து நிறுத்தும்.


அதே போல் பாலின சுரண்டல் என்பதும் அதிகளவில் நடைபெறுகிறது. ஆண், பெண் இருவரும் ஒரே பணியை செய்தாலும் கூட ஏற்றதாழ்வான ஊதிய முறையும், அதற்கான காரணகாரியங்களும் கூறி சமத்துவம் நிராகரிக்கப்படுகிறது.

தனியார் துறைக்கு வக்காலத்து வாங்க அரசே பொதுத்துறையை சீரழிக்கும் வகையில் ஊழியர் கொள்கை, உற்பத்தி, சந்தை, போட்டி, சேவை போன்ற விசயங்களில் தனியாரை விட தரம் குறைந்தது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் சத்தமில்லாமல் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

மின்சார வாரியம்சாலைப்போக்குவரத்துதொலைதொடர்புவங்கிகல்வி, மருத்துவம் போன்ற சேவைத்துறைகளில் ஊழியர் பற்றாகுறையை காரணம் காட்டி அடிப்படையான பணிகளை கூட நிறுத்தி வைத்து விட்டுநிறுவனங்களை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களை நாள் கணக்கில் காத்திருந்து நோக வைப்பது அவர்களே தனியார்துறையாக இருந்தால் சிறப்பாக செயல்படும் என்ற கருத்தியலை நோக்கி செல்லும் மனநிலையை உருவாக்குவது.

இதை வைத்துக்கொண்டு அரசு மற்றும் பொதுத்துறையில் வேலைநியமனத்திற்கு தடைவேலைப்பறிப்புகட்டாய ஓய்வுஓய்வுபெற்றவர்களை மீண்டும் வேலைக்கு குறைந்த ஊதியத்தில் நியமிப்பது என பல்வேறு உள்ளடி வேலைகளில் அரசு ஈடுபடுகிறது. இந்தியாவில் மத்திய அரசு சம்மந்தப்ட்ட துறைகளில் மட்டும் 0.2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளது என மத்திய மந்திரி நாராயணசாமி கூறுகிறார். குறிப்பாக ரயில்வே துறையில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் வேலைநியமன தடையை காரணம்காண்பித்து 2 லட்சம் பணியிடங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. 12 வது நிதி ஆணையம் அரசுத்துறை பணிநியமனக் கொள்கையில்அரசு தனது மொத்த வருவாயில் 35 சதத்துக்குள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.

இப்படி வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் டாக்கா நகரத்தில் எப்படி மஸ்லீன் துணியை இந்திய நெசவாளிகள் அற்புதமாக நெய்ததை கண்டு பயந்த வெள்ளையர்கள் நெசவாளர்களின் கை கட்டைவிரலை வெட்டினார்களோ, அதைப்போல் இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகாடாய் இந்திய நிலங்களையும், காடுகளையும், கனிம வளங்களையும் கொள்ளையடிக்க அனுமதியளித்து லட்சக்கண்க்கான கோடி ரூபாய் ஊழல் பணம் திருடு போகவிட்டுவிட்டு சாதாரண ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் அரசாக இருந்து வருகிறது.

பகத்சிங்ம், ராஜகுருவும், சுகதேவும், ஆசாத்ம், நேதாஜியும், வாஞ்சிநாதனும், வஉசியும், பாரதியும், சிவாவும், காந்தியும், நேருவும் இன்னும் பிற தலைவர்களும் பெற்று தந்த இந்த சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டுமெனறால் இந்திய கனிம வளங்களும், இயற்கை வளங்களும், பாதுகாக்கப்பட வேண்டும். கிராமப்புற பொருளதாரம் மேம்படுத்த வேண்டும். எதிர்கால இந்தியாவினை ஆற்றல்படுத்தும் சக்தி வாய்ந்த இளைஞர் சமூகத்தினை சரியான பாதையில் அணிவகுத்திட கொள்கை முழக்கத்தோடு பாரதி கண்ட இளைய பாரத்தினாய், ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா... இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9 வது அகில இந்திய மாநாட்டில் பெங்களூரில் சங்கமிப்போம். செப்டம்பர் 11 முதல் 15 வரை நடைபெறுகிறது.  செப்டம்பர் 11ல் லட்சம் இளைஞர்களின் இலட்சிய பேரணியும் நடைபெறுகிறது. நமக்கான மாற்றத்தை உருவாக்க ஒன்றிணைவோம். வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.

வீரத்தின் விளைநிலம் கேப்டன் லட்சுமி


“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்“.

என்ற மகாகவி பாரதியின் அக்கினி பிரவாகத்திற்கு அடையாளமாய் வாழ்ந்து காட்டியவர் கேப்டன் லட்சுமி அவர்கள். தனது 87 வது வயதில் நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக இடதுசாரி கட்சியினரால் முன்மொழியப்பட்ட தருணத்தில், அந்த வயதிலும் நாள் தவறாது காலை 9 மணிக்கு கான்பூரில் உள்ள தனது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கண்களில் அன்பு ஒளியும், பாசமும், நேசமும், மனிதநேயத்தையும் காட்டும் பரந்த உள்ளம் படைத்த கேப்டன் லட்சுமி அவர்களுக்கு இருதய அடைப்பு காரணமாக 97 வயதில் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். தோழர் கேப்டன் லட்சுமி தனது இறப்புக்கு பின் தனது உடலை “மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும்“ என்று விரும்பியதால் அவரது உடல் கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம்.மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1914ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சென்னையின் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றிய சுவாமிநாதன், சமூக சேவகியாக இருந்த அம்மு ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவரது குடும்பம் நாட்டுபற்று மிக்க குடும்பமாக இருந்ததால் இளம் வயதிலேயே லட்சுமி சாதிய பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டுவிடுதலை, சமத்துவம், அநீதிக்கு எதிராக போராடுவது என்ற இலட்சியங்களை தாங்கி வளர ஆரம்பித்தார். தனது பள்ளி பருவத்திலேயே மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். விரும்பியபடி அவர் இடைநிலை கல்வியை இராணிமேரி கல்லூரியிலும், மருத்துவப்படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் 1938ல் முடித்து மருத்துவரானார்.

இராணி மேரி கல்லூரியில் படித்த 1930களில், தமிழகத்தில் தோழர் பி.ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்த லட்சுமி, பகத்சிங் வழக்கிற்காக கல்லூரியில் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டார். அதே ஆண்டு நடைபெற்ற சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்று ஒரு நாள் சிறையும் சென்றார். கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரி சுகாசினி நம்பியார் பொதுவுடைமை இயக்கத்தின் மூலம் சுதந்திரப்போரில் ஈடுபட்டதால் மீரட் சதி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக லட்சுமி வீட்டில் தங்கியிருந்தார். அக்காலத்தில் அவரிடமிருந்து  மார்க்சியத் தத்துவம், ரஷ்ய புரட்சி குறித்த புத்தகங்களை பெற்று படித்து தெரிந்துகொண்டார். சீனவானில் சிவப்பு நட்சத்திரம் என்ற சீனப்புரட்சி குறித்த புத்தகம் அவரை பெரிதும் ஈர்த்த்து, எனினும் தோழர்.லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியின் தாக்கத்தில் இந்திய சமூகத்தில் மாற்றம் ஏற்படவும், வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேற்றப்படவும் வேண்டுமென்றால் ஆயுதம் தாங்கிய வெகுமக்கள் புரட்சியே தேசத்தின் அரசியல் விடுதலைக்கு சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார்.

குடும்ப சூழ்நிலையையொட்டி 1940களில் சிங்கப்பூர் சென்ற லட்சுமி அங்கு தென்னிந்திய பெண் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்தார். அங்கு பெண்கள் மருத்துவ வசதி இல்லாமல் அல்லலுறுவதை கண்டு மனம் வெம்பி அவர்களுக்காக அங்கேயே தங்கி தனது மருத்துவ சேவையை துவங்கினார். வெகுவிரைவில் புகழ்பெற்ற மருத்துவராக அந்த பகுதி மக்களால் பேசப்படலானார்.

1941ம் ஆண்டு ஜப்பான்-பிரிட்டனுக்கிடையேயான யுத்த்த்தில் பஞ்சாப் ரெஜிமெண்ட் ஜப்பான் இராணுவத்திடம் சரணடைந்தது. இந்த படையில் இருந்த எஞ்சிய வீரர்களை கொண்டு .உருவானதே இந்திய தேசிய இராணுவம். இதில் பொதுமக்களின் பங்கேற்பு இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் “இந்திய சுதந்திர கழகத்தை“ உருவாக்கி செயல்படுத்தி வந்தார். இதன் கிளை சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த போது அதன் தீவிர உறுப்பினராகவும் லட்சுமி செயல்பட்டார். 

இக்காலத்தில் சிங்கப்பூரில் போரில் காயமடைந்த போர்வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொறுப்பை லட்சுமி ஏற்றதோடு அகதிகளையும், நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். மேலும் இந்திய சுதந்திர கழகத்தின் பிரச்சாரப்பிரிவின் பணியையும், அதற்கான கட்டுரைகளையும் எழுதினார். பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் பிரிவையும் செயல்படுத்தினார். இந்த சூழலில் 1943ல் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர கழகத்தின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்த போது இந்திய சுதந்திரப் போரில் நேரடியாக ஈடுபடும் தனது விருப்பதை லட்சுமி தெரிவிக்க அதன் பின்னணியில் நேதாஜியும் ஜான்சி ராணி படை என்ற பெயரில் பெண்களும் சுதந்திரப்போரில் ஆயுதம் தரித்து ஆண்களுக்கு நிகராக களம் இறங்கலாம் என்று தெரிவித்தவுடன் பெண்களுக்கான ஜான்சி ராணி படையில் 1000க்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு உருவாக்கி தானே தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். ஆசியாவின் முதல் பெண்கள் படையாகும்.

நேதாஜியின் டெல்லி சலோ முழக்கத்தை முன்னிட்டு இந்த படைப்பிரிவு சிங்கப்பூரில் இருந்து பர்மா நோக்கியும் பின்னர் டெல்லி நோக்கியும் முன்னேறியது. இந்திய-பர்மா எல்லையில் நிறுத்தப்பட்ட இப்படை யுத்தகளத்தில் தீரத்துடன் போராடியது. யுத்த முனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லட்சுமி மருத்துவ சிகிச்சையை செய்து வந்தார். அங்கிருந்த மருத்துவமனையை பிரிட்டிஷ் இராணுவம் விமான தாக்குதலில் தரைமட்டமாக்கிய போது மயிரிழையில் உயிர் தப்பினார் கேப்டன் லட்சுமி.  படைத்தளபதி லட்சுமி போர் கைதியாக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டார். இவர் மீது எந்த பிரிவின் மீது குற்றம் சாட்டுவது என திணறிய வெள்ளை அரசு, இவர் நேதாஜி உருவாக்கிய இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என குற்றம் சாட்டி ரங்கூனில் வீட்டுச்சிறையில் வைத்த்து.

1945ம் ஆண்டு “இந்திய இராணுவ வீரர்கள் இந்தியாவில் போர் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே இந்தியாவிற்கு சென்று விடுதலைக்காக போராடுவோம்“ என சபதமேற்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த வெள்ளை அரசு அவர்களை கைது செய்த்து. லட்சுமியை நேரடியாக கல்கத்தாவிற்கு கொண்டு சென்று நேதாஜியின் சகோதரி மகள் வீட்டிலிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டுமென உத்தரவிட்டனர். இந்திய விடுதலைக்கு பின் தன்னுடைய சக போராளியாக தன்னோடு பணியாற்றி கர்னல் பிரேம் ஷெகாலை திருமணம் செய்து கொண்டார். சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி ஆகிய மகள்களும், பேரன் பேத்திகளும் உள்ளனர், இவர்களில் தோழர் சுபாஷினி அலி மாதர் அமைப்பின் அகில இந்திய தலைவராக உள்ளார்.

தன்னுடைய இறுதி காலம் வரை மக்களுக்காக அரசியல் களத்தில், சேவைக்காக மருத்துவராகவும் ஒய்வறிய உழைப்பாளியாக பணியாற்றிய கேப்டன் லட்சுமி அவர்கள் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டு அந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1971ல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

1972ல் பங்களாதேஷ் யுத்த்த்தின் போது அகதிகளுக்கும், போரில் காயமடைந்தவர்களுக்கும் சிகிக்சை செய்ய தோழர் ஜோதிபாசு அழைத்தன்பேரில் நேரில் சென்றதோடு நிவாரணநிதியும் திரட்டிக்கொடுத்தார். இந்திராகாந்தி படுகொலையின் போது கான்பூரில் சீக்கியர்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக சீக்கிய மக்களை தனது மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று ஏராளமான சீக்கியர்களின் உயிரை காப்பாற்றினார்.

குஜராத் கலவரம் நடைபெற்ற தருணத்தின் போதுதான் கடுமையாக மதவாத்த்தை கண்டித்தார், அது மட்டுமல்லாது மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் முன்மொழியப்படும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற தனது நிலையை கம்பீரமாக வெளிப்படுத்தினார், காஷ்மீர் உள்ளிட்ட தனி நாடு கோரிக்கைகளை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி, மத்திய, மாநில உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கைகளோடு இருந்த லட்சுமி, இடதுசாரி கட்சிகளால் குடியரசு தலைவர் தேர்தலுக்கு 2002ல் வேட்பாளராக முன்மொழியப்பட்ட போது தெளிவாக கூறினார்.“ வெற்றி பெறுவோம் என்ற பிரமையோ, அதீத நம்பிக்கையோ கொள்ளவில்லை, இந்த குடியரசு தலைவர் தேர்வுகான களத்தில் இந்திய அரசியலின் மேன்மையை, இறையாண்மையை, மக்களின் நலனை கருத்தில் கொண்டு போராடும் இடதுசாரிகளின் அரசியலை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். இப்பதவிக்காக எந்த குறுக்குவழியையும், கட்சிகளிடம் யாசகம் கேட்பதை செய்ய மாட்டேன் என் தெளிந்த ஞானத்தோடு, அரசியல் உறுதியோடு“ பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார்.

பெண்களுக்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னின்ற அவர் அதற்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக இந்திய முழுவதும் அமைப்பை வளர்ப்பதில் தனது வயதான காலத்தில் பயணம் மேற்கொண்ட அற்புத தலைவர். இளமைப்பருவத்தில் தான் கற்ற்றிந்த மார்க்சிய தத்துவத்தின் வழியில் உறுதியாக நின்று சோசலிசப் புரட்சிக்கான தனது போராட்டத்தை விடாப் பிடியாக நடத்தியவர், அதற்காகவே வாழ்ந்தார். இளம் தலைமுறையை பாசத்தோடு நேசித்த அவர் இளைஞர்களே மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடியவர்கள், அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், மக்களுக்கான மாற்று சமூகத்தினை உருவாக்கிட போராடும் அமைப்புகளுக்கு தலைமையேற்க வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர், இளைஞர்களின் ஆகர்ச சக்தியாக திகழ்ந்தவர்.

இந்திய சுதந்திரப்போரின் மகத்தான வீராங்கனைகளில் ஒருவரும், அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்டு வாழ்ந்த போது தேசத்திற்காக தனது வாழ்நாளையும், உழைப்பையும் செலுத்திய அந்த ஒப்பற்ற மனிதர் வாழ்வுக்கு பின் தனது உடலையும் தான் நேசித்து, சுவாசித்து மக்களுக்காக அர்ப்பணித்த அந்த மருத்துவ சேவைக்கு அதன் வளர்ச்சிக்கு தனது உடலை தானமாக தந்த தோழர் கேப்டன் லட்சுமி அவர்களின் புகழ் ஓங்கட்டும்,. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறைக்கு உத்வேகமளிக்கட்டும்,.. இன்குலாப் ஜிந்தாபாத்..

- அரவிந்தன்
நன்றி / இளைஞர் முழக்கம்