”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள்.

 யாருக்கு உபதேசம் பிரதமர் அவர்களே ? 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு திடீரென நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும், வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் இணையவழி மூலம்  வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனம் வைத்திருப்போர் வீடுகளில் நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், எரிபொருள்  சிக்கனத்தை கடைபிடிக்க  வேண்டும் என சொல்லிவிட்டு அரபு நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டார். எதற்கு இந்த பில்டப் ? ஏன் இந்த உபதேசம் என பார்த்தால் ஒரிரு நாளில் இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருள் விலையை உயர்த்தி விட்டார்கள். இதற்கு தான் இந்த உபதேசம்.

கார்ப்ரேட் பாசத்தின் விளைவு

இன்று கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. காரணம் ஒன்றிய பிஜேபி அரசின்  கார்ப்ரேட் ஆதரவுக் கொள்கையும், நவீன தாராளமய கொள்கையின் தாக்கமும், அவர்களின் நலன்கள் சார்ந்த முன்னெடுப்பும் பெரும் நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி வருகிறது. இதனை மறைக்க ஈரான்அமெரிக்காஇஸ்ரேலிய போரை பயன்படுத்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாக கூறுகிறது. இது உண்மையா?  வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்டு பல நாடுகளில் இருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்திய அரசின் உறுதியற்ற அரசியல் நிலையும், அமெரிக்க சார்பு தன்மையுமே இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடியாளாக உள்ள இஸ்ரேலுடன் தனது நண்பர் அதானிக்காக இந்தியா பிரதமரின் நெருக்கமும், இந்திய வெளியுறவுக் கொள்கையின் உறவும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தனது ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்த மோடியின் பாசத்திற்கு அரபு நாடுகளின் மத்தியில் கடும் எரிச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. கூட்டுச் சேர நாடுகளினை வழிநடத்திய இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியதன் காரணமாக இந்தியாவின் மீதான மதிப்பும், மரியாதையும், இறையாண்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது.

மூலதன குவிப்பு

150 கோடி மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகவும், பொருளாதார சந்தையும் உள்ள இந்தியாவை புறக்கணிக்க எந்த நாடும் துணியாது.  அந்நிய மூலதன குவிப்பு குவிந்த வண்ணம் இருந்தது. அது இந்திய வளங்களின் மீதான  லாப பங்கீட்டை மேலும்  மேலும் தீவிரப்படுத்தியது. 1991 ல் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எப், உலகவங்கியின் நிர்பந்தத்தில் இந்தியாவியல் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னணியில், இன்று இந்திய மொத்த வருமான பங்கீட்டில் ஒரு சதவீதம் பணக்காரர்களிடம் 70 சதவீதமான சொத்துக்கள் குவியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

இதனுடைய வெளிப்பாடே பெரும் பகுதி விவசாயிகளை கொண்டுள்ள தேசத்தில்  விவசாய நலன்களுக்கு எதிராக வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட தொகுப்புகளையும் முதலாளிகள் நலனுக்காகவும் என மாற்றி அமைத்துள்ளது. இந்திய வளங்களை  குறிப்பாக வனங்கள், கனிம சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேச உடைமையாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், துறைமுகங்கள் உட்பட அனைத்தையும் தாரை வார்க்கும் நிலையே உள்ளது. அதற்கு பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் கார்ப்ரேடுகளுக்கு கொடுத்து தேர்தல் பத்திரங்கள் பெயரில் நிதியை பெற்றுக் கொள்ளும் மோசடித்தனம் அரங்கேறுகிறது. பெரும் முதலாளிகள் நலனுக்காக உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான கட்டமைப்புகளை பலி கொடுக்கிறது. 

கார்ப்ரேட் நலனும், சிறுகுறு தொழில் அழிப்பும்

இதனால் கார்ப்ரேட்டுகள் தேசம் விட்டு தேசம் தாண்டி மூலதன வேட்டைக்கு நகருகிறார்கள். தற்போது 2.01 லட்சம்  கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள்  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. இதற்கு தேவையான நிதி மூலதனத்தை இந்திய பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்று தங்களுடைய லாப குவிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்கள். நாட்டின் செல்வ வளங்களை ஒரு பகுதியினர் அனுபவிக்கவும், அள்ளிச் செல்லவும் அனுமதித்தன் விளைவால் ஏற்பட்டுள்ள வருமானப் பற்றாக்குறையை நாட்டு மக்களின்  மீது திணிக்க மோடி அரசு நினைக்கிறது. ( உதாரணம்  கார்ப்ரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கான வங்கிகள் வழங்கிய வராக் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, வரி சலுகை, கார்ப்ரேட் வரி குறைப்பு  என இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவீதம் அளவு அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் மோடி அரசு யாருக்கானது என புலப்படும். மொத்த தேசத்தின் சிக்கனம் சிலரின் நன்மைக்காகவா என்ற கேள்வி எழுகிறது. கார்ப்ரேட்டுகளுக்கு அள்ளி கொடுக்கும் மோடி அரசு ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கு கிள்ளிக் கொடுக்க கூட மனமில்லாத நிலை உள்ளது.

ஏற்கனவே மோடி அரசு பதவியேற்றபின் தொடர்சியாக கார்ப்ரேட்கள் ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு உயிர் பயத்தில் மக்கள்  வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 2020-2021 கோவிட் ஊரடங்கு காலத்தில் மட்டும்  ஐடி நிறுவனங்கள் 10-15 சதவீதமும் ( டிசிஎஸ் நிறுவனம் ரூ 32562 கோடி லாபம் அடைந்தது), மருந்து கம்பெனிகள் 15-20 சதவீதமும்( சில நிறுவனங்கள் 40 முதல் 50 சதவீதமும் ), வங்கித்துறையில் தனியார் வங்கிகள் ( 2021ல் HDFC  ரூ 31116 கோடி 18 சதவீதம், ICICI ரூ 16193 கோடி 50 சதவீதமும் முந்தைய ஆண்டை விட  லாபத்தை அடைந்தது. ஆன் லைன் கேமிங் நிறுவனங்கள், காமர்ஸ் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு துறை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் கடும் லாபத்தை பெற்றது.

இதே காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உற்பத்திக்கு எந்த ஊக்குவிப்பும் இல்லாத நிலையில், அரசுகளின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, இறக்குமதி ஏற்றுமதி குறித்தான அரசின் வரிகள் கடும் பாதிப்பை உருவாக்கியது. அந்த கோவிட் ஊரடங்கு கால அனுபவத்தை கணக்கில் கொள்ளாமலும், தனது பொருளாதார கொள்கைகளின் விளைவாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், திட்டமிடாத லாக்டவுன் என அதலபாதாளத்தில் இந்திய தொழில், விவசாய மற்றும் சேவை துறையை தள்ளிவிட்டு சிக்கனத்தை பற்றி பேசுகிறார். “குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறைந்து வருவது ( டாலருக்கு நிகராக 96 ரூபாய் என்ற வீழ்ச்சி ) பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறதுது.

லாக்டவுன் ஆன உழைப்பாளிகள் வாழ்க்கை

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 30 சதவீதம் தாக்குபிடிக்க முடியாமல் மூடப்பட்டன. அவர்களை நடுத்தெருவில் மோடி அரசு நிறுத்தியது. இதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் நாடு முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலத்தை பார்த்தோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உறங்க இடமில்லாமல் ரயில் தண்டவாளத்தில் உறங்கி ரயில் மோதி பலியான சம்பவங்களையும் பார்த்தோம்.

பெரும் நிறுவனங்களின் லாபத்திற்கு அடிப்படை, அதன் நிர்வாகதிறனே காரணம்  என சொல்லப்படுகிறது. உண்மையில் அது நிர்வாக திறனல்ல, உழைப்பாளி களின் மீதான உழைப்புச் சுரண்டல், ஊழியர்கள், தொழிலாளிகள், உழைப்பாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து மூலதன செலவில் உழைப்பின் பங்கிற்கான நிதி ஆதாரங்களை வெட்டியதே காரணம். போனஸ் குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பெரும் பகுதி மாற்றியது, வீட்டிலிருந்து பணி, நிர்வாக செலவினங்களில் கட்டிட வாடகை, போக்குவரத்து செலவு, உணவுக்கூட செலவு, மின்சாரம், பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் குறைந்ததும், வங்கிகளில் கடனுக்கான வட்டிகள் நிறுத்தி வைப்பு, வட்டிவிகிதங்கள்  குறைக்கப்பட்டது இந்நிறுவனங்களின் லாபத்திற்கு வழி வகை செய்தது. ஆனால் தொழிலாளர்கள்  வாழ்வில் மண்ணை அள்ளிப்போட்டது.

 மோடியின்  சிக்கனம் யாருக்கு ?

ஒரு தேசத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது என்பது விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவிடும். அதே நேரத்தில் இறக்குமதி அதிகரிக்கும் எனில் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். இதனை அமலாக்க மக்கள்  நலன்  சார்ந்த முன்னெடுப்புகளே அவசியம். ஆனால் மோடி அரசு கார்ப்பேரட் நலன்  அரசாக இருப்பதால் மக்களுக்கே மீண்டும் மீண்டும் சுமையை  கூட்டுகிறது.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான முக்கிய தரவுகள், மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாத மத்திய அரசின் வெளியீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின்  அறிக்கைகளின் படி சில்லறை பணவீக்கம் (Retail Inflation): ஏப்ரல் 2026-ல்,3.48% ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 2026-ல் இது 3.40% ஆக இருந்தது. பணவீக்க விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4% என்ற வரம்பிற்குள்ளேயே உள்ளதாக கூறினாலும், உண்மையில் ஏப்ரல் 2026-ல், கிராமப்புற பணவீக்கம் 4.26% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.10% ஆகவும் இருந்தது. இதனால் கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு சற்று அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 4.20% (Consumer Food Price Index - CFPI) ஆக இருந்தது.

தற்போது பெட்ரோலிய  பொருட்கள் விலை ரூ 3 முதல் எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு ரூ 50ம், வர்த்தக சிலிண்டர் ரூ 993 ம் உயர்த்தப்ட்டுள்ளது. உழைப்பாளிகளின் மீது பெரும் சுமையை ஏற்றி உள்ளது. இத்தருணத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உழைப்பாளிகளுக்கு சம்பள உயர்வு இல்லை என வட இந்தியாவில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். சாமான்ய மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் உணவு கூடங்கள், சிறு உணவகங்கள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் பொருளின் விலை கடுமையாக ஏறியுள்ளது. பொருளின்  அளவு குறைந்துள்ளது. 4 இட்லி சாப்பிட்ட இடத்தில் 3 இட்லியாக மாறியுள்ளது. ஒரு கப் தேநீர் விலை ரூ 20 – ரூ 25  என  பேக்கரிகளில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கப்பில் தேநீர் அளவு குறைந்துவிட்டது.  வடையின் விலை உயர்வு, அளவு சிறிதாகிவிட்டது.  சிலிண்டர் விலையை காரணம் காட்டி உணவு வகைகளின் எண்ணிக்கை அளவை குறைத்துவிட்டனர். இது உழைப்பாளி மக்களின்  உணவு தேவையினை வெட்டி சுருக்குகிறது.  விலைவாசி உயர்வு உண்டியை சுருக்கிறது. வயிறுகளில் வரிக்கோடுகள் அதிகரிக்கிறது. போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப்படும் என நிறுவனங்கள், தனியார் வாகன உரிமையாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். 

 எரிபொருட்கள் விலையுயர்வு யாரின் நலனுக்காக

எதார்த்ததில் இடதுசாரிகள் ஆதரவோடு  மன்மோகன்  சிங் பிரதமராக இருந்த போது சர்வதேச சந்தையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (Barrel) $147.27 என்ற உச்ச விலையைத் தொட்டது. அதே காலகட்டத்தில் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $147.50 வரை விற்பனையானது. அன்று இந்தியாவில்  பெட்ரோலின் விலை ரூ 45 முதல் 51 ரூபாயாகவும், டீசல் விலை ரூ 31 முதல் 35 ஆகவும் முக்கிய நகரங்களில் விற்பனை ஆனது.

இது 2017 வரை சர்வதேச சந்தையில் ஏறினாலும் விலையை இந்திய பெட்ரோலிய ஆணையமும், அரசும்  தீர்மானிக்கும் நிலை இருந்தது. 2017ல் பெட்ரோல் ரூ 63-70ம், டீசல் ரூ 53-58 ம் என இருந்த நிலையில்  இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என அறிவித்த பின்னணியில் தினமும் விலை மாறும் முறை  ( Daily Dynamic Pricing)   அறிவிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் கடும் தாக்கத்தை உருவாக்கியது.

இதன் வெளிப்பாடே இன்று வெனிசுலா நாட்டில் உலக கச்சா எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது என்ற நிலையில் அந்நாட்டின் அதிபரை கடத்தி தனது நாட்டின் சிறையில் அடைத்து வைத்து, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் உலகின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ரூ 27 லட்சம் கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவும் என டிரம்ப் அறிவிக்கிறார். இதற்கான பணம் இந்திய வங்கிகளில் இருந்தே சூறையாடப்படும். அதுதான் கடந்த கால வரலாறு. இந்த கார்ப்ரேட்களின் நலனுக்காக இந்திய மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்த்துதான் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசாத ஊடங்கங்கள் உண்மையை பேச வேண்டும்.  சமூக வலைதளவாசிகள் இந்த உண்மையை உரசி பார்க்க வேண்டும்.

 செ.முத்துக்கண்ணன்.

thanks to theekkathir daily 2026 may 17

No comments:

Post a Comment