”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

பெங்களுர் எக்ஸ்பிரஸ்



“நீங்கள் எந்த பக்கத்தில்
இரு வேறு உலகங்கள்
இரு வேறு நீதிகள்
வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம்,
கசப்பும் தண்ணீரும் கலந்தொழுகும் இன்னொரு புறம் என்றான்“ மாக்சிம் கார்க்கி.,, ஆம், தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று தற்போது அவர் குற்றவாளி என தீர்ப்பும், தண்டனையும் வழங்கப்பட்டு மேல்முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றமும் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த இடைப்பட்ட 21 நாட்களில் தமிழகம் இதுவரை கண்டிராத விசித்திரங்களை கண்டு களித்தது. ஆம் சென்னைக்கும் பெங்களூருக்குமான எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை இல்லாத அளவிற்கு 21 நாட்களும் கூட்டம் அலைமோதியது.

காவேரி வேண்டாம்
எந்த காவேரிக்காக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த காவிரியை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும், எனக்கு அம்மாவை மட்டும் கொடுத்து விடுங்கள் என தமிழகத்தின் குழந்தைகள் எல்லாம் பால் குடிக்காமல் அழுது கொண்டிருப்பதாக ஒட்டிய போஸ்டர்கள் தான் எல்லாவற்றிலும் ஹைலைட் (ஆவினில் கலப்படம் நடந்து அதனால் குடிக்காதது தனிக்கதை), தீர்ப்பளித்த நீதிபதியை, கர்நாடக அரசை, தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவர்களை எல்லாம் அர்ச்சனை செய்து பேசிய பேச்சுக்கள் கொஞ்சமல்ல., கறுப்புக் கலருக்கு அங்கீகாரத்தை அளித்தவர்கள் என்றால் மிகையல்ல., அந்தளவுக்கு கறுப்பு ரூபாய் 200க்கும், 300க்கும் அல்லல்பட்டது.

தீர்ப்புக்கு நல்ல நேரம்
இதெல்லாம் எதற்காக? தேச நலனிற்காக, மக்கள் நலனிற்காக சிறை சென்ற தலைவருக்காகவா? இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியராக (தமிழக முதல்வராக) இருந்த போது வருமானத்தினைவிட கூடுதலாக சொத்து வாங்கினார் என்று தமிழக காவல்துறையே வழக்கை பதிவு செய்தது. அதன் பின் இரண்டு மாநில மாவட்ட, உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், பின்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் என 18 ஆண்டுகளை கடந்தது. தீர்ப்புக்கான தேதிக்கு நல்ல நேரம் பார்த்து வாய்தா வாங்கியதாக ஒரு சேதி.,
தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் விவாத மேடைகள் பல பெயர்களில் அனல் பறந்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக ஆளும் கட்சியினரின் நடவடிக்கைகளை காமிக்ஸ் கதையை விழுந்து படிக்கும் சிறுவர்களை போல, கார்டூன் சேனல்களை பார்க்கும் குழந்தைகள் வீட்டில் பெரியவர்களை எந்த சேனல்களையும் பார்க்க விடாது. அதைப்போன்று நடந்தேறியதுதான் தமிழகத்தின் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான தீர்ப்பும், தண்டனையும், அதற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களும், இந்த சத்தத்தில் உழைக்கும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் வைத்த ஆப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ஏராளம்.,

ஊழலுக்கு ஒப்புதல் பெறும் இடம்
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என குடிமக்கள் பாடும் பாட்டாக  மக்களின் மனோநிலை மாற்றப்பட்டுள்ளது. இது வரை அவர்கள் பார்த்துவந்த சமூக அவலங்கள், கல்வியறிவு இல்லாத நிலை, ஊடகங்களின் கருத்து திணிப்புகள், நுகர்வு வெறி போன்ற பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் இயல்பாகவே யார் நல்லவன், யார் கெட்டவன் என்ற நிலையை பார்ப்பது போய், யார் தான் ஊழல் செய்யவில்லை, யார் தான் குற்றம் செய்யவில்லை என்று நியாயத்திற்கு எதிர்வினையாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுருங்க சொன்னால் இன்றைய சமூகத்தையே ஊழல் நிறைந்த சமூக மாற்றும் நடவடிக்கையில் ஆளும் வர்க்கம் இறங்கியுள்ளது.  
வணிகமயச்சூழலில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய சாதாரண உழைப்பாளி மக்கள் அனைத்து விசயங்களுக்கும் அரசின் திட்டங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலையே உள்ளது,. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஊழல் செய்து மக்களுக்கு சேர வேண்டியதில் சிறுபகுதியை இலவசங்கள் என அறிவித்துவிட்டு பெரும்பகுதியை கூட்டு கொள்ளையடிக்கும் நிலையையே செய்து வருகின்றன. இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களும் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மக்களின் இயல்பான கோபமற்ற சூழலுக்கு காரணமாகும்.
இதனால் சாமான்யபட்ட ஏழை எளிய மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு தங்களது உரிமைகளை விற்கும் மனோநிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர். இதனை கார்ப்ரேட் நிறுவனங்களும், பெரும் அரசியல் சூதாடிகளும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அதிகாரவர்க்கமும் பயன்படுத்திக் கொள்கின்றன. கொடுத்த பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்களாக உள்ளனர்.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
கேட்க நல்லதான் இருக்கு., அமலாக்கும் சில அதிகாரிகளும் 23 ஆண்டில் 24 இடமாற்றம் சந்திக்க வேண்டிய இடமாக தமிழ்நாடு இருக்கிறது., உண்மையில் அரசின் அனைத்து அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய கடமைக்கே லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களின் கதவுகள் திறக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டா வாங்க காசு, மின் இணைப்பு வாங்க காசு, மின் இணைப்பு மாற்ற காசு, வீடுகட்ட பிளான் அப்ரூவல் வாங்க காசு, மணலை, ஜல்லியை சாலையில் கொட்டினால் கவுன்சிலருக்கு காசு, தண்ணீர் குழாய் இணைப்புக்கு காசு, மாட்டுவதற்கு காசு, தண்ணீர் வீட்டுக்குள் முறையாக வர காசு, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் வாங்க காசு, ரிஜிஸ்ட்டர் ஆபிசில் காசு, ரேசன் அட்டைவாங்க காசு, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணிப்பெண்கள் திட்டம், முதியோர் உதவித்திட்டம், விதவைகள், ஆதரவற்றோர், நலிந்தோர், வறுமையில் வாடுவோர் என எதற்கு உதவிநிதி என்றாலும் முதலில் காசு போனால்தான் அதற்கான உதவி அட்டை நம் கையிக்கு வந்து சேரும். 

வேடிக்கை மனிதர்களாய்
இதைவிட கொடுமை அரசாங்க ஆஸ்பத்திரியின் காம்பவுண்டுக்குள் போனால் சுவர் கூட காசு கேட்கும்., ஆண்குழந்தை பிறந்தா இவ்வளவு, பெண் குழந்தை பிறந்த இவ்வளவு என்று காசு கேட்பார்கள், கொடுக்கவில்லை என்றால் அங்கே உள்ள ஊழியக்ள் கேட்பார்கள் பாருங்க., பிள்ளை பிறந்த காசு கூட கொடுக்க முடியாத உனக்கு எதற்கு கல்யாணம், பெண்டாட்டி, பிள்ளையெல்லாம் என்று?. இப்படி நடந்தா காசு, உட்கார்ந்தா காசு, படுத்தா காசு, குடிக்க காசு, கழிக்க காசு, இதெல்லாம் என்ன பொழப்பு., என்று சுடுகாட்டிற்கு போய் படுத்தாலும் அங்கேயும் காசு., இப்படி பிறந்ததில் இருந்து இறப்பு வரை லஞ்சம் கொடுத்து பழகியவர்கள் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்காமல் தெரிந்தே திருடுபவனுக்கு உதவிய அந்த மணித்துளிகள் தான் இன்று நம்முடைய உரிமைகளையே திருடுகிறார்கள், ஏன் என்று கேட்க நாதியில்லாமல் வேடிக்கை மனிதர்களாய் வேடிக்கை பார்க்கிறோம்.,
  
சொல் ஒன்று செயல் இரண்டு
இலவசம் என்றால் உயிரை கொடுத்தாவது பெற வேண்டிய சூழலை வறுமை உருவாக்கி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வாங்க வந்த மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42பேர் அநியாயமாக தங்களது உயிரை 2000 ரூபாய்க்காக பறி கொடுத்தனர். இப்போதும் ஜெயலலிதா சிறைவாசம் சென்றதை ஏற்க முடியாமல் 193பேர் இறந்ததாக அதிமுக தலைமையே தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது,. வீட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் இறந்தவரை பார்த்து ஆஸ்பத்திரியில் போய் செத்திருந்தால் அதிர்ச்சியில் அம்மாவிற்காக இறந்தார் என்று நிதி உதவியை வாங்கியிருக்கலாம் அல்லவா? என்று புலம்புவது பேருந்திலும், ரயிலிலும் பார்க்க முடிகிறது.
இது லஞ்சம், ஊழல் என்பதை பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வளம் வந்துக் கொண்டு இருக்கும் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களை, மருத்துவமனைக்களை நடத்தி கல்வி மற்றும் மருத்துவ வியாபாரத்தை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள், தலைவர்கள்தான் இன்றைய கனிமவளகொள்ளையர்களாகவும் உள்ளனர்,.

உழைத்த காசு வீடு திரும்பாதா?
பெய்யும் மழையை சேகரித்து கொடுத்த மக்களுக்கு குறைந்த விலையில் அம்மா தண்ணீர் 10 ரூபாயில் நாங்கள் தருகிறோம், ஏனென்றால் கோக்கும், பெப்சியும் 20 ரூபாயில் கொள்ளையடிக்கிறார்கள் என்றார்கள். அந்த நிறுவனங்களுக்கு லிட்டர் தண்ணீர் 37பைசாவில் கொடுத்தது யார்? ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லையா? கடந்த 10 ஆண்டுகளில் பேருந்துநிலையங்களில் தண்ணீர் தொட்டிகள், அலுமினிய டம்ளர், அதை கட்டி வைத்த இரும்புசங்கிலி காணவில்லை. தண்ணீர்பாக்கெட் 4ரூபாய், பாட்டில் 23ரூபாய், கேன் 40ரூபாய் என தண்ணீர் விநியோகம் அமோகமாய்ய் நடக்கிறதே? தமிழ்நாட்டில் கடந்த 47 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் தானே ஆட்சி செய்கிறது.

எதைஎதையோ விலையில்லாமல் கொடுக்கும் ஆட்சியாளர்கள் கழிப்பறையில் கட்டணவசூல் நடத்துகிறது. இதை என்னவென்று சொல்வது. நெஞ்சுபொறுக்கு தில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால் என்றான் பாரதி., 

அரசு மருத்துவமனைகளில் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலையில் இன்று தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் மையங்களாக மாறி வருகிறது. முக்கிய சிறப்பு பிரிவுகள் ஏதும் செயல்படுவதில்லை. நவீன கருவிகள் இல்லை. இல்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அரசு மருத்துவமனையில் அந்த அளவிற்கு அவலநிலை. இந்தியாவில் 76சதவீதத்தினர் கடன் வாங்கிதான் மருத்துவம் பார்க்கும் நிலையுள்ளது.

கல்வியும் காசிருந்தால்தான், கடன் வாங்கி கழித்தலை பள்ளியில் ஆரம்பித்து கல்லூரியில் பட்டத்திற்கு பதில் கடனோடு வெளிவரும் மாணவர்களையே தமிழ்நாடு இன்று கண்டு வருகிறது. ஆம் முன்பெல்லாம் காவல்நிலையில் திருடர்களின் படம் ஒட்டப்பட்டிருக்கும். இன்றோ கல்விக்கடன் வாங்கி கட்ட முடியாத இளைஞர்களின் புகைப்படம் வங்கி வாசல்களில் ஒட்டப்படுகிறது. என்னகொடுமை சார் இது.,

இருக்கற சாலைகளை எல்லாம் ஒன்றாக்கி அனைத்தையும் தேசியநெடுஞ்சாலையாக மாற்றி அதையும் காசு பாக்குற இடமா மாத்திட்டாங்க., ஆஸ்பத்திரிக்கு அவசரமா கார் வைச்சு வந்தாலும் சுங்கக்கட்டணம், கட்டினாதான் போகமுடியும், இல்லை யென்றால் வந்தவழியில் ஊரின் சுடுகாட்டிற்குதான் போக வேண்டும்., இது ஒரு பொழப்பா? மகாகவி பாரதி கேட்டனே? சீ நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு என்று? 

காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி, வற்றாத பொருநை நதி என்று பெருமை பொங்கிய தமிழகத்தில் எல்லா ஆறும் வற்றி மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆற்றுமணல் அள்ளும் இடத்தில் யூனிட் 1450 ரூபாய் என்றாலும் லோடு 2900 ரூபாய், போக்குவரத்து செலவு சேர்த்தாலும் அடக்கவில்லை 5000, 6000 ரூபாயை தாண்டக்கூடாது. ஆனால் நிலையென்ன? ஒரு லோடு மணலிற்கு 11000 முதல் 25000 வரை சென்று இறங்கியது. நிலத்தடி நீரை பாதிக்கும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டது. பல ஆயிரம்கோடி இதில் கொள்ளையடிக்கப்பட்டது.

"உலகில் அதிகமான தாதுவளம் கொண்ட மணலும், கனிமங்களும் கிடைப்பதில் 46 கோடி டன் வள ஆதாரங்களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத்தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல்லும் தகவல்கள்,. இவற்றில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்ததவி.வி.எம் நிறுவனத்தின் சாதனை

கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் மாறி மாறி சொத்துப்பட்டியல் போட்டு காட்டிக்கொண்டே இருக்கிறது. மக்களுக்கு கோபம் வர மறுக்கிறது. இது மக்களிடம் சுரண்டியது. மக்களை ஏமாற்றியது. மக்களின் சட்டைபையில் தினமும் சுரண்டிக் கொழுக்கும் ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் அவ்வப்போது விலையில்லா பொருட்களை வழங்குவது என்பது, அழும் குழந்தைக்கு தேனை எடுத்து நாக்கில் தடவி விடுவது போல்தான். இன்று வேகமாக இன்னும் எல்லோரையும் ஒரு சேர நாக்கை வெளியே நீட்டச்சொல்லி ஒரே நேரத்தில் தடவி விடும் செயலை ஆளும் வர்க்கம் செய்து வருகிறது., இவர்கள் ஒரு குற்றத்தை மறைக்க மேலும் மேலும் தவறை செய்து கொண்டே இருக்கிறார்கள்., வீசும் காற்று ஒரு பக்கமே வீசுவதில்லை. மாறி அடிக்கும் போது இவர்கள் ஓட்டம் எடுப்பார்கள். 

இவர்களில் இருந்து மாறுபட்டு ஊழலுக்கு அப்பாற்பட்டு எளிமையான தியாகவாழ்க்கை வாழும் இடதுசாரிகளும் இந்த மண்ணில்தான் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்,. யார் மக்களுக்காக செயல்படுகிறார்கள், யார் தேசத்தை, மக்களை, இயற்கையை பாதுகாக்கிறார்கள் என்ற புரிதலை இளைஞர் பட்டாளம் உருவாக்க வேண்டும்.

நன்றி
இளைஞர் முழக்கம்
2014-நவம்பர்

No comments:

Post a Comment