”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

*ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணிப்படை - கியூபா*

‘’உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத் தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்; அவனது இன்றைய கனவுகள்தான் நாளைய நீதிகளாக மாறும் ஏனெனில் அவன் வரலாற்றின் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறான்; காலத்தின் கொப்பரையில் எரிந்துவரும் மக்கள் ரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கிறான்; எனவே சிறிது கூடத் தயக்கமின்றி எதிர்காலம் கடமையின் பக்கத்தில் தான் இருக்கிறது என்பதை அறிகிறான்’’.  என்ற ஜோஸ் மார்த்தியின்  வார்த்தைகளில் தட்டியெழுப்பட்டது கியூபா விடுதலை இயக்கமும், புரட்சிகர உணர்வும்.  இதுபோன்ற உயர்ந்த குறிக்கோளே இளைஞர்களை தூண்டியது என்பதை உணரும்போதுதான், சாண்டியாகோவில் வீழ்ந்த இளைஞர்களின் வீர உணர்வை நம்மால் உணரமுடியும்.

 *கொடுங்கோலன் பாடிஸ்டா* 

அமெரிக்க பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் லத்தீன் அமெரிக்காவின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டுக் கொண்டு இருந்தது. பயிர் செய்யப்படாத ஒரு துண்டு நிலம் இருக்கும் போது பசியுடன் பல ஆயிரக்கணக்கானவர்கள் இரவு தூங்க செல்வது கொடுமையிலும் கொடுமை. போதுமான உணவோ, சுகாதாரவோ இல்லாத நிலையில் இது என்னவென்று அறியாத நிலையில் 90 சதவீதம் பேரும், தனது  பெயரைக்கூட எழுத தெரியாத 80 சதவீதம் மக்களும்  கொண்ட தேசமாக கியூபாவும் அன்றைய தென் அமெரிக்காவின் பூர்வகுடி கிராமங்களின் நிலை இருந்தது. கொலம்பஸ் கண்ட அமெரிக்கா நாகரிகத்தின் அடையாளம்  என உலகம் தூக்கிக் கொண்டாடுவது, செவ்விந்திய பூர்வகுடிகளின் இரத்தத்தில், உழைப்பில் உருவாக்கப்பட்ட உலகம் என்பதை மேற்கத்திய ஊடகங்கள் மறைத்தே வந்துள்ளன. இச்சூழலில் அமெரிக்காவின்  அடிமை பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் மக்களின் துன்ப துயரங்களை மார்த்தியின் வழியில் நின்று தூக்கி எறிய தூண்டப்பட்ட இயக்கமே ஜூலை 26 உருவான பாடிஸ்டாவிற்கு எதிரான போராட்டம். 

கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களிடம் அவதூறுகளை அள்ளி வீசவும், பயங்கரமான பொய்களை பரப்பவும் தயங்கியதில்லை. கியூபாவை இரத்த வெள்ளத்தில் குளிப்பாட்ட தயங்காத கொலைகாரனாக பாடிஸ்டா இராணுவத்தை கொண்டு தாக்கியபோது அதனை கியூபா இளைஞர்கள் எதிர்கொண்டார்கள். இந்த நிலைமைகளை ஆய்வு செய்த  பிடல், நகர்புற, கிராமப்புற பணி நிலைமைகளையும் நல்ல வாழ்வு நிலைமைகளையும் கோரும் வேலை நிறுத்தங்களையும், நிலம் கோரும் விவசாயிகளின் போராட்டத்தையும் ஒரு தேசத்தின் ஆழமான ஆசைகளையும் பலவந்தமாக அடக்கிவிட முடியும். எனவே தான் இத்தகைய அரசுகளை அமெரிக்க பெருமுதலாளிகள் தேர்வு செய்கிறார்கள். அதனால்தான் பலவந்தத்தின் அடிப்படையிலான அரசுகள் இவ்வளவு நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடிகிறது என பாடிஸ்டா அரசை சாடினார்..

 *ஜூலை 26 இயக்கத்தின் அறம் சார் நடவடிக்கை.* 

பிடல் தலைமையில் மொன்கடா ராணுவ முகாமுள்ள சாண்டியாகோ நோக்கி ஆயுதந்தாங்கிய புரட்சியை நடத்த ஜூலை 26ம் தேதியை தீர்மானித்தார். காரணம் ஜோஸ் மார்த்தி தனது முதல் சுதந்திரப்போராட்டத்தை தொடங்கிய நாள் ஜூலை 26 ஆகும். கியூபாவில் பற்றி எறிந்த தேசிய உணர்வை கணக்கில் கொண்டு இதை தீர்மானித்தார்.  மேலும்  ஜூலை மாதத்தில் இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த பண்டிகை கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் விருந்துகளில் ராணுவ முகாமை விட்டு  நகருக்குள் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் இருப்பார்கள். அந்த அதிகாலை நேரத்தில் தாக்குவது என முடிவெடுத்து துவக்கினார்கள். 

அதிகாலை 5 மணிக்கு பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் வீரர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். “நாம் சண்டையிடும் போது பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது. அவசியமில்லாமல் பொதுசொத்துகளை நாசப்படுத்தக்கூடாது, சரணடையும் வீரர்களை சுடக்கூடாது, கைது செய்யப்படும் வீரர்களை உரிய மரியாதையுடன் நடத்துவது, காயம் பட்டால் சிகிச்சை அளிப்பது, நமது போராட்டம் குறித்து அவர்களிடம் விளக்கி கூறுவது, அவர்கள் வீட்டிற்கு போக விரும்பினால் விடுதலை செய்து அனுப்பிட வேண்டும். இவற்றை மீறி அவர்கள்  தாக்கினால் தற்காப்பிற்காக நீங்கள் தாக்கலாம்“  போரில் அவர் காட்டிய அறமே இன்றும் கியூப மக்களை வழிநடத்துகிறது. 123 வீரர்கள் பிடலின் தலைமையில் அணிவகுத்தனர்.ஜூலை 29ம் தேதி இது தோற்கடிக்கப்பட்டு பிடல் உட்பட கைது செய்யப்பட்டனர்.  இதன் மீது பாடிஸ்டா அரசு தனி சட்டம் ஒன்று நிறைவேற்றி தனி நீதிமன்றம் அமைத்து அதன் தீர்ப்பே இறுதியானது. மேல் முறையீடு செய்ய சட்டப்படி வழியில்லை என்ற அளவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.   

நீதிமன்றத்தில் பிடல் 

வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற புகழ்  பெற்ற உரையை நீதிமன்ற விசாரணையின் போது நிகழ்ச்சினார். பிடல் காஸ்ட்ரோ.  1933ல் சிறை கைதிகளை படுகொலை செய்த கொடூரம் பாடிஸ்டாவோடு இணைந்தது. ஆவேசத்தின் உச்சகட்டத்தில் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. ஆனால் ஜூலை 26 துவங்கிய பாடிஸ்டாவுக்கு எதிரான புரட்சியை நசுக்க சாண்டியாகோ டி கியூபாவில் எல்லா வகையான அத்துமீறல்களையும், கொடூரங்களையும் அந்த வாரம் முழுவதும் நிகழ்த்தினான். சித்ரவதைகளின் பயிற்சிகூடமாக பயன்படுத்தினான். சித்ரவதை செய்து மாடியில் இருந்து தூக்கி எறிந்து சுட்டுக் கொன்றான். 

சித்ரவதைகளின் போது ஆண்களின் வீரத்தை கண்டு சலித்துபோன அவர்கள், பெண்களின்  தீரமிக உறுதியை குலைக்க முயற்சி செய்தார்கள். பாடிஸ்டாவின் ராணுவ வீரர்கள் இரத்தம் தோய்ந்த கண்னை எடுத்து ஒரு பெண்ணிடம் காட்டி இது உனது சகோதரனின்  கண், அவன் சொல்ல மறுத்ததை நீ சொல்லவில்லையென்றால் அவனது மறு கண்ணையும் தோண்டி எடுத்து விடுவோம் என சொன்ன போது, சகோதரியோ, நீங்கள் ஒரு கண்ணை பிடுங்கி எடுத்தபின்னும் அவன் பேச மறுத்த போதும் நான் மட்டும் பேசுவேனா? என பதிலுரைத்தாள். சற்று நேரத்தில் மீண்டும் வந்து உன் காதலனையும் சுட்டு கொன்றுவிட்டோம் என சொன்ன போது, என் காதலன்  சாகவில்லை, ஏனெனில் தனது நாட்டிற்காக உயிரை விடுவதென்பது எப்போதும் வாழ்வதற்கு சமமானது.  

”இறந்தவர்களின் சமாதியருகே கண்ணீர் சிந்துவதற்கும் ஒர் எல்லையுண்டு, தாய்  நாட்டின் மிதும் அதன் புகழின் மீதும் எல்லையற்ற அன்பு செலுத்துவதுதான் அந்த எல்லை. இந்த அன்பு என்றும் தோல்வியடைவதில்லை. நம்பிக்கை இழப்பதில்லை, சுருங்கிவிடுவதில்லை, தியாகிகளின் சமாதிகளே நமது ஆராதனைக்குரிய தேவாலயங்கள்“.  தாய் நாட்டின் மடியில் ஒருவன்  உயிர்விடும்போது துன்பம்  முடிகிறது. சிறைச்  சங்கிலிகள் தெறிகின்றன. இறுதியில் அந்த மரணத்தில் வாழ்வு துவங்குகிறது.  என்ற பிடலின் உரையின் அடிநாதம் புரட்சியின் தியாகத் தழும்புகளை தட்டி எழுப்புகிறது.

 *புரட்சியின்  போது கியூபா* 

1958 டிசம்பர் திங்களின் கடைசிநாட்களில் பாடிஸ்டா தனது மாளிகை பொருட்களோடு தங்கம், பணத்தை கடத்திக்கொண்டு ஓடிவிட்டான். 1959 ஜனவரி துவக்கநாளில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய  பிடல் ராணுவ சதியால் செய்யப்படும் மாற்றங்களை ஏற்க இயலாது, புரட்சியின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்படும் என அறிவித்து, ஹவானாவை கைப்பற்ற சேகுவேராவுக்கு உத்தரவிட்டார். புரட்சி வெற்றி பெற்றது. மக்களின்  பேராதரவோடு.. 

ஃபூஜென்ஸியோ பாடிஸ்டாவின் ஆட்சி கியூபாவிலிருந்து அமெரிக்க ஏகபோகங் களுக்குப் பொருந்தக் கூடிய ஆட்சி முறையாக இருந்தது. கியூப மக்களுக்குப் பொருந்தக் கூடியதாக அது இல்லை. கியூப மக்கள் ஏராளமான தியாகங்கள் புரிந்து, அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்தனர்.

கியூபாவில் புரட்சி வெற்றியடைந்த போது, அங்கிருந்த நிலை குறித்து பிடல் கூறுகிறார். அனைத்துக்கும் முதலாவதாக வேலை செய்யத் தயாராக இருந்த சுமார் 60,000 கியூபர்கள் வேலையின்றி இருந்தனர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் பெரும் பொருளாதார மந்தநிலை பேரழிவை உண்டாக்கிய சமயத்தில், அங்கிருந்த வேலையற்றோரின் எண்ணிக்கைக்கு சமமானது. வெறும் 60 லட்சம் ஜனத்தொகையில் பாதிக்கு மேல், 30 லட்சம் பேருக்கு மேல் மின்வசதி இல்லை. குறைந்த பட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் 35 லட்சம் பேர் சேரிகளில் வசித்தனர். நகரங்களில் மக்களின் வருவாயில் சுமார் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகை எடுத்துக் கொண்டது. மின்சாரக் கட்டணமும் வாடகையும் உலகிலேயே அதிகமானவைகளில் ஒன்றாக இருந்தன.

70% கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை, 37% கல்வியறிவற்றவர்களாக, 2 சதவிதத்தினர் காசநோயால் துன்புற்றனர், 95 சதவிதக் குழந்தைகள் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. வாழ்க்கைத்தரம் வருந்தத்தக்க அளவு கீழாக இருந்தது. எண்பத்து ஐந்து சதவீத விவசாயிகள் தமது நிலத்துக்கு தனது மொத்த வருவாயில் 30 சதத்தை வாடகையாக செலுத்தி வந்தனர். அதே சமயம் கிராமப்புறங்களில் 46 சத நிலத்தை மொத்த நிலஉடைமையாளர்களில் 15 சதவீதத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மருத்துவமனை படுக்கை வசதி நகைப்புக்கிடமானதாக இருந்தது. பொது உபயோக வசதிகள், மின்சார வசதி, தொலைபேசி வேலைகள் அனைத்தும் அமெரிக்க ஏகபோகங்களுக்கு சொந்தமாக இருந்தன. வங்கித்துறை இறக்குமதி வர்த்தகம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரும்பகுதி: சர்க்கரை உற்பத்தியில் கியூபாவில் சிறந்த விளைநிலங்களில் பெரும்பகுதி மற்றும் அனைத்து தொழில்களிலும் முக்கியமான தொழிற்சாலைகள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்தன.

 *புரட்சிகர அரசின் முன்னுரிமைத்திட்டம்* 

புரட்சி அரசு தனது முதல் நடவடிக்கையாக வீட்டு வாடகையை 50 சத குறைத்தது. இரண்டாவதாக அமெரிக்க ஏகபோகத்துக்குச் சொந்தமான ஒரு தொலைபேசி நிறுவனத்துக்கு பாடிஸ்டா அளித்திருந்த சலுகையை ரத்து செய்தது அந்தச் சட்டம். மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால், மதிப்பு மிக்க சலுகைகள் பெறப்பட்டிருந்தன. புரட்சி அரசு இந்தச் சலுகைகளையெல்லாம் ரத்து செய்து தொலைபேசி சேவைகளுக்கு நியாயமான கட்டணங்களை மறுபடி நிர்ணயித்தது. இதனால் அமெரிக்க ஏகபோகங்களுடன் முதல் முரண்பாடு கிளம்பியது. 

மூன்றாவது நடவடிக்கை மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தது. அது உலகிலேயே அதிகமானவைகளில் ஒன்றாக இருந்தது. இது அமெரிக்க ஏகபோகங்களுடன் இரண்டாவது முரண்பாட்டுக்கு இட்டுச் சென்றது. 

மக்களுக்கு மிகவும் தேவையான, தவிர்க்க முடியாத சட்டம், உலக மக்களுக்கும் கூட விரைவிலோ, பின்னாலோ தேவையான, தவிர்க்க முடியாத சட்டம், இயல்பாகவே, கொள்கையளவில் எல்லோரும் நிலச்சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்றனர். அதை மறுக்க யாருக்கும் துணிவில்லை; கியூபாவில் நில உடைமையாளர்கள் கூட நிலச் சீர்திருத்தத்தை ஆதரித்தனர். 2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அமெரிக்க ஏகபோகங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய சீர்திருத்தம் அதை 40 ஹெக்டேர்களாகக் குறைந்தது. இந்த ஏகபோகங்களுக்கும், நில உடைமையாளர் களுக்கும் பெருத்த அக்கிரமமாகத் தோன்றியது. இதனால் நிலமற்ற 2 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு மேல் கிராமப்புறத்தில் வசித்தன. அந்த நிலத்தில்தான் தேவையான உணவு வகைகள் பயிரிடப்பட்டன. அமெரிக்க ஏகபோகங்களிடம் வெறும் நிலம் மட்டும் இல்லை, சிறந்த சுரங்கங்களுக்கும் இருந்தன. கியூபா ஏராளமான துத்தநாகத்தை உற்பத்தி செய்கிறது. அவை அமெரிக்க நலன்களுக்காக சுரண்டப்படுகின்றன. அமெரிக்க நிறுவனமான மோவாபே நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் 120 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் அளவுக்கு ஏராளமான சலுகைகளைப் பெற்றிருந்தது. 

எனவே இந்த ஏகபோக நிறுவனங்கள் தாம் ஏற்றுமதி செய்யும் கனிமங்களுக்கு 25 சதவிகிதம் வரி கட்ட வேண்டுமென்று புரட்சி அரசு சட்டம் நிறைவேற்றியது. புரட்சி அரசின் அணுகுமுறை ஏற்கனவே மிகவும் துணிச்சலாக இருந்தது. அது சர்வதேச மின் டிரஸ்டின் நலன்களுடன் மோதியது சர்வதேச தொலைபேசி டிரஸ்டின் நலன்களுடன் மோதியது மொத்தத்தில், அமெரிக்காவின் மிகவும் வலிமையான நலன்களுடன் மோதியது.

 *மருத்துவத்துறையில் உலக சாதனை* 

பாடிஸ்டாவை விரட்டி புரட்சியின் மூலம் புதிய கியூபா அமைக்கப்பட்ட ஒராண்டடிற்குள் மருத்துவத்தை அனைவருக்குமானதாக மாற்ற அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1960 ஆம் ஆண்டில் இருந்தே இதர நாடுகளுக்கான உதவியை செய்திட துவங்கிவிட்டது. 1960 ல் சிலியின் பூகம்ப பாதிப்பிற்கான மருத்துவ உதவியும் 1963ல் அல்ஜீரியாவிற்கும் உதவிகள் என செய்தது. 1960 களில் இருந்து ஆப்பிரிக்காவின் 39 நாடுகளில் கியூபாவின் 79000 மருத்துவ வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் உலகம் முழுவதும் 164 நாடுகளில் 4 லட்சம் கியூபா வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

2014ல் எப்லா வைரஸ் தாக்குதல் பரவிய காலத்தில் அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாமா “கியூபாவும், அமெரிக்காவும் இணைந்து ஒவ்வொரு பக்கமும் நோய் பரவலை தடுத்து நிறுத்து மக்களை காப்பாற்றும்” என கூறினார். கியூபாவின் இத்தகைய பணியின் காரணமாக உலகம் முழுவதும்  லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளது.  120 கோடி மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 22 லட்சம் குழந்தைகள் பிறப்பதற்கான பிரசவத்தை உறுதி செய்து பூமிப் பந்தில் ஆரோக்கியமாக வளர வழி வகுத்துள்ளது. ஏறத்தாழ 80 லட்சம் அறுவை சிகிச்சைகளை கியூப மருத்துவர்கள் செய்துள்ளனர்.  

கியூபா மருத்துவ சேவைகளை உலக நாடுகளுக்கு ஆற்றுவது மட்டுமல்ல, அந்த நாடுகளே மருத்துவத்துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று திட்டத்தை வகுத்தது கியூபா. அதற்கான உடனடி தேவையாக வந்த பேரிடர்தான் ஹரிகேன் புயல். மத்திய அமெரிக்காவை கடுமையாக தாக்கிய பின்ணணியில் 30000 பொதுமக்கள் இறந்ததும், 25 லட்சம் பேர் வீடிழந்து பாதிக்கப்பட்ட நிலையில்தான் நிரந்தரமாக மருத்துவபணியை செய்வதற்கான திட்டமிடலையும் கியூபா உருவாக்கியது.

கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ 1999ல் லத்தின் அமெரிக்காவிற்கான மருத்துவப் பயிற்சி மையத்தினை கியூபாவில் துவங்கினார். 1959 முதல் பொருளாதார தடையை விதித்து கியூபாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என துடித்து வரும் அமெரிக்கா உள்ளிட்டு 105 நாடுகளை சேர்ந்த 29000 பேர் கியூப பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களாக படித்து பட்டம் பெற்று வெளி வந்தனர். இன்னும் சிறப்பாக சொல்கிறார்கள் அதில் பாதி பேர் பெண்கள், 75 சதவீதம் பேர் அந்த நாடுகளின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல 100 பழங்குடியின பிரிவினர்கள் வீட்டுக் குழந்தைகள் என்பது மேலும் சிறப்பானது. பிடல் என்ற அந்த மகத்தான மனிதன் மருத்துவர்களை கூட பணக்கார வீடுகளில் இருந்து தேர்வு செய்யவில்லை, பெண்களாக, பழங்குடியினராக, விவசாயத் தொழிலாளியாக தேர்வு செய்து மருத்துவர்களாக உருவாக்கியதே இன்றும் எந்த நாடுகள் பாதிப்பு என்றால் முதல் வரிசையில் கியூபாவின் மருத்துவர்கள் நிற்பதன் பொருள் புரியும். 

 *மானுடகுல காதலர்கள் நாங்கள்* 

பிடலின்  வார்த்தைகளில் சொல்வதென்றால் “புரட்சிகாரர்களும், சோசலிசவாதிகளும், மார்க்சிய-லெனினியவாதிகளுமாகிய நாங்கள் பகைமையை ஒரு கோட்பாடாக கற்பிப்பதில்லை. இப்படி சொல்வதால் எங்களுக்கு ஒடுக்குமுறை அமைப்போடு ஏதோவொரு இணக்க உணர்வு இருப்பதாலோ அதை எதிர்த்து எவ்வளவு வலுவாகப் போராட வேண்டுமோ அவ்வளவு வலுவாக நாங்கள் போராடவில்லை என்றோ அர்த்தமாகாது. ஏகாதிபத்தியத்தின் எல்லா கொடுஞ்செயல்களாலும் நாங்கள் பாதிக்கபட்டோம். ஆனாலும் ஒரு அமெரிக்கர் இந்த நாட்டுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கே ஒவ்வொருவரும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஏனென்றால் நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. நாங்கள் ஏற்க மறுப்பதும், வெறுப்பதும் எதுவென்றால் அந்த அமைப்பு முறையைதான். தனிப்பட்ட மனிதர்கள் மீது பகையில்லை. அநீதியான சுரண்டல் அமைப்பின் மீதுதான் பகை என்பதே உண்மை.” ஆம் மற்றொரு வார்த்தையில் சொல்வதென்றால் புரட்சி என்பதே அன்பு தான்., உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ள ஏகாதிபத்திய, முதலாளித்துவ அமைப்பின் மீதே பகை கொள்கிறோம். மனிதகுல விரோதி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மனித நேய சோசலிச கியூபாவை பாதுகாக்க கரம் கோர்ப்போம்… 

எனவே உலகிற்கு உரக்க சொல்லும் தருணமிது. ஒரு கடலின் அலைகள் நாம், ஒரு தோட்டத்தின் மரங்கள் நாம், ஒரு மரத்தின் பூக்கள் நாம் என்று சர்வதேசியம் சொல்லும் சோசலிசத்தின் புதல்வர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். பூமிபந்தில் உள்ள உயிர்களின் மீது பேரன்பு கொண்டுள்ளோம்.

செ.முத்துக்கண்ணன்

நன்றி தீக்கதிர் 26.7.25

இயற்கையின் குழந்தைகள் நாம் !

 

   மூலதனம் நூலில் மார்க்ஸ் இயற்கைக்கும், மனிதனுக்குமான தொடர்பு குறித்து கூறும் போது உழைப்பு என்பது எல்லாவற்றும் மேலானது, இயற்கையின் ஒரு பகுதியாக உள்ள மனிதன் தன் உழைப் பாற்றல் மூலம், இயற்கையில் உள் அடங்கி யுள்ள அனைத்து வளங்களை யும், ஆற்றல்களையும் கை, கால் உழைப்பின் மூலம் மட்டுமே தனதாக்கி கொள்கிறான்.  இது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பரஸ்பர பரிமாற்ற  உறவாகும்.  ஆனால் இதனை மீறும் வகையில் முதலாளித்துவம் தனது சுரண்டல் கொள்கையால் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவில் பகைமையை வளர்க்கிறது.  மனித உழைப்போடு இயந்திரங்கள் உதவி கொண்டு பூமியின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நிலையை  முதலாளித்துவ உற்பத்தி முறை மேற்கொள்கிறது

 

உருக்கும் வெப்பம்

1850 மற்றும் 2019க்கு இடையில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.07 °C (1.9 °F) ஆகும். தொழில்துறைக்கு முந்தைய காலத்தி லிருந்து உலகளாவிய சராசரி வெப்ப நிலை 0.8 முதல் 1.2 டிகிரி செல்சியஸ் (1.4 மற்றும் 2.2 டிகிரி பாரன்ஹீட்) வரை அதிகரித்ததற்கும், 1850 -1900 சராசரியுடன் ஒப்பிடுகையில் 2100 ஆம் ஆண்டளவில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 1.0 மற்றும் 1.8 °C (1.8 மற்றும் 3.2 °F) வரை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

உலக சராசரி வெப்பநிலை இவ்வளவு குறுகிய காலத்தில் 2°C (3.6°F)க்கு மேல் உயர்ந்தால் குறிப்பிடத்தக்க சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று  காலநிலை விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொள் கிறார்கள். இதனால் பல தாவர மற்றும் விலங்கு இனங்களின் அழிவு, விவசாய முறைகளில் மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை அடங்கும் .

1901 மற்றும் 2018 க்கு இடையில் உலகளாவிய சராசரி கடல் மட்டம் சுமார் 20 செமீ (7.9 அங்குலம்) உயர்ந்துள்ளது என்றும், முதல் பாதியை விட 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்தது என்றும் AR6 அறிக்கை குறிப்பிட்டது.

வளிமண்டலத்தில் கார்பன்-டைஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடுகளின் செறிவுகள் 800,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனிக்கட்டி களில் காணப்பட்டதை விட தற்போது அதிகமாக இருப்பதாக 2014 இல் IPCC ( காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு) முதன் முதலில் அறிவித்தது. இந்த அனைத்து வாயுக்களிலும், கார்பன்டைஆக்சைடு மிக முக்கியமானது.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில்துறை யுகத்தின் தொடக்கத்தில், வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவுகள் ஒரு மில்லியனுக்கு தோராயமாக 280 பிபிஎம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அவை 419 ppm ஆகவும், மேலும், புதைபடிவ எரிபொருள்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டால், 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவை 550 ppm ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது

பல்லாயிரம் ஆண்டுகளாக உறை நிலையில் இருந்த பனிப்பாறைகள் இன்று வேகமாக உருகி வருகின்றன. நாள்தோறும் வெள்ளப்பெருக்கு, வறட்சிபுயல்கள், நிலச் சரிவுகள், காட்டுத்தீ என்பது பூமியின் ஏதாவது ஒரு பகுதியின் நிகழ்வாக நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி இனங்கள் காடுகள் அழிப்பின் காரணமாக அழிவுக்குள்ளாகின்றன. மழைகாடுகள் அழிப்பால் ஆண்டுக்கு 4000க்கும் மேலான தாவர இனங்களை இழக்கிறோம். 30 சதவீதம் மர இனங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக பிஜிசிஐ அறிக்கை கூறுகிறது.  இதுவும் அதிகமான தாக்கத்தை உருவாக்கும் கூறுகளில் ஒன்றாகும்.

 

வெப்ப மயமாதலால்  பரவும் நோய்கள்

மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பாக மனித ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி, கடந்த அரை நூற்றாண்டில் 20 லட்சம் பேர் இறப்பும், 4.3 டிரில்லியன் டாலர் பொருளாதார இழப்பும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது. கடும் வெப்ப அலை காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர் களும், பிறந்த ஒரு மாத குழந்தைகளிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இருதய நோய், நீரிழிவு, மனநலம், ஆஸ்துமா, புற்றுநோய் மற்றம் சில தொற்று நோய்கள் பிரதான காரணமாக உள்ளது.

தொற்று நோய்கள் சுகாதார நிலைமைகளை மோசமாக்கும் என்று IPCC (Intergovern mental Panel on Climate Change) கணித்துள்ளது. குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில், வெப்ப நிலை அதிகரிப்பது கொசு பெருக்கம் மற்றும் பிற பூச்சிகளால் மலேரியா, டெங்கு போன்ற நோய்த் தொற்றுகள் அதிகரிக்கும். வெப்பநிலை மாற்றங்களை பொறுத்துக்கொள்ளும் திறன் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகிறது.

ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள். இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக ஏற்கனவே சூடான பகுதிகளில் வசிப்பவர்கள், அதிக வெப்பநிலையால் பாதிக்கப் படுகின்றனர், ஏனெனில் அவர்களின் இருதய அமைப்பு தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும். வெப்பநிலை ஓசோன் செறிவை அதிகரிக்கிறது, இது மக்களின் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தும் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ அமைப்புகள் கூறுகிறது.

மனித உடலில் சேமிக்கப்படும் வெப்பத்தின் அளவு (1) சுற்றுச்சூழல் வெப்ப அழுத்தத்தின் காரணமாக வளர்சிதை மாற்ற செயல்முறைகளினால் வெப்பத்தை அகற்ற இயலாத நிலை ஏற்படுகிறது. (உதாரணமாக, அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம், குறைந்த காற்று, அதிக வெப்ப கதிர்வீச்சு) ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறது.  (2) வெப்ப இழப்புக்கு தடையை உருவாக்கும் ஆடை,  (3) வெளிப்புறத்தில் இருந்து உடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு, இவற்றின் காரணமாக உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்க முடியாமல், வெப்ப அதிகரிப்பை அகற்றும் முயற்சியில் வெப்ப சோர்வு மற்றும் வெப்பமூட்டும் அபாயத்தை அதிகரிக்கிறது. குளிர்ச்சியடைய முயற்சிக்கும் போது உடலில் ஏற்படும் சுமை, இதயம் மற்றும் சிறுநீரகங்களை அழுத்துகிறது. இதன் விளைவாக, உடலின் நாள்பட்ட வெப்ப உச்சநிலை  இருதய அழுத்தம், நுரையீரல் சுவாசம்,  சீறுநீரக பாதிப்புகள், நீரிழிவு மற்றும் அது சார்ந்த பாதிப்புகளை தீவிரமாக்குகின்றன.

பணக்கார சமூகங்கள் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தலாம்,  எடுத்துக்காட்டாக, அதிக சக்தி வாய்ந்த குளிரூட்டிகளின் பயன்பாடு மற்றும் வீடுகளின் கட்டுமானம் ஆகியவை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. மறுபுறம், சாமான்ய மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை


கார்ப்ரேட் லாபவெறியும் - மாற்று நடவடிக்கைகளும்

பருவநிலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் வளிமண்டல பசுமை வாயுவின் அதிகரிப்பு நிச்சயமாக மனித நடவடிக்கைகளால் குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளால் பெரும் பகுதி ஏற்படுகிறது.  2030ல் 50 சதவீதம் குறைய வேண்டிய உலகளாவிய உமிழ்வுகள் உண்மையில் 16 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் அதிக வருமானம் உள்ள 10 சதவீதம் வீடுகளில் இருந்து 45 சதவீதம் பசுமை குடில் வாயு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் உலகின் கடைநிலையில் வருமானம் உள்ள 50 சதவீதம்  வீடுகளில் 15 சதவீதம் வெளிப்படுகிறது. ஆனால் உண்மையில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள்  சாமான்ய ஏழை, எளிய மக்களே. உண்மையில் இன்று  3.6 பில்லியன் மக்கள் கடும் பருவநிலை மாற்ற பாதிப்பால் அவதிக்குள்ளாகின்றனர். ( ஆர்டிக், மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், தெற்கு ஆசியா, சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிறு தீவு பகுதிகளில் கடும் வறுமையும், நீர் பற்றாகுறையும் கடும் பிரச்சனைகளாக மாறி வருகின்றன )

பசுமை வாயு உமிழ்வு என்பது 2019ல் 59 ஜிகாடன்னாக இருந்தது. 2010ம் ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். 1990 யை விட 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலகமயத்தின் சாபக் கொடையாகும். வரும் ஆண்டுகளில் 2030ல் 33.7 ஜிகா டன்னாகவும், 2040ல் 18.3 ஜிகா டன்னாக வும் குறைக்கப்பட வேண்டும். இதற் காக 160 நாடுகள் ஒன்று சேர்ந்து பருவநிலை மாற்றத்திற்கான  ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உருவாக்கி அதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரினால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் வளர்முக நாடுகளுக்கு குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் நிதி உதவி தருவது என்ற உறுதிமொழியை தள்ளிப்போட்டது மட்டுமல்ல, சுமையை வளர்முக நாடுகள் மீது திணிக்க முயற்சி செய்கின்றன. ஆண்டுக்கு  127 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டிய தருணத்தில், 23 பில்லியன் டாலர் முதல் 46 பில்லியன் டாலர் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. பசுமை வாயுவை அதிகரிப்பதில் ஏகாதி பத்திய நாடுகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கொரோனா தொற்றுக்குபின் உலக அளவில் வளர்முக நாடுகள் கடும் பாதிப்பை பொருளாதார தளத்தில் சந்தித்து உள்ளன. இந்த நிலையில்  பாரீஸ் ஒப்பந்த அடிப்படையில் கூடுதலான நிதியை வளர்ந்த நாடுகள் ஒதுக்க வேண்டும். உலகளாவிய வெப்பமயமாதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, உலகளாவிய தெற்கில் உள்ள பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தாக இருக்க கூடாது எனில் இதற்கு சமபங்கு அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.

உலகமயத்தின் லாபவெறி காரணமாக காடுகளும், விவசாய நிலங்களும் மாற்றி அமைக்க ப்படுகின்றன. நகரமயமாக்கலை வேகமாக ஊக்குவிக்கின்றன.  நகர கட்டமைப்புகளை மாற்றி அமைத்து பிரமாண்ட மாக்குகின்றன. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி அழகிய நகரங்கள் என வானுயுயர்ந்த கட்டுமானங்களை முன் வைக்கிறது. மின் உற்பத்தி, கட்டிடங்கள், தொழில்துறை மற்றும் தனி நபர் போக்குவரத்து ஆகியவை உலகளாவிய உமிழ்வுகளில் 80% க்கு காரணமாகின்றன.  மீதி விவசாயம், வனவியல் மற்றும் பிற நில பயன்பாடுகள் ஆகியவையாகும்.

இந்தியாவில் கூட மொத்த உற்பத்தியில் 75 சதவீதம் நகர்புறம் சார்ந்து உள்ளது.  நாடு விடுதலை அடைந்த போது 14 சதவீதம் நகர்புறங்களில் இருந்த மக்கள் தொகை இன்று 35 சதவீதத்தை கடந்துள்ளது.  தமிழகத்தில் ஏறத்தாழ 48 சதவீதத்தை  கடந்துள்ளது. உலகின் மாசடைந்த காற்றை சுவாசிப்பதில் 30ல் 21 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளது. 

     பூமி பந்திற்கு விரோதமான   பருவநிலை மாற்றத்தை குறைக்கவும், கரிய மில வாயுவை கட்டுக் குள் கொண்டு வர உடனடியாக பல செயல்திட்டங் களை உருவாக்க வேண்டும் என உலக ஆதார நிறுவனம் சில  ஆலோசனைகளை முன்வைக்கிறது. குறிப்பாக,

நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது,  இயற்கை ( சூரிய, காற்று, நீர் ) வள ஆற்றல்களை அதிகப் படுத்துவது, சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் கட்டுமானப்பணிகளை குறைப்பது,  மின் வாகனங் களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, பொது போக்குவரத்துகளை அதிகப் படுத்துவது, தனிநபர் வாகனங்களை குறைப்பது, சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பது,  உணவுப் பொருட்கள், காய்கறிகள் வீணாக்குவதை குறைப்பது, வனங்களை அழிக்கப்படுவதை தடுப்பது, சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிகளை கட்டுப் படுத்துவது அவசியமாகும்.

 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இயற்கை சார்ந்த வாழ்வியல்

சங்க காலம் தொட்டு இன்று வரை மனிதர்களுக்கும், இயற்கைக்குமான போராட்டத்தில் இன்று முதலாளித்துவ அமைப்பு முறை இயற்கையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது.  இதன் விளைவை பூமி பந்து சந்தித்து வருகிறது. புவி வெப்பமய மாக்கலும், புதிய நோய்களின் தோற்றங்களும் மனித குலத்தை கலங்கடித்து வருகிறது. 

சேரும் நாற்றமும் பலவின் சுவையும்,  

வேறு படக் கவினிய தேம்  மாங் கனியும்

பல் வேறு உருவின் காயும், பழனும்,  

கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி

மென் பிணி அவிழ்ந்த குறு முறி் அடகும்,  

அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்,  

புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும்

கீழ்  செல விழ்ந்த கிழங்கோடு பிறவும்,  

இன் சோறு தருநர் பல் வயின் நுகர”,. 

இயற்கையின் அழகுணார்ந்த நாச்சினார்கினியர் மதுரை காஞ்சியில் பாடுகிறார்..

இந்த வளமிகுந்த நாடும் ஊரும்

நாடு எனும் பேர் காடு ஆக,  

ஆ சொந்த வழி மா சேப்ப

ஊர் இருந்த வழி பாழ் ஆக

என ஒரு பகுதி மனித கூட்டத்தின் போர் வெறியில் படையெடுப்பிற்கு முன் நாடாக, ஊராக இருந்தது பின் காடாக மாறியது அத்தோடு கொடிய விலங்குகளின் தங்குமிடமானது என்று கூறுகிறது கி.பி இரண்டாம் நூற்றாண்டு இலக்கியமான மதுரை காஞ்சி.

 

இயற்கையோடு இணைந்த மனித வாழ்வும்,  சங்க காலமும்.

ஐம்பூதங்களின் அவசியத்தை

மண் திணிந்த நிலனும் 

நிலம் ஏந்திய விசும்பும் 

விசும்பு தைவரு வளியும் 

வளித்தலை இய தீயும் 

தீ முரணிய நீரும் 

என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது.

நெய்தல் நிலத்தில்  இயற்கையின் பேரழிவில் இருந்து காக்க,  

தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ 

படப்பை நின்ற முடந்தாள் புன்னை” (அகநானூறு.180)  கடல் நிலப்பரப்புகளில் ஆழிப் பேரலைகள் போன்ற சேதங்கள் ஏற்படாமலிருக்க புன்னை, தாழை ஞாழல் மரங்களைக் கொண்டு கடல்நீரைத் தடுத்துள்ளனதை அறியமுடிகிறது.

மருத நிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, நிலச்சரிவுகளினால் மக்களுக்கு பாதிப்புகள் நிகழாத வண்ணம்  பாதுகாக்க, மரங்கள் இருந்தமை குறித்து 

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி

விளிவு இன்று கிளையோடு மேல்மலை முற்றி,  

தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்

ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்

அகரு, வாழை, ஞெமை, ஆரம் இனைய,  

தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி

நனிகடல் முன்னியது போலும்

தீம்நீர்,, வளிவரல் வையை வரவு” (பரிபாடல்.12) 

வைகையில் ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட செய்திகள் இல்லை.சங்க இலக்கியங்களில் ஆற்றுப் பெருக்கு ஏற்பட்டிருந்த காலங்களிலும் உயிர்ச்சேதம் நிகழவில்லை என்பதை அறியமுடிகிறது.

நம் சூழல்களைச் சுற்றிலும் மாசுபாடு ஏற்படுகிறது.  அதனால், பழந்தமிழரிடம் காற்று மாசுபாடு இருந்தமை பட்டினப்பாலையில்,  

கோள் தெங்கின் குலைவாழைக்

காய்க்கமுகின் கமழ் மஞ்சள்

இனமாவின் இணர்ப்பெண்ணை,  

முதற்சேம்பின் இளைஇஞ்சி”( பட்டினப்பாலை.9-19) 

இப்பாடலில், தென்னை, வாழை, பாக்கு, பனைமரங்கள் போன்றவைகள் மருதநிலத்தில் காணப்பட்டிருக்கும். இவை புகைகளையும், தூசுகளையும் தடுக்கின்றவைகளாக இருந்துள்ளதை காண முடிகிறது.  காற்று மாசுபாட்டினைத் தடுக்க மரங்கள் பயன்பட்டிருக்கிறது.  மரங்கள் காற்றில் கலந்து வருகின்ற மாசுக்களை இலைகளால் தடுப்பதற்கு பயன்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ்மரபில் இயற்கையை தனது குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதும் நிகழ்ந்துள்ளது. மரங்களையும், செடிகளையும், போற்றியுள்ளமையைக் காட்டிலும், உடன்பிறப்பாக எண்ணி வாழ்ந்துள்ளதை



விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது, நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”(நற்றிணை.172) 

இவற்றில் தலைவி தான் சிறுவயதாக இருக்கும் போது புன்னைச் செடி ஒன்றினை வளர்த்து வருகிறாள்.  அச்செடிக்கு நெய்கலந்த பாலினை நீராக ஊற்றி வளர்க்கிறாள்.  அதனால் தன் தலைவனுடன் பேசி மகிழ நாணம் கொள்வதாக அமைந்துள்ளது. இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.  எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி வாழந்த்தை அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் மக்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துள்ளனர். மரங்கள், நீர், நிலம், காற்று போன்ற இயற்கை சார்ந்த சூழல்களில் வாழ்க்கையை நடத்தியுள்ளமை போற்றற் குரியதாகும்.


பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன், மண்மீதுள்ள  மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்றன் புடன், இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் என எட்டையபுரத்து கவிஞன்  சூழலியலைக் காக்க வரம்கோரி கோரிக்கை வைக்கிறார்.


கோர முகத்தை தோலுரித்த மார்க்சியம்

          19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தின் கோர முகத்தை கிழித்து தொங்கவிட்ட காரல் மார்க்சும், ஏங்கல்சும் முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறையில் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்களால் இயற்கையை எப்படி சீரழிக்கிறோம். அதன் பதிலடி எப்படி இருக்கும் என்பதை தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக முன் வைத்தார்கள்.

நமது வாழ்க்கைக்கான முதல் நிபந்தனையாக உள்ள ஒரே ஒரு புவி மண்டலத்தை முதலாளித்துவம் கூவி விற்கப்படக் கூடிய ஒரு வணிகப் பொருளாக்கியுள்ளது” நமது வாழ்க்கை இயற்கையிலிருந்து பெறப்பட்டது. எனவே நம் பயணம் தொடர வேண்டுமானால் இயற்கையுடன் இடைவிடாத உரையாடலை செய்ய வேண்டும்”. 

நாம் இயற்கையின் ஒரு பகுதியாக பிணைக்கப் பட்டுள்ளோம். நாம் வாழும் காலத்தைப் பொறுத்தவரை எவ்வகையிலேனும், இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பு முறையும், அதனோடு சேர்ந்த அரசியல் சக்திகளும் தான் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அளவிற்கு இயற்கையை அழிப்பதிலும், சற்றுச் சூழல் கேடுகளை மாசுகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன என மார்க்ஸ் கூறுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் பத்தி 1.63ல் பருவநிலை மாற்றம் என்பது ஒரு வர்க்கப் பிரச்சனையே ஆகும். ஏனெனில் இயற்கை வளங்களை கட்டுப்பாடில்லாமல் முதலாளித்துவம் கொள்ளையடிப்பதே தற்போதைய பேரழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என பட்டவர்த்தனமாக முதலாளித்துவத்தின் இயற்கை வள சூறையாடல்களை சாடுகிறது.”

இன்னும் ஒருபடி மேலே போய் பூமிக்கோளத்தின் வடபகுதியில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை உயருமானால் நம் முன்னால் காத்திருக்கும் பயங்கரங்களை வெளிப்படுத்துவதாகவும், இது அமைகிறது. 2021 கோடை காலத்தில் வெளிப்பட்ட மிக மோசமான பருவநிலை நிகழ்வுகள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை மட்டுமல்லாது அதன் தாக்கம் என்பது மையப் பகுதியில் உள்ள வளரும் நாடுகளை குறிப்பாக இந்தியாவிலும் கூட அதிக மழைப் பொழிவு, அதன் விளைவாக நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ளம், நகர்ப்புறங்களை வெள்ளம் சூழ்தல் ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என குறிப்பிடுகிறது. உண்மையில் 2024 கோடைக்கு பிந்தைய காலத்தில் இதன் தாக்கம் உத்தரகண்ட், கேரளா, ஆந்திரா உள்ளிட்டு நாட்டின் பல பகுதிகளில் இந்த பாதிப்பை பார்த்து வருகிறோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் இயற்கையையும், மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்பதுதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துகளாகும்.  மார்க்ஸ் மனிதனின் எதார்த்த வாழ்வியலின் தேவைகளை பற்றித்தான் கூறுகிறாரே தவிர, வரம்பற்ற நுகர்வுகளை பற்றி கூறவில்லை. ஆனால் முதலாளித்துவம் சந்தைக்கான மனிதர்களை உருவாக்கு கிறது. நுகர்வை நுகர்வு வெறியாக மாற்றுகிறது. இதன் லாப வேட்கையே அனைத்தையும் அழித்தொழிக்கும் கட்டுபாடற்ற நிலைக்கு முதலாளித்துவத்தை தள்ளிச் செல்கிறது. அதை மனிதர்கள் ஏற்கும் வண்ணம் பண்பாட்டின் பெயரில், பல அடையாளங்களின் பெயரில் முன்னெடுக்கிறது.

எனவே இந்த பூமி பந்து மனிதர்கள் விருந்தினர்களாக வந்து செல்லும் உரிமையே உள்ளது. இது இயற்கையின் அனைத்து உயிரினங்களுக்குமானது என்ற காரல் மார்க்ஸ் மகத்தான வார்த்தைகளே, பூமி வெப்பமயமாக்கல், பருவமநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவிடும். ஏகாதி பத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என்பது புவிப்பந்தை பாதுகாக்கும் போராட்டத்தோடு மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் சமத்துவ உரிமைக்களுக்காகவும், ஆரோக்கியமான வாழும் உரிமைக்களுக்கான போராட்டத்தோடு இணைந்தது.

                                                                                  - செல்லையா முத்துக்கண்ணன்

நிற்க

சமகால சுற்றுச் சூழல் சவால்கள் என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் புத்தக நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் மிக முக்கியமாக கவனத்தை ஈர்த்தது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர் கள் உட்பட 28 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வாசிக்க வேண்டிய புத்தகம்.  இன்று இயற்கையை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனும் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.. 

 உலகின் வளங்கள் அனைத்து உயிரினங்களுக்குமானது. அதனை பாதுகாக்க வேண்டுமானால் ஏகாதிபத்திய கோர முகத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் நம்மை  அடையாளங்களின் பின்னால் கொண்டு போய் இன்று ஏகாதிபத்தியமும், முதலாளித்துவம் நிறுத்த முயல்கிறது. நிறம், இனம், மதம், மொழி, இந்திய சூழலில் சாதி என்கிற கருத்தாக்கங்களை பயன்படுத்த நினைக்கிறது. இவற்றிற்கு எதிரான சிந்தனையை வளர்த்துக்கொண்டு பூமிப்பந்தின் மையப் பிரச்சனையை நோக்கி நாம் நடைபோட இப்புத்தகத்தை சுவாசிக்க வேண்டும். இதை தொடர்ந்த போது இப்புத்தகத்தோடு நிற்காமல் சங்க காலம் வரை நீண்டது. எப்படி நம்முடைய முன்னோர்கள் இதை கையாண்டர்கள் என்பதை நோக்கி.. நீங்களும் கைபிடித்து வாசித்து வாருங்கள்..