”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
“சிவம் பேசினால் சவம் எழும்”
சிவாவும், சேவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சே அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவில் புரட்சி செய்து பொலியாவில் கொல்லப்பட்டான். சிவாவும் வத்தலக்குண்டில் பிறந்து, துhத்துக்குடியில் போராடி, பாப்பிரெட்டிபட்டியில் இறந்தவர். இருவரின் தினங்களும் அக்டோபர் மாதத்தில் வருகிறது. முன்னவர் பிறந்த தினம்  அக்டோபர் 4ம் தேதி. அடுத்தவர் நினைவு தினம் அக்டோபர் 9ம் தேதி. 


1884 ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சிவா ( இயற்பெயர் : சுப்பராமன் ) தனது சிறுவயதில் மதுரையில் இருந்து வறுமையின் காரணமாக  திருவனந்தபுரம் சென்று அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் ( ஊட்டுப்புறையில் ) தங்கி படித்தார். தனது 15 ஆவது வயதில் மீனாட்சி என்பவரை திருமணம் செய்து மீண்டும் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் ஆன்மிக நடவடிக்கைகளில் நாட்டம் கொண்டார். 1906ல் சிவாவின் தந்தை காலமானார்.  அந்த காலக் கட்டத்தில் தான் வங்கத்தை இரண்டாக கர்சன் பிரபு பிரிக்க அதற்கு எதிராக தேசம் முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற துவங்கின. சுதேச உணர்வின் வெளிப்பாடாய் வந்தே மாதர முழக்கம் வெளிப்பட ஆரம்பித்த தருணம்.

1907 ல் திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி இளைஞர்களுக்கு தேச நலன் குறித்த அக்கறையை உருவாக்க முயற்சி மேற்கொண்டார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கால்நடையாகவே துhத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த வ.உ.சிக்கும் இவருக்கும் இடையே உளமார்ந்த நட்பு ஏற்பட்டது.  ஒட்டப்பிடாரத்தின் அருகில் தான் எட்டையபுரம். சொல்லவா வேண்டும் பாட்டை கட்டி எரிதழல் ஏந்திய பாரதியின் நட்பும் சேர சுதந்திர தனல் சுடர் விட்டு எழுந்தது. 

1908ல் வ.உ.சியும், சிவாவும் சேர்ந்து நெல்லை ஜில்லா முழுவதும் சுதேசி யாத்திரையும், பரப்புரையும் மேற்கொண்டு சுதந்திர கனலை மூட்டினார்கள். நெல்லை மாவட்டத்தின் இரட்டை குழல் துப்பாக்கி ஆனார்கள். சுப்பிரமணிய சிவாவின் பேச்சை கேட்டவர்கள்,.“ சிவம் பேசினால் சவம் எழும்’’ என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த மேடை பேச்சாளர். மார்ச் 12, 1908ல் இருவரும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு கடும் காவல் தண்டனை பெற்று 1912ல் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் சென்னையில் குடியேறினார்.

சென்னையில் இருந்த காலத்தில் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் சிறு நாற்காலி போட்டு அதில் ஏறி நின்று கொண்டு பாரதியின் சுதேசி பாடல்களை பாட ஆரம்பித்துவிடுவார். கூட்டம் நன்கு சேர்ந்தவுடன் சொற்பொழிவு ஆற்ற துவங்கி விடுவார். அந்தளவு தேச பக்த கனலை மூட்டியவர் சிவா. சென்னையில் ஞானபானு என்ற மாத இதழை துவங்கி எழுத ஆரம்பித்தார். 1915ல் சிவாவின் துணைவியார் மீனாட்சியின் மரணத்தினை தொடர்ந்து ஞானபானு நிற்க, 1916ல் பிரபஞ்ச மித்திரன் என்ற வார இதழை துவங்கி நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுத்தி வந்தார். இக்காலத்தில் 20 நூல்கள் வரை எழுதி வெளியிட்டார். 

1921ல் மீண்டும் தேச துரோக குற்றம் சாட்டப்பட்ட சிவா இரண்டறை ஆண்டு கடுங்காவல் தண்டனைக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் தண்டணையின் கோர வடிவம் காரணமாக தொழுநோய் ஏற்பட்டு சிறையில் இருந்து விடுதலை அடையும் போது தொழுநோயாளியாக வெளியே வந்தார். தொழுநோயின் தீவிரத்தை சொல்லும் போது “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை’’ என்றார். இதே காலத்தில் வஉசி கைது செய்யப்பட்டு கண்ணனுர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். 

சிவாவின் தொழுநோயை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு இரயிலில், பேருந்தில் பயணம் செய்ய தடைவிதித்தது. அந்த நிலையிலும் அவர் தொழுநோய் பாதித்த பகுதிகளை வெள்ளை துணியால் சுற்றி தெரியாத வண்ணம் நடைபயணமாகவே பயணம் செய்து விடுதலை வேட்கையை ஊட்டினார். அவர் ஆந்திர மாநிலத்தில் சிறையில் இருந்த காலத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களோடு ஏற்பட்ட நட்பு காரணமாக விடுதலைக்கு பின்பு பாரத மாதாவிற்கு கோவில் கட்ட நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பரபட்டியில் பாரதபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது 41 வயதில் 23-7-1925ல் தனது இறுதி மூச்சை நிறுத்தினார் சிவா. 

சிவாவும், வ.உ.சியும் சுதேசி கப்பலை ஒட்டும் நிகழ்வையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தருணத்தில் வஉசி பேசும் போது இனிமேல் நாமே கப்பல் ஓட்டுவோம். வெள்ளைக்காரன் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒடிவிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட சிவா இடையில் தலையிட்டு மைக்கை வாங்கி “அவர்கள் வைத்துள்ள மூட்டை முடிச்சுகள் இந்தியர்களை சுரண்டியது. அதை இங்கேயே போட்டு விட்டு வெறும் கையோடு வெளியேறட்டும் என்று சொன்னார். அந்தளவுக்கு அவர் இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்டவர். 

  • தென்னிந்தியாவின் முதல் வேலைநிறுத்தப் போராட்டமான தூத்துக்குடி கோரல் மில் வேலைநிறுத்தம்  வெற்றி பெற கடும் முயற்சியை இரட்டையர்கள் இருவரும் மேற்கொண்டனர். 
  • சிவாவின் நடவடிக்கைகள் அனைத்து அளப்பரியது. தொழிலாளர்கள் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட்டார். 
  • அந்த காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி முழங்கியவர்.
  • பொதுக்கூட்ட மேடைகளில் வந்தேமாதரம், அல்லாஹீ அக்பர் என்று முழங்கித்தான் பேச்சை துவக்குவார். 
  • மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தியவர். வடக்கில் திலகரைப்போல், தெற்கில் சிவா திகழ்ந்தார். 


நன்றி 
இளைஞர் முழக்கம் 
2015 அக்டோபர் இதழ்

No comments:

Post a Comment