”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

பின்னல் நகரின் கதை

 நாடதெது யாதெனில் !

”பசிப்பிணி என்னும் பாவி” என்று கொடிய பசியை ஒரு பாவமாக உருவாகப்படுத்தி மணிமேகலை காவியம்  கூறுகிறது.  அத்தகைய பசிப்பிணி மனித வாழ்க்கையின் நற்பண்புகளை அழித்து, அவனை தீய வழிக்கு அழைத்துச் செல்லும். அத்தகைய பசியை போக்க அரசு அம்மனிதனுக்கு உணவழித்து காப்பாற்ற வேண்டும். மகாகவி  பாரதி கூட ''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என கோபத்தில் கொந்தளித்தார். திருவள்ளூவர் கூட ”உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” ஒரு நாட்டில் இருக்கக்கூடாத அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். 

இதனை போக்க  வேண்டுமென்றால் நாட்டில் அனைவரும் உழைப்பை கொண்டாட வேண்டும். நிலம், வேலை, உணவு என்பது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை உலகின் மூன்றில் ஒரு பகுதி நாடுகளில் உறுதி செய்துள்ளார்கள். இதனால் வேலையின்மை போக்கி, வாங்கும் சக்தியை அதிகரித்து வறுமையை ஒழித்துள்ளார்கள். இதனை சாதித்து காட்டிய ஊர்தான் திருப்பூர் என்றால் மிகையாகாது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர், திருப்புமுனைக்கு பெயர் பெற்றது ஆகும். 

நொய்யல் கரையின் வர்த்தகங்கள் 

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புலம்  பெயர்ந்த தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாத்து உயர்த்தியதில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1980 களுக்கு பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் படிப்படியாக இந்தியாவின் ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் தனித்துவத்தோடு முன்னேறிய திருப்பூர் இன்று 34 சதவீத பங்கை ( ரூ.44,747 கோடி மதிப்பில்)  வகிக்கிறது. உலகளாவிய பின்னலாடை சந்தையில் முக்கிய மையமாக திகழ்கிறது. தொழிலாளிகளாக வந்தவர்கள் கூட உழைப்பால் முன்னேறி தொழில் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்களாக மாறிய வரலாறு திருப்பூரில் ஏராளம். 

திருப்பூரின்  அருகாமை நகரமான நொய்யல் ஆற்றின்  கரையில் இருந்த சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் பதியப்பட்ட கொடுமணம் என்ற கொடுமணல் கிமு முதலாம்  நூற்றாண்டில் இரும்பை உருக்கும் ஆலையும்,  நகைக்கற்களை கொண்டு ஆபரணங்கள்  தயாரிக்கும் தொழில்நுட்பமும்  கொண்டு மேற்கு கடற்கரை வழியாக கிரேக்கம், ரோமப்புரிக்கு வர்த்தகம் செய்த தொடர்புகளை அகழ்வாயின் மூலம்  கொடுமணலில் கண்டறிந்துள்ளார்கள். 

இப்படி திருப்பூரை சுற்றி வரலாற்றின் அம்சங்கள் புதைந்து கிடக்கிறது. பொள்ளாச்சி சந்தையும், காங்கயம் சந்தையும், திருப்பூர் பருத்தி சந்தையும் வர்த்தகத்தில் பெயர் பெற்றவைகளாகும். 

போராட்டத்தின் வழியில் 

இத்தகைய திருப்பூர் பல்வேறு நெருக்கடிக்களை கடந்த 40 ஆண்டுகளில் சந்தித்துதான்  இன்று ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் என பிரமாண்ட  வளர்ச்சியை சந்தித்துள்ளது. குடிநீர் பற்றாகுறை, சாயக்கழிவு பிரச்சனை, மின்தட்டுப்பாடு, அரசின் வரிக்கொள்கை, உயர் பணமதிப்பு செல்லாது, ஜி.எஸ்.டி, பருத்தியின் நிலையற்ற விலை, நூல்விலையுயர்வு, கண்டெய்னர் தட்டுபாடு, அண்டைநாடுகளின்  வர்த்தக ஒப்பந்தங்கள் என பல தடைகளை கடக்க  போராடி வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய ஆடை ஏற்றுமதித் துறையின் போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் 3 கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களுக்கான மிகப்பெரிய  ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவிற்கு கடந்த நிதியாண்டில் சுமார் ரூ 40,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். 

திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லுாதியானா மற்றும் ஜெய்ப்பூர்  அமெரிக்க சந்தையை நம்பியுள்ளன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பல லட்சம் தொழிலாளர்கள் இங்குவேலை செய்து வருகிறார்கள்.   கடந்த பல ஆண்டுகளாகவே, அமெரிக்க சந்தையின் வளர்ச்சி, இந்திய ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய்க்கு முக்கிய பங்களித்து வருகிறது. 

அமெரிக்க வரி பயங்கரவாதம்

ஏற்கனவே இந்திய ஆயுத்த ஆடைகளுக்கு அமெரிக்கா 16 சதவீதம்  வரியை விதித்துள்ளது. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை காரணம்  காட்டி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் 66  சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கதேசம், வியட்நாம், சீனா, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஆடைகள் போட்டித்தன்மையை இழக்கின்றன. இந்த  நாடுகள் 30 முதல் 35 சதவீத வரியை மட்டுமே எதிர்கொள்ளும்  நிலையில் இந்தியா 66  சதவீதம் வரியை எதிர்கொள்கிறது. அமெரிக்கா விதித்த 50% வரியால் மட்டும் மாதத்திற்கு ரூ.2,000 கோடி வர்த்தக இழப்பு திருப்பூருக்கு ஏற்படுகிறது

திருப்பூரில் அமெரிக்காவிற்கு 18000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பகுதி நிறுவனங்களும்,  ஐரோப்பிய மற்றும் இதர நாடுகளுக்கு  ஒரு பகுதி நிறுவனங்களும் ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை மாற்றும் போது அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இதர பின்னலாடை  நிறுவனங்கள்  போட்டியை சந்திக்க வேண்டி வரும். பாதிப்பும்  ஏற்படும் நிலை உள்ளது. 

இதனால் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சந்தை மாறுவதால்  நமக்கான இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது மீளமுடியாத நஷ்டத்தையோ ஏற்படுத்தும். திருப்பூரில் பனியன் தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும், சார்பு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பயங்கரமாக பாதிக்கப்படும். 

மேற்படி  அமெரிக்கவரி விதிப்பு என்பது குறிப்பிட்ட பொருளின் மீதான வரியாக இல்லாமல் ஒரு  தேசத்தின் மீதும், நகரத்தின்  மீது போடபட்டுள்ள பேரழிவு வரி ஆயுதமாகும்.  ஏற்கனவே அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின்பு,  2015  ஜனவரி முதல் ஜூன் வரை
யான காலத்தில் இந்திய ஏற்றுமதி அமெரிக்காவிற்கு 5.36 பில்லியன்  டாலராக இருந்தது. இதே காலத்தில் வியட்நாம்  8.59 பில்லியன் டாலராக 18.5 சதவீதம் கூடுதலாக இருந்தது.  இந்தியா மாதத்திற்கு 860 மில்லியன்  டாலர் அளவில் ஏற்றுமதி செய்து வந்த நிலையில்  2025 ஜூனில் 770 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. தற்போது வரிக் கொள்கையின்  காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது  ஏற்றுமதிக்கான ஆர்டர் கேட்பது சுமார் ரூ 4000 கோடி மதிப்பில் நின்றுபோயுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வேலையிழக்கும் தொழிலாளர்கள் 

திருப்பூரின்  பனியன் கம்பெனிகளில் தற்போதே சில நிறுவனங்களில் 50 சதவீதம் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள தொழிலாளர்களை எப்படி பாதுகாப்பது என புலம்புகிறார்கள். ஏற்கனவே இங்கு கணிசமான நிறுவனங்களில் நிரந்தரமற்ற தன்மையில் தொழிலாளர்கள்  ஒப்பந்த அடிப்படையிலும், பீஸ்ரேட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் ஒராண்டில் பல நிறுவனங்களுக்கு மாறிசென்று பணியாற்றும் சூழலே நிலவி வருகிறது. இதனால் சட்டசலுகைகளோ, உரிமைகளோ பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு  கிடைக்காத நிலையில் தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனங்களில் மட்டும் ஒரளவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உள்ளது. 


பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகளை பாதிக்கு பாதி கொடுத்து நிறுவன செயல்பாட்டை நிறுத்தி விட்டார்கள். நிறுவனம் நடத்தி நஷ்டம் ஆவதைவிட நிறுத்திவிட்டால் நஷ்டம் குறைவு என்கிறார்கள். ஆனால் இதை  நம்பி பணியாற்றிய தொழிலாளர்கள், நிறுவன அலுவலக  ஊழியர்கள்  நிலைதான் பெரும் கேள்விகுறியாகியுள்ளது. 

இத்தோடு ஜவுளி சார்ந்த கார்பெட், பெட்சீட், திரைசீலை போன்றவை அமெரிக்காவிற்கு 60 சதவீதம்  இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 1.5 பில்லியன்  டாலர் மதிப்பில் ஏற்றுமதி ஆகிறது. தற்போதைய அமெரிக்க வரி விதிப்பால் இந்த ஏற்றுமதியில் 70 சதவீதம் மட்டுமே  செல்லும்  நிலை ( 920 மில்லியன்  டாலர் அளவில் ) ஏற்பட்டுள்ளது.  இந்த துறையில் அதிகளவில் பெண்கள்  பணியாற்றி வந்த நிலையில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. 

தற்போதைய நிலையில் இந்திய அரசு, அனைத்து மூலப்பொருட்களுக்கும் இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதும்,  பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்து ஆயுத்த ஆடை தொழிலுக்கு பருத்தியை கட்டுபடியாகும்விலையில் வழங்க வேண்டும். மேலும் மின்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு என்பிஏ கால அவகாசத்தை நிலைமை சீரடையும்  வரை ஒத்தி வைக்க வேண்டும். உடனடி நிவாரணமாய் வட்டி மானியத்தோடு வங்கி கடன்களை நீண்ட கால தவணைகளில் வழங்குவது. ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பது. வேலை இழக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு நிதி உதவி, மற்றும் தேவையான உணவு பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. 

செ.முத்துக்கண்ணன்

No comments:

Post a Comment