”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இந்திய சுதந்திரப்போரும் கப்பற்படை எழுச்சியும்.. பிப்-18, 1946

 கப்பற்படை எழுச்சியின்  பின்னணி்: 

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் இருந்த பிரிட்டிஸ் அரசும், காங்கிரஸ், முஸ்லீம் லீக் அமைப்புகள் தங்களது கோரிக்கைகளில் வெற்றி பெறுவதற்காக முதலாளித்துவ நலனுக்காக பேச்சுவார்த்தை மூலம் சமரச முயற்சி செய்து வந்தனர். ஆனால் மக்களின் உணர்வுகள் இதற்கு எதிராக சமரசமற்ற முறையில் போராட்டங்களின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டும் அணுகுமுறையாக இருந்தது.

யுத்தகாலத்தின்  பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சத்திற்கும், வேலையின்மை, வாழ்க்கை நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது. இதற்கு எதிராக இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்டு போராடினார்கள். 

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு நீறுபூத்த நெருப்பாக எழுந்து கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இந்திய விடுதலையை தீவிரப்படுத்த முன்னின்றன. குறிப்பாக இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) மீதான விசாரணையும்,  இந்தோனேசியா, இந்தோசீனா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளுக்கு இந்திய படைவீரர்களை அனுப்புவது என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருமுகப்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், காங்கிரஸ்  மற்றும் முஸ்லீம் லீக் கட்சி அணிகள் முக்கிய பங்கை வகித்தன. 

பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்க முடியும் என்று ஜப்பானோடு சேர்ந்து ஐஎன்ஏ போராடிய நிலையில், ஜப்பானின் தோல்வி, சரணகதிக்கு பின் ஐஎன்ஏ படைவீரர்கள் 20000 பேரும், பிரிட்டிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். பிரிட்டீஸ் அரசு அவர்களின் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்தியது. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐஎன்ஏவில் சிறப்பாக செயல்பட்ட கர்னல் ஷாநவாஸ், கேப்டன் தில்லான், கேப்டன் சீகல் ஆகியோர் நீண்டகால சிறைத்தண்டனை பெற்றனர். இதனை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக மக்கள் கருதி ஐஎன்ஏ தலைவர்களை விடுதலை செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.  அன்றைய வாரணாசி உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பம்பாய், மதுரா, டெல்லி, மீரட், பெஷாவர் போன்ற இடங்களிலும் ஏராளமான பேர் கொல்லப்பட்டு  பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இதே நிலை நீடித்தது. 


கப்பற்படைவீரர்களின் எழுச்சி:

ஐஎன்ஏ வீரர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக இந்திய ராணுவத்திற்குள்ளும் வீரர்கள், இளம் அதிகாரிகள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கியது. 1945 ல் ஜனவரியில் இந்திய விமானப்படைக்குள் பிரிட்டிஷ் கடைபிடித்துவந்த இன பாகுபாட்டிற்கு எதிராக வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இது அனைத்து பிரிவினர் மத்தியிலும்  வெளிப்பட்டது. அதே நேரத்தில் கப்பற்படை வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட வீரசெறிந்த எழுச்சியை போல் அமையவில்லை. ஆதரவு மட்டும் இருந்தது. 

இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகளுடன் குறிப்பாக சோவியத் படைகளுடன் பிரிட்டீஷ் இந்திய ராணுவப் படை போரில் இணைந்து ஈடுபட்டதில்  நெருக்கம் அதிகமானது. இதன் காரணமாக ஏற்பட்ட பரந்துபட்ட உலகப் பார்வையும், வர்க்கப் பார்வையும் சேர்ந்து பல்வேறு சாதி, மதங்களை சார்ந்தவர்களாக இருந்த போதும், இன, நிற, பொருளாதார மற்றும் அடிப்படை உரிமைகளில் இருந்த பாகுபாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது. 

ஐஎன்ஏ வீர்ர்கள் மீதான விசாரணைக்கு எதிராக 1946 பிப்ரவரி 17ம் தேதி பம்பாயில் கப்பற்படை மாலுமிகள்  பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் துருப்புகள் தாக்குதல் தொடுத்ததை தொடர்ந்து கிளர்ச்சி பல்வேறு துறைமுகங்களுக்கு பரவியது. 

 அடுத்தநாள் 18ம் தேதி “ தல்வார்” என்னும் பயிற்சி கப்பலில் புரட்சி தீ மூண்டது. சில மணி நேரத்தில் ராயல் இந்திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது. 80க்கும் மேற்பட்ட கப்பற்படை கப்பல்களில் 20000க்கும் மேற்பட்ட மாலுமிகள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்ததை துவக்கினார்கள். 

போராட்டகுழுவும் - கோரிக்கைகளும்:

36 பேர் கொண்ட போராட்டக்குழு தேர்வு செய்யப்பட்டு எம்.எஸ்.கான் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அமைதியான முறையில் தானா ரயில் நிலையத்தினை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்கள். அவர்கள் அமெரிக்க செய்தி ஒலிபரப்பு நிறுவனத்தை கடந்த போது அமெரிக்க கொடிகளை கிழித்தெறிந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்ற கோசங்களோடு நடந்து சென்றனர்.

மாலுமிகள்  8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

1.ஐ.என்.ஏ வீரர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

2.மாலுமிகளிடம் நாகரிமற்ற முறையில் பேசி அவமானப்படுத்திய “தல்வாரின்” கமாண்டிங் அதிகாரி கிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.சமாதான காலத்தில் ( யுத்த காலத்தில் ) வேலை நீக்கம் செய்யப்படக் கூடிய மாலுமிகளுக்கு புனர் வாழ்வளிக்கவும் வேலை வாய்ப்பளிக்கவும், தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற் கொள்ள வேண்டும்.

4.ராயல் நேவியின் மாலுமிகளுக்கு வெள்ளையர்களுக்கு அளிக்கப்படும் சம்பள விகிதமும் பஞ்சப்படியும் இதர சலுகைகளும் ராயல் இந்தியன் நேவியின் இந்திய மாலுமிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

5.அனைத்து உணவகங்களுக்கும் இந்திய மாலுமிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

6.நல்ல உணவு அளிக்க வேண்டும்.

7.வேலை நீக்கம் செய்து அனுப்புகிற போது துணிகளையும், பெட்டிகளையும் திருப்பி ஒப்படைக்கும் படி கட்டாயப்படுத்தக் கூடாது. 

8.இந்தோனேஷியாவிலுள்ள இந்தியப் படைகளை வாபஸ் பெற வேண்டும். 


சிங்கத்தின் பிடறியை பிடித்து உலுக்கிய தருணம் :

கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மாலுமிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து வேலைநிறுத்தங்களின் மூலமும், இதர வடிவ போராட்டங்களின் மூலமும் ஆதரவை தர தொழிலாளி வர்க்கத்தை கேட்டுக் கொண்டது. பம்பாய் தொழிற்சாலைகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலைகளில் பேரணி நடத்தினர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களை புறக்கணித்தனர். பெண்கள் உட்பட பொதுமக்கள் கப்பற்படை வீரர்களுக்கு தேவையான உணவுகளை படகுகளில், வண்டிகளில், வேன்களில் கொண்டு சென்று கொடுத்தனர். தல்வாரும், கத்திவாரும், இந்துஸ்தான், எச்.எம்.ஐ.எஸ் பஞ்சாப் கப்பல்களில் நடைபெற்ற போராட்டம் இளைஞர்களை எழுச்சிக் கொள்ள செய்தது. 

பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் அதற்கெதிரான போராட்டங்கள் பல நடந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர். தடியடி, துப்பாக்கி சூடு, உயிர் பலி என தியாகம் செய்தனர். அப்போது ஆட்சி மாற்றத்தை பற்றி சிந்திக்காத வெள்ளை அரசு கப்பற்படை எழுச்சியை கண்டு பயந்தது. 

ஏனெனில் சம காலத்தில் வெள்ளை அரசின் முக்கியமான கேந்திர துறைகளில்  இரயில்வேயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், சுரங்கத் தொழிலாளர்களின் எழுச்சிகரமான    வேலைநிறுத்த  இயக்கம்,  விளைச்சலில் முக்கால் பங்கு விவசாயிகளுக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்காக வங்கத்தில் நடந்த “தெபாகா போராட்டம்”, தெலுங்கானாப்  போராட்டம், மாராட்டியத்தில் நடைபெற்ற “வார்லிஆதிவாசிகள்”  போராட்டம், திருவாங்கூர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு மன்னனையும் திவானையும் எதிர்த்த புன்னப் புரா வயலார் மக்களின் ஆயுத மேந்திய எழுச்சியும் இக்காலத்தில் நடைபெற்றது.

இந்த தருணத்தில்தான் கப்பற்படை வீரர்களின் புரட்சி நடைபெற்றது. புரட்சி செய்த கப்பற்படையினரைச் சுட தரைப்படையினர் மறுத்தனர். விமானப்படையினர் மறுத்தனர். மராட்டிய காவல்படை, கூர்க்கா படைகள் மறுத்தது. இப்படி வெள்ளை அரசுக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிய இராணுவத்தின் பல பிரிவுகள் கப்பற்படைக்கு ஆதரவாக மாறியது மக்களும், ஆயுதப்படையினரும் இணைந்த புரட்சி இந்தியாவில் ஏற்படும் என்றால் இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களை சுரண்டிக் கொழுத்தவர்களை எவ்வித சலுகையும் அளிக்காமல் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய தேசிய தலைமைக்கும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

பெருமுதலாளித்துவ-நிலபிரபுத்துவ பிரதிநிதிகளின் துரோகம் : 

மாலுமிகளின் கோரிக்கைகளும், தேசத்தின் அரசியல் கோரிக்கைகளும் இணைந்து அனைத்து பகுதி மாலுமிகளையும்  ஒன்றுபடுத்தியது. இக்கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு மாலுமிகளின் போராட்டக்குழு காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டது. 

வல்லபாய் பட்டேல் அறிக்கை இவ்வாறு வெளியிட்டார். “ கப்பற்படை வீரர்கள் ஆயுதக் கலகம் செய்திருக்ககூடாது என்றும் கப்பற்படையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் வேண்டுமென்னும் கடற்படைதளபதியின் கூற்றை ஆதரிப்பதாகவும் கூறினார்”. 

பிரிட்டிஷ் படையினர் புரிந்த படுகொலையை  கண்டித்து  பிப்-22 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துமாறு போராட்டக்குழு தேசிய இயக்கங்களை, மக்களை கேட்டுக் கொண்ட போது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை நடத்த தூண்டியது. பங்கேற்றது.. இந்த நிலையில் கப்பற்படை மாலுமிகளின் போராட்டக்குழு “நாங்கள் மக்களிடம் சரணடைகிறோம், நாங்கள் தோற்றுவிட்டதாக கருதவில்லை, ஒரு நாளும் தோற்கப் போவதுமில்லை. பிரிட்டிஷ் இராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்ற அறிவிப்போடு போராட்டக் குழு சரணடைந்தது. இந்திய விடுதலைக்கு பின்னரும் நீண்ட காலம் நூற்றுக் கணக்கான படைவீரர்கள் சிறைகளில் வாடினார்கள். 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அச்சம் : 

1942களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்தை அலங்கரிகும் வைரக்கற்களே இந்தியா. சாம்ராஜ்யத்தின் எந்த பகுதியையும் நாம் இழக்கலாம். ஆனால் இந்தியாவை இழந்தால்  சாம்ராஜ்யமே அழிந்து விடும் என்று பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் அலறிக் கொண்டிருந்தார். “நான் பிரதமராக இருப்பது  பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கலைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு அல்ல என்று 1942ல் ஆணவத்தோடு சர்ச்சில் அலறினார். அதுவும்.. வெள்ளையனே வெளியேறு என காந்தியும், இந்திய தேசிய காங்கிரசும்  குமுறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் உலக ஏகாதிபத்தியத்தின் தலைவனாக அன்று வீற்றிருந்த சர்ச்சில் கொக்கரித்தார். 

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கு பின்னர், “பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசும் போது 1920-லோ, 1930-லோ, 1940-லோ இருந்த தட்ப வெப்பநிலை இப்போது இந்தியாவில் இல்லை. இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை உள்ளது. எனவே மாறுபட்ட அணுகுமுறை தேவை” என்று பிரிட்டிஷ் பிரதமர் அட்லி இறங்கி வந்து அதிகார மாற்றம் பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்பினர்.  அந்த அளவிற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிரட்டி பணிய வைத்த இயக்கம் கப்பற்படை எழுச்சி ஆகும். இந்திய ராணுவத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இருந்த நம்பிக்கையை தகர்த்தது. இது பிரிட்டிஷாருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி, இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை வேகப்படுத்தியது.

ஏகாதிபத்திய எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம் :

இத்தருணத்தில் இன்றைய ஒன்றிய பிஜேபி ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நாட்டின் இறையாண்மையை அடமானம் வைத்து வருகிறார்கள். இந்தியா என்கிற மண்ணும், மனித உறவுகளும் நிறைந்த பகுதியை ஏகாதிபத்திய கழுகுகளுக்கு ஒவ்வொரு வளங்களையும்  விருந்து வைத்து தாரை வார்த்து வருகிறார்கள். பஞ்ச பூத வளங்களையும், நிதிசார், வேளாண் சார், வர்த்தகம் சார், பாதுகாப்பு சார், விண்வெளி,  நிதி, தொழில், வேளாண், பாதுகாப்பு, விண்வெளி, கடல், இணையவழி உள்ளிட்டு அனைத்து வளங்களையும்  அமெரிக்க  ஏகாதிபத்திய கழுகு டொனால்ட்  ட்ரம்ப் தீர்மானிப்பார் என்றால் இந்திய ஆட்சியாளர்களின் அடிமைத்தனத்தைத என்னவென்று சொல்வது ? 

“மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு -அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை” 

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த புல்புல் குருவியில் பறந்த சாவர்க்கரின் வாரிசுகளை அம்பலப்படுத்துவதும், அவர்களின் நவீனதாராளமயக் கொள்கை, வகுப்புவாத கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதுமே இந்திய கப்பற்படை எழுச்சியின் நாயகர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக, மத நல்லிணக்க ஒற்றுமை ஒங்கட்டும். 

- செ.முத்துக்கண்ணன் 

#independence #socialism #antiimperialism

பின்னல் நகரின் கதை

 நாடதெது யாதெனில் !

”பசிப்பிணி என்னும் பாவி” என்று கொடிய பசியை ஒரு பாவமாக உருவாகப்படுத்தி மணிமேகலை காவியம்  கூறுகிறது.  அத்தகைய பசிப்பிணி மனித வாழ்க்கையின் நற்பண்புகளை அழித்து, அவனை தீய வழிக்கு அழைத்துச் செல்லும். அத்தகைய பசியை போக்க அரசு அம்மனிதனுக்கு உணவழித்து காப்பாற்ற வேண்டும். மகாகவி  பாரதி கூட ''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என கோபத்தில் கொந்தளித்தார். திருவள்ளூவர் கூட ”உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” ஒரு நாட்டில் இருக்கக்கூடாத அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். 

இதனை போக்க  வேண்டுமென்றால் நாட்டில் அனைவரும் உழைப்பை கொண்டாட வேண்டும். நிலம், வேலை, உணவு என்பது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை உலகின் மூன்றில் ஒரு பகுதி நாடுகளில் உறுதி செய்துள்ளார்கள். இதனால் வேலையின்மை போக்கி, வாங்கும் சக்தியை அதிகரித்து வறுமையை ஒழித்துள்ளார்கள். இதனை சாதித்து காட்டிய ஊர்தான் திருப்பூர் என்றால் மிகையாகாது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர், திருப்புமுனைக்கு பெயர் பெற்றது ஆகும். 

நொய்யல் கரையின் வர்த்தகங்கள் 

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புலம்  பெயர்ந்த தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாத்து உயர்த்தியதில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1980 களுக்கு பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் படிப்படியாக இந்தியாவின் ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் தனித்துவத்தோடு முன்னேறிய திருப்பூர் இன்று 34 சதவீத பங்கை ( ரூ.44,747 கோடி மதிப்பில்)  வகிக்கிறது. உலகளாவிய பின்னலாடை சந்தையில் முக்கிய மையமாக திகழ்கிறது. தொழிலாளிகளாக வந்தவர்கள் கூட உழைப்பால் முன்னேறி தொழில் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்களாக மாறிய வரலாறு திருப்பூரில் ஏராளம். 

திருப்பூரின்  அருகாமை நகரமான நொய்யல் ஆற்றின்  கரையில் இருந்த சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் பதியப்பட்ட கொடுமணம் என்ற கொடுமணல் கிமு முதலாம்  நூற்றாண்டில் இரும்பை உருக்கும் ஆலையும்,  நகைக்கற்களை கொண்டு ஆபரணங்கள்  தயாரிக்கும் தொழில்நுட்பமும்  கொண்டு மேற்கு கடற்கரை வழியாக கிரேக்கம், ரோமப்புரிக்கு வர்த்தகம் செய்த தொடர்புகளை அகழ்வாயின் மூலம்  கொடுமணலில் கண்டறிந்துள்ளார்கள். 

இப்படி திருப்பூரை சுற்றி வரலாற்றின் அம்சங்கள் புதைந்து கிடக்கிறது. பொள்ளாச்சி சந்தையும், காங்கயம் சந்தையும், திருப்பூர் பருத்தி சந்தையும் வர்த்தகத்தில் பெயர் பெற்றவைகளாகும். 

போராட்டத்தின் வழியில் 

இத்தகைய திருப்பூர் பல்வேறு நெருக்கடிக்களை கடந்த 40 ஆண்டுகளில் சந்தித்துதான்  இன்று ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் என பிரமாண்ட  வளர்ச்சியை சந்தித்துள்ளது. குடிநீர் பற்றாகுறை, சாயக்கழிவு பிரச்சனை, மின்தட்டுப்பாடு, அரசின் வரிக்கொள்கை, உயர் பணமதிப்பு செல்லாது, ஜி.எஸ்.டி, பருத்தியின் நிலையற்ற விலை, நூல்விலையுயர்வு, கண்டெய்னர் தட்டுபாடு, அண்டைநாடுகளின்  வர்த்தக ஒப்பந்தங்கள் என பல தடைகளை கடக்க  போராடி வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய ஆடை ஏற்றுமதித் துறையின் போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் 3 கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களுக்கான மிகப்பெரிய  ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவிற்கு கடந்த நிதியாண்டில் சுமார் ரூ 40,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். 

திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லுாதியானா மற்றும் ஜெய்ப்பூர்  அமெரிக்க சந்தையை நம்பியுள்ளன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பல லட்சம் தொழிலாளர்கள் இங்குவேலை செய்து வருகிறார்கள்.   கடந்த பல ஆண்டுகளாகவே, அமெரிக்க சந்தையின் வளர்ச்சி, இந்திய ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய்க்கு முக்கிய பங்களித்து வருகிறது. 

அமெரிக்க வரி பயங்கரவாதம்

ஏற்கனவே இந்திய ஆயுத்த ஆடைகளுக்கு அமெரிக்கா 16 சதவீதம்  வரியை விதித்துள்ளது. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை காரணம்  காட்டி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் 66  சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கதேசம், வியட்நாம், சீனா, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஆடைகள் போட்டித்தன்மையை இழக்கின்றன. இந்த  நாடுகள் 30 முதல் 35 சதவீத வரியை மட்டுமே எதிர்கொள்ளும்  நிலையில் இந்தியா 66  சதவீதம் வரியை எதிர்கொள்கிறது. அமெரிக்கா விதித்த 50% வரியால் மட்டும் மாதத்திற்கு ரூ.2,000 கோடி வர்த்தக இழப்பு திருப்பூருக்கு ஏற்படுகிறது

திருப்பூரில் அமெரிக்காவிற்கு 18000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பகுதி நிறுவனங்களும்,  ஐரோப்பிய மற்றும் இதர நாடுகளுக்கு  ஒரு பகுதி நிறுவனங்களும் ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை மாற்றும் போது அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இதர பின்னலாடை  நிறுவனங்கள்  போட்டியை சந்திக்க வேண்டி வரும். பாதிப்பும்  ஏற்படும் நிலை உள்ளது. 

இதனால் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சந்தை மாறுவதால்  நமக்கான இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது மீளமுடியாத நஷ்டத்தையோ ஏற்படுத்தும். திருப்பூரில் பனியன் தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும், சார்பு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பயங்கரமாக பாதிக்கப்படும். 

மேற்படி  அமெரிக்கவரி விதிப்பு என்பது குறிப்பிட்ட பொருளின் மீதான வரியாக இல்லாமல் ஒரு  தேசத்தின் மீதும், நகரத்தின்  மீது போடபட்டுள்ள பேரழிவு வரி ஆயுதமாகும்.  ஏற்கனவே அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின்பு,  2015  ஜனவரி முதல் ஜூன் வரை
யான காலத்தில் இந்திய ஏற்றுமதி அமெரிக்காவிற்கு 5.36 பில்லியன்  டாலராக இருந்தது. இதே காலத்தில் வியட்நாம்  8.59 பில்லியன் டாலராக 18.5 சதவீதம் கூடுதலாக இருந்தது.  இந்தியா மாதத்திற்கு 860 மில்லியன்  டாலர் அளவில் ஏற்றுமதி செய்து வந்த நிலையில்  2025 ஜூனில் 770 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. தற்போது வரிக் கொள்கையின்  காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது  ஏற்றுமதிக்கான ஆர்டர் கேட்பது சுமார் ரூ 4000 கோடி மதிப்பில் நின்றுபோயுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வேலையிழக்கும் தொழிலாளர்கள் 

திருப்பூரின்  பனியன் கம்பெனிகளில் தற்போதே சில நிறுவனங்களில் 50 சதவீதம் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள தொழிலாளர்களை எப்படி பாதுகாப்பது என புலம்புகிறார்கள். ஏற்கனவே இங்கு கணிசமான நிறுவனங்களில் நிரந்தரமற்ற தன்மையில் தொழிலாளர்கள்  ஒப்பந்த அடிப்படையிலும், பீஸ்ரேட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் ஒராண்டில் பல நிறுவனங்களுக்கு மாறிசென்று பணியாற்றும் சூழலே நிலவி வருகிறது. இதனால் சட்டசலுகைகளோ, உரிமைகளோ பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு  கிடைக்காத நிலையில் தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனங்களில் மட்டும் ஒரளவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உள்ளது. 


பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகளை பாதிக்கு பாதி கொடுத்து நிறுவன செயல்பாட்டை நிறுத்தி விட்டார்கள். நிறுவனம் நடத்தி நஷ்டம் ஆவதைவிட நிறுத்திவிட்டால் நஷ்டம் குறைவு என்கிறார்கள். ஆனால் இதை  நம்பி பணியாற்றிய தொழிலாளர்கள், நிறுவன அலுவலக  ஊழியர்கள்  நிலைதான் பெரும் கேள்விகுறியாகியுள்ளது. 

இத்தோடு ஜவுளி சார்ந்த கார்பெட், பெட்சீட், திரைசீலை போன்றவை அமெரிக்காவிற்கு 60 சதவீதம்  இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 1.5 பில்லியன்  டாலர் மதிப்பில் ஏற்றுமதி ஆகிறது. தற்போதைய அமெரிக்க வரி விதிப்பால் இந்த ஏற்றுமதியில் 70 சதவீதம் மட்டுமே  செல்லும்  நிலை ( 920 மில்லியன்  டாலர் அளவில் ) ஏற்பட்டுள்ளது.  இந்த துறையில் அதிகளவில் பெண்கள்  பணியாற்றி வந்த நிலையில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. 

தற்போதைய நிலையில் இந்திய அரசு, அனைத்து மூலப்பொருட்களுக்கும் இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதும்,  பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்து ஆயுத்த ஆடை தொழிலுக்கு பருத்தியை கட்டுபடியாகும்விலையில் வழங்க வேண்டும். மேலும் மின்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு என்பிஏ கால அவகாசத்தை நிலைமை சீரடையும்  வரை ஒத்தி வைக்க வேண்டும். உடனடி நிவாரணமாய் வட்டி மானியத்தோடு வங்கி கடன்களை நீண்ட கால தவணைகளில் வழங்குவது. ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பது. வேலை இழக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு நிதி உதவி, மற்றும் தேவையான உணவு பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. 

செ.முத்துக்கண்ணன்